சுதந்திரப் பள்ளு

விடுதலை! விடுதலை! விடுதலை!

பறைய ருக்கும் இங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை!
பரவ ரோடு குறவ ருக்கும்
மறவ ருக்கும் விடுதலை!
திறமை கொண்ட தீமை யற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே.

ஏழை யென்றும் அடிமை யென்றும்
எவனும் இல்லை, ஜாதியில்
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தி யாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி
மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநி கர்ச
மானமாக வாழ்வமே.

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமை யைக்கொ ளுத்துவோம்;
வைய வாழ்வு தன்னில் எந்த
வகையி னும்ந மக்குளே
தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்க ளோடு பெண்களும்
சரிநி கர்ச மான மாக
வாழ்வம் இந்த நாட்டிலே


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(3-Feb-12, 6:12 pm)
பார்வை : 24


மேலே