ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்

நகர்புறங்களில் கொசுத் தொல்லைகளுக்கு ஆளாகாதவர்களே கிடையாது. பெட்ரூம் முதல் பாத்ரூம்வரை ஏ.சி. பயன்படுத்துபவர்கள் மட்டுமே இதில் இருந்து தப்பிக்கின்றனர். மற்றவர்கள், கொசுக்களிடம் தினமும் கடி வாங்கிக் கொள்கின்றனர்.

அப்படி கடி வாங்கப்போய், சில நோய்களும் இலவசமாக வந்துவிடுவதால், அதில் இருந்து தப்பிக்க கொசுவர்த்திச்சுருள், கிரீம் மற்றும் மேட்களை பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இப்படி பயன்படுத்துவது ஆபத்தில்போய்தான் முடியும் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்களும், விஞ்ஞானிகளும்!

கொசுவர்த்திச் சுருள்களிலும், மேட்களிலும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பல்வேறு ரசாயனக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரசாயனங்களின் அடர்த்தி, நாம் இக்காற்றை சுவாசிக்கும் கால அளவு, அறையினுள் வரும் புதிய காற்றின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து இதனால் நமக்கு ஏற்படும் தீங்குகளின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.

பொதுவாக மாலைநேரங்களில்தான் கொசுக்கள் வீடுகளுக்குள் படையெடுக்கும். அந்தநேரத்தில் கதவு, ஜன்னல்களை பூட்டிவிடுவது வழக்கம். அப்படிச் செய்வதால், வீட்டிற்குள் புதிய காற்று வருவது தடை செய்யப்பட்டு விடுகிறது.

காற்று வர வழியில்லாமல் முற்றிலும் அடைபட்ட நிலையில் உள்ள வீட்டின் அறைகளுக்குள் விளக்குகளை எரிய விடுவது, சமைப்பது, அவைகளுக்கு மத்தியிலேயே வீட்டில் உள்ள அனைவரும் சுவாசிப்பது... போன்றவற்றால் பிராண வாயுவான ஆக்ஸிஜனின் அளவு குறைந்துபோய் விடுகிறது.

இந்த சூழ்நிலையிலும், வீட்டிற்குள் புகுந்துவிடும் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க கொசுவர்த்திச் சுருள், மேட் ஆகியவற்றை பயன்படுத்துகிறோம். இப்படிச் செய்வதால், அவற்றில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையும், தீங்கு ஏற்படுத்தும் வாயுக்களும் மட்டுமே வீட்டிற்குள் அதிகம் உள்ள சூழ்நிலை ஏற்படுகிறது. ஆக்ஸிஜனின் அளவு மிகவும் குறைந்துபோய் விடுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் சுவாசிக்கும்போது, அவர்களின் உடலுக்குள்ளும் காற்றின் வழியாக நச்சுத்தன்மை புகுந்து விடுகிறது.

முன்னறிவிப்பு இன்றி உடலுக்குள் புகுந்த இந்த நச்சுத்தன்மையை விரட்ட உடலானது எதிர்வினை புரிகிறது. அதன் தொடர்ச்சியாக, ஜலதோஷம், சளி பிடித்தல், காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது. சிலருக்கு அலர்ஜி என்கிற ஒவ்வாமையும் இதனால் ஏற்பட்டு விடுகிறது. அத்துடன், மேலும் பல பாதிப்புகளையும் நம் உடல் ஏற்க வேண்டிய நிலை உருவாகிவிடுகிறது.

கொசுவை விரட்டுவதற்காக ஒருவர் தொடர்ந்து கொசுவர்த்திச்சுருள், மேட் ஆகியவற்றை பயன்படுத்தி வந்தால், அவருக்கு நுரையீரலில் ஒருவித ஒவ்வாமை ஏற்படுகிறது. இதனால் நுரையீரல் முழுமையாக விரிவடையாமலும், அதன் கொள்ளளவுக்கு உரிய காற்றை எடுத்துக்கொள்ள இயலாமலும் போய் விட வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகளில் நிரூபித்துள்ளனர்.

கொசு மேட்டில் இருந்து வெளிவரும் புகையை அப்போது பிறந்த அல்லது பிறந்து சில மாதங்களே ஆன பிஞ்சுக் குழந்தைகள் சுவாசித்தால், அவர்களுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி எச்சரிக்கிறது லக்னோ பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு.

மும்பையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, கொசு விரட்டியில் உள்ள டயேக்சின் புற்றுநோயை உருவாக்கக்கூடியது. அலெத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்ல மெல்ல இழக்கச் செய்யும் தன்மை கொண்டது.

இப்படியெல்லாம் பயமுறுத்தினால், நாங்கள் கொசுக்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி என்று கேட்கிறீர்களா?

அதற்கும் வழி இருக்கிறது. அந்த வழி கொசு வலைக்குள் புகுந்து கொள்வதுதான்!

எழுதியவர் : கணேஷ் கா (13-Jan-14, 9:16 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 126

மேலே