கற்பனையூர்

கற்பனை யூரென்ற நகருண்டாம்-அங்குக்
கந்தர்வர் விளையாடு வராம்.
சொப்பன நாடென்ற சுடர்நாடு-அங்குச்
சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை

திருமணை யிதுகொள்ளைப் போர்க்கப்பல்-இது
ஸ்பானியக் கடலில் யாத்திரை போம்
வெருவுற மாய்வார் பலர் கடலில்-நாம்
மீளவும் நம்மூர் திரும்பு முன்னே

அந்நகர் தனிலோர் இளவரசன்-நம்மை
அன்பொடு கண்டுரை செய்திடுவான்;
மன்னவன் முத்தமிட் டெழுப்பிடவே-அவன்
மனைவியும் எழுந்தங்கு வந்திடுவாள்.

எக்கால மும்பெரு நேராகும்-நம்மை
எவ்வகைக் கவலையும் போருமில்லை;
பக்குவத் தேயிலை நீர் குடிப்போம்-அங்குப்
பதுமை கைக் கிண்ணத்தில் அளித்திடவே.

இன்னமு திற்கது நேராகும்-நம்மை
யோவான் விடுவிக்க வருமளவும்,
நன்னக ரதனிடை வாழ்ந்திடு வோம்-நம்மை
நலித்திடும் பேயங்கு வாராதே.

குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணங்காண்-அங்குக்
கோல்பந்து யாவிற்குமுயி ருண்டாம்
அழகிய பொன்முடி யரசிகளாம்-அன்றி
அரசிளங் குமரிகள் பொம்மையெலாம்.

செந்தோ லசுரனைக் கொன்றிடவே-அங்குச்
சிறுவிற கெல்லாம் சுடர்மணி வாள்
சந்தோ ஷத்துடன் செங்கலையும் அட்டைத்
தாளையுங் கொண்டங்கு மனைகட்டுவோம்.

கள்ளரவ் வீட்டினுட் புகுந்திடவே-வழி
காண்ப திலாவகை செய்திடுவோம்-ஓ!
பிள்ளைப் பிராயத்தை இழந்தீரே!-நீர்
பின்னுமந் நிலைபெற வேண்டீரோ?

குழந்தைக ளாட்டத்தின் கனவை யெல்லாம்-அந்தக்
கோலநன் னாட்டிடைக் காண்பீரே;
இழந்தநல் லின்பங்கள் மீட்குறலாம்-நீர்
ஏகுதிர் கற்பனை நகரினுக்கே


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(3-Feb-12, 12:37 pm)
பார்வை : 8


பிரபல கவிஞர்கள்

மேலே