கற்பனைகளின் கல்லறை

பிடுங்கப்பட்ட இறகுகளில்,
மிஞ்சிய பறவைகளை,
புதைக்க வேண்டும்.
தோண்டுகிறேன்.

தூரத்தில் பெய்யும் மழை,
ஈரத்தில் எனதுடல்,
துடைக்க வேண்டும்.
தோண்டுகிறேன்.

நிசியிலிருந்து அந்தி வரை
நீள்கிறது கனவுகள்.
மறக்க வேண்டும்.
தோண்டுகிறேன்.

ஒற்றையடிப் பாதையில்,
எறும்புகளின் லட்சத்தடங்கள்,
அழிக்க வேண்டும்.
தோண்டுகிறேன்.

ஒரு மரச் சோலையில்
கிளை தாவும் குரங்குகள்,
துரத்த வேண்டும்,
தோண்டுகிறேன்.

வானவில் எண்ணங்களை,
கார்வண்ண மேகங்களால்,
மறைக்க வேண்டும்.
தோண்டுகிறேன்.

தோண்டத் தோண்ட,
சவக்குழி சுருங்குகிறது.
மிகவும் பெரிதுதான்,
கற்பனைகளின் உலகம்.

எழுதியவர் : ஈஸ்வரன் ராஜாமணி (13-Nov-13, 7:15 pm)
பார்வை : 249

மேலே