நிலா பெண்ணே

வான் முகத்தில் நகக்குறி போல்
இருக்கின்ற நிலாப் பெண்ணின்
தேன் கிண்ண இதழ்களிலே முத்தமிட்டு-

இந்திய நாட்டுத்
தேசியக்கொடிதனையும் கையில்
கொடுத்து விட்டுத் திரும்பி வரும்
திறமைமிகு விஞ்ஞானத்தின் கரம் குலுக்கி
வாழ்த்துகின்றோம்.

புராணத்தில் வரும் சந்திரனோ;
குருவின் மனைவி தாரைக்கு;
புதியதோர் காதலன் என்று புராணமே
கூறி வணங்கும்!

பாம்புகள் இரண்டு ராகுவும் கேதுவும்
சந்திரனை விழுங்குமாம்;
பஞ்சாங்கம் அதனை "கிரகணம்'' என
விளம்புமாம்!

அனைத்தும் பொய், புளுகு, கற்பனையெனத்
தூக்கி அடித்து;

அமெரிக்க, ரஷ்ய, அய்ரோப்பிய
கூட்டமைப்பு நாடுகளின்
அணிவகுப்பில் இணைந்து அருஞ்சாதனை
புரிந்து விஞ்ஞானம்;
அசோக சக்கரக்கொடியை அம்புலியில்
நாட்டியது;

அறிவியக்க வரலாற்றில் ஓர் அற்புதமாம்;
அதுவும் நம் நாட்டில் என்பதிலோர் பெருமிதமாம்!


கவிஞர் : கருணாநிதி(3-Feb-12, 2:50 pm)
பார்வை : 34


மேலே