கண்ணன் என் காந்தன்

கனிகள் கொண்டுதரும் - கண்ணன்
கற்கண்டு போலினிதாய்;
பனிசெய் சந்தனமும் - பின்னும்
பல்வகை அத்தர்களும்,
குனியும் வாண்முகத்தான் - கண்ணன்
குலவி நெற்றியிலே
இனிய பொட்டிடவே - வண்ணம்
இயன்ற சவ்வாதும்.

கொண்டை முடிப்பதற்கே; - மணங்
கூடு தயிலங்களும்,
வண்டு விழியினுக்கே - கண்ணன்
மையுங் கொண்டுதரும்;
தண்டைப் பதங்களுக்கே - செம்மை
சார்ந்துசெம் பஞ்சுதரும்;
பெண்டிர் தமக்கெல்லாம் - கண்ணன்
பேசருந் தெய்வமடீ!

குங்குமங் கொண்டுவரும் - கண்ணன்
குழைந்து மார்பெழுத;
சங்கையி லாதபணம் - தந்தே
தழுவி மையல் செய்யும்;
பங்கமொன் றில்லாமல் - முகம்
பார்த்திருந் தாற்போதும்;
மங்கள மாகுமடீ! -பின்னோர்
வருத்த மில்லையடீ!


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(3-Feb-12, 5:48 pm)
பார்வை : 19


மேலே