செல்போன் தொல்லை இல்லாமல் இருக்க

இன்றைக்கு செல்போன் இல்லாத இளம்பெண்களே இல்லை என்று சொல்லலாம். எங்கே போனாலும் அங்கே, பெண்கள் காதில் செல்போனை வைத்து பேசிக்கொண்டிருப்பார்கள். அது முக்கியமானதாகவும் இருக்கலாம்... முக்கியமில்லாத விஷயமாகவும் இருக்கலாம்.

விதவிதமான... வண்ண வண்ண... கலரில்... நவீன டெக்னாலஜியுடன் கூடிய செல்போன்கள்தான் டீன் ஏஜ் கன்னியரின் பேவரைட்! பெண்கள் இருக்குமிடத்தில் எல்லாம் செல்போன் கண்டிப்பாக இருக்கும்! தனியாக இருக்கும் பெண்களுக்கு செல்போன் ஒரு இணைபிரியா தோழனாகவும், தோழியாகவும் நட்புறவாடுது என்பதே உண்மை!

சரி... அப்படி என்னதான் பேசுவார்கள்? என்ன மதியம் சாப்பிட்டாச்சா...?, காலையில... ரொம்ப நேரமா காத்திக்கிட்டிருந்தியே... பஸ் வந்துச்சா?, உனக்கு வயிறு வலின்னு சொன்னீயே என்னாச்சு? இப்படி பல விசாரிப்புகளும், வேலை தொடர்பாக.... தொழில் சம்பந்தமாக... குடும்பம் குறித்து விசாரணைகளும், ஆலோசனைகளும்... மற்றும் பிற விஷயங்களும் இடம்பெறும் என்கின்றனர் உளவியல் ஆய்வாளர்கள்!

செல்போன் வைத்திருந்து பழகியவர்கள், ஒரு நாள் செல்போன் இல்லாவிட்டாலும் ஏதோ வலது கையே இல்லாதது போல் ரொம்ப வருத்தப்படுவார்கள். அதேபோல், பெற்றோர் எங்கேயாவது வெளியில் செல்லும்போது தங்கள் குழந்தைகள், பெண் பிள்ளைகளை வீட்டில் இருக்க வைக்கும் சூழ்நிலையில் செல்போனை கையில் கொடுத்துவிட்டு வந்தால் எந்த நேரத்திலும் பேசலாம் என்ற பாதுகாப்பு உணர்வில் இருக்கின்றனர்.

பெண்களுக்கு தேவை என்றால் செல்போன் வாங்கிக் கொடுப்பதில் தப்பில்லை. ஆனால் அதன்மூலம் ஆபத்துக்களும், பிரச்சினைகளும் இருக்கின்றன என்பதை அவர்களுக்கு உணர்த்துவது நல்லது. தேவையில்லாமல் மிஸ்டு கால் வந்தால் அதை எப்படி தவிர்ப்பது... யாராவது தப்பாக பேசினால் எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து அவர்களுக்கு தெளிவாக தெரியவைப்பது மிகவும் நல்லது.

மேலும் செல்போன் என்பது ஒரு தகவல் தொடர்பு சாதனம் மட்டுமே... அது பொழுது போக்கும் கருவியல்ல... என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். பெற்றோர் சொல்லி புரிய வைக்கலாம். குறிப்பாக, பெண்களுக்கு கேமரா செல்போன் தேவையேயில்லை! ஏனென்றால் அது பலவித சிக்கல்களை ஏற்படுத்தும்.

உதாரணமாக... கேமரா செல்போன் வைத்திருக்கும் ஒரு இளம்பெண் தோழிகளுடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் மகளுக்கே தெரியாமல், அவளுடைய தோழி செல்போனில் யாரையாவது படம் பிடிக்கலாம். இதனால் உங்கள் மகளுக்கு ஏதாவது பிரச்சினைகள் தோன்றலாம். அல்லது கேமரா செல்போனை பயன்படுத்துவதால் அடுத்தவர்கள் அடிக்கடி அதைக் கேட்டு அன்புத் தொல்லை கொடுக்கலாம். அதனால் கேமரா செல்போனை தவிர்ப்பது சாலச் சிறந்தது.

அதேபோல், செல்போனில் அடிக்கடி ஏற்படும் சிக்கல் என்றால் அது மிஸ்டு கால். எங்கே... எப்போது... யார் மிஸ்டு கால் பண்ணினாலும் உஷாராக இருக்குமாறு உங்கள் வீட்டுப் பெண்களிடம் சொல்லி வையுங்கள். உங்களுடைய செல்ல மகள், செல்போனை அடிக்கடி யூஸ் பண்ணும்போது... யாரிடம் பேசுகிறாள்... என்ன பேசுகிறாள் என்பதை கவனியுங்கள்... அது தவறாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக அறிவுரை கூறி கண்டிப்பது நல்லது. ஆனால் எக்காரணம் கொண்டும் செல்போனை பயன்படுத்துவதை நிறுத்தி விடாதீர்கள். ஏனென்றால் இந்த சின்ன விஷயம் அவளுடைய மனதையே பாதித்துவிடும்.

வீட்டில் இருக்கும்போது... நடுராத்திரியில் செல்போனில் பேசும் போது மகளிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்து அவளை கண்காணியுங்கள். செல்போனுக்கு எப்போதும் ப்ரீபெய்டு கார்டுகளை பயன்படுத்த செய்யுங்கள். குறிப்பாக அதற்குரிய பணத்தை அவளிடமே கொடுத்து கட்டச் சொல்லுங்கள். அப்போதுதான் பணத்தின் அருமை அவளுக்குத் தெரியும்.

வீட்டில் தனித்தனியாக செல்போன்கள் வைத்திருப்பதை தவிருங்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தர் செல்போனை பயன்படுத்தினால் யாருக்கு யாரிடம் இருந்து அழைப்புகள் வருகின்றன என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம். அடிக்கடி குடும்ப உறுப்பினர்கள் செல்போன்களை மாற்றிக் கொள்வது சிறந்தது.

தற்போது யாரை சந்தித்தாலும்... உங்களுடைய செல்போன் நம்பர் என்ன? என்று கேட்கும் பழக்கம் உள்ளது. இந்த பழக்கத்தில் யார் கேட்டாலும்... கேட்பவரின் குணநலன், பண்பு தெரிந்து நம்பரை சொல்லுமாறு உங்களுடைய மகளுக்கு அறிவுறுத்துங்கள்.

அதேபோல், பொதுமக்கள் கூடும் இடங்களான... பஸ், ரெயில் நிலையம், நடைபாதை, ரோடுகளில் சத்தமாக பேசுவது கூடாது. பொது இடங்களில் நின்றுகொண்டு, நம்பர் சொல்லுவது, முகவரியை சொல்வதும் கூடாது. சாலையை கடக்கும்போது... ரோட்டில் நடந்து செல்லும்போது செல்போனில் பேசுவதை முற்றிலுமாக தவிர்க்கவும். குறிப்பாக, வாகனங்கள் ஓட்டிக் கொண்டே செல்போனில் பேசுவது கூடவே கூடாது.

ஏனென்றால், ஒருவருடன் செல்போனில் பேசும்போது நமக்கு அது குறித்த கற்பனைகள் தோன்றும். இதனால் நம்மை நாம் மறந்து விடுவோம். இதனால் விபத்துகளும், வழிப்பறிகளும் நடக்க வாய்ப்பு உண்டு. அதேபோல், சிலர் ரெயில்வே டிராக்கில் நடந்து செல்லும்போது செல்போனை பயன்படுத்துவது சமயங்களில் உயிருக்கே உலைவைக்கும் பழக்கம்!

எழுதியவர் : கணேஷ் கா (13-Jan-14, 9:27 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 222

சிறந்த கட்டுரைகள்

மேலே