மழைப் பிரசங்கம்

யாரங்கே?
வாருங்கள்...

விண்ணுக்கும் மண்ணுக்கும்
தண்ணீர்ப்பாலம் பாருங்கள்

திரவ முத்துக்கள்
தெறிப்பது பாருங்கள்

யாசித்த பூமிக்கு
அந்த வானம்
வைரக் காசுகள்
வீசுவது பாருங்கள்

மழை மழை மழை
மழை மழை மழை

மண்ணின் அதிசயம் மழை

பூமியை வானம்
புணரும் கலை மழை

சமுத்திரம் எழுதும்
சமத்துவம் மழை

மழைபாடும்
பள்ளியெழுச்சியில்
ஒவ்வொர் இலையிலும்
உயிர் சோம்பல்முறிக்கிறது

இது என்ன...?

மழையை இந்த மண்
வாசனையை அனுப்பி
வரவேற்கிறதா?

என்ன...?
என்ன சத்தம்...?
சாத்தாதீர் ஜன்னல்களை
அது மழைக்கெதிரான
கதவடைப்பு

குடையா?
குடை எதற்கு?
அது
மழைக்கெதிராய்
மனிதன் பிடிக்கும்
கறுப்புக் கொடி

ஏன்...?
ஏனந்த ஓட்டம்?
வரம் வரும் நேரம்
தபசி ஓடுவதா?

இதுவரை நீங்கள்
மழையைப் பார்த்தது
பாதிக் கண்ணால்

ஒலி கேட்டது
ஒரு காதால்

போதும் மனிதர்களே

பூட்டுப் போட்டுப்
பூட்டுப்போட்டுப்
புலன்களே பூட்டாயின

திறந்து விடுங்கள்

வாழப்படாத வாழ்க்கை
பாக்கி உள்ளது

உங்கள் வீட்டுக்கு
விண்ணிலிருந்து வரும்
விருந்தாளியல்லவா மழை

வாருங்கள்

மழையை
நம் வீட்டுத்
தேநீருக்கழைப்போம்


கவிஞர் : வைரமுத்து(3-Feb-12, 4:43 pm)
பார்வை : 77


பிரபல கவிஞர்கள்

மேலே