குண்டூசி!!

என்னைப்போல் இளைத்துப் போனாய்
இணைப்புக்குத் தேவை யானாய்
திண்ணைப் போர் புரிந்துகொண்டே
சேல்களை ஆட்டும் பெண்ணின்
கண்ணைப் போல் கூர்மையான
கழுத்திலாத் தொப்பிக்காரன்
மின்னல்போல் மறைந்து துன்பம்
விளைக்கும் நீ இரும்புக்குச்சி

குண்டூசி என்ற பேரைக்
கொடுத்தது சரியா? காமம்
கொண்டாடும் நடிகை வீட்டை
கண்ணகி இல்லம் என்று
சொன்னாலும் சொல்லலாம். ஆனால்
சுருங்கிய ஊசி உன்னை
குண்டூசி என்றே இங்கே
கூறுதல் தவறே? ஆமாம்!


கருப்பாணி பெற்ற பிள்ளை
காகிதக் களத்துக் கத்தி
ஒருசிலர் பல் வீட்டிற்கே
ஒட்டடை போக்கும் குச்சி
செருப்பாணி போல தைத்துச்
சிறுதாளை எல்லாம் ஒன்றாய்
உருவாக்கும் உன்னை தூய
ஒற்றுமைச் சின்னம் என்பேன்


விடையிலாக் கேள்வியாக்கி
விலையிலாச் சரக்காய் என்னைப்
படித்தவன் பாவி; உன்னைப்
படைத்தவன் ஞானி; இங்கே
உடையினை அணிந்துகொண்ட
உயிர்ப்பின மனிதர்க் கென்றும்
எடையிலே குறைந்து போனாய்
இயல்பிலே உயர்ந்து போனாய்

வெறுப்பினால் உன்னை தூர
வீசுவார் ஆமாம்! அந்தக்
கிறுக்கற்குத் தேடும் போது
கிடைக்காமல் ஆட வைப்பாய்!
உறுதியாய் உரைப்பேன் இங்கே
உனக்குள தன் மானத்தில்
அறுபதில் ஒரு பங்கேனும்
ஆமிந்த மனிதர்க் கில்லை


கவிஞர் : வைரமுத்து(29-Feb-12, 3:24 pm)
பார்வை : 50


பிரபல கவிஞர்கள்

மேலே