ஜய பேரிகை

ஜய பேரிகை கொட்டடா - கொட்டடா
ஜய பேரிகை கொட்டடா!

பயமெனும் பேய்தனை யடித்தோம் - பொய்ம்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்.

இரவியி னொளியிடைக் குளித்தோம்-ஒளி
இன்னமு தினையுண்டு களித்தோம்;
கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம்.

காக்கை, குருவி எங்கள் ஜாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம்.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(3-Feb-12, 5:52 pm)
பார்வை : 22


பிரபல கவிஞர்கள்

மேலே