காதலித்துப் பார்

காதலித்துப் பார்!

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....

உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...

காதலித்துப்பார் !

தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...

காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...

காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...

இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...

வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...

இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்

காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்

காதலித்துப் பார்!

இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...

நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...

காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...

ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...

தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...

காதலித்துப் பார்!

சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...

அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...

அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..

அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே

செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...

காதலித்துப் பார்!


கவிஞர் : வைரமுத்து(3-Feb-12, 4:33 pm)
பார்வை : 213


பிரபல கவிஞர்கள்

மேலே