கண்கள் இரண்டால்

"ஏண்டா மச்சி.. ஜாலியா ஒரு நாள் கிளாஸை கட்டடிச்சுட்டு அங்க போய் ஓபி அடிக்கலாம்னு முடிவு பண்ணிட்ட இல்லியா" -நண்பன் கோவிந்த்.

"இல்லடா கிளாஸைக் கட்டடிக்கணும்னா எதுக்குடா அங்க போய் உட்காரணும்.. நீட்டா தியேட்டர் போயிட மாட்டேனா. அட்டென்டண்ட்ஸ் லேக் ஆனாதான் பிராப்ளம் இல்லியே. காசு கட்டினா முடிஞ்சது மேட்டர்"

மீண்டும் தொடர்வேன் என என் வாயையே பார்த்துக் கொண்டிருந்தான் கோவிந்த்.

"உண்மையிலேயே அந்தப் பசங்களுக்கு உதவி செய்யணும்னுதான் மச்சான் போறேன். இந்த மாதிரி கண் தெரியாத பசங்களுக்கும் இதே பாடமுறை, தேர்வுமுறை வெச்சிருக்கறதே தப்புடா மச்சான். அவங்களால நம்ம அளவுக்கு படிக்க முடியுமா? இல்ல இந்த மாதிரி வேற ஒரு உதவியாளர வெச்சி தேர்வு எழுதினா... அதுல அவங்களோட திறமை எப்படி வெளிப்படும்? அதுவும் நான் அந்தப் பையனுக்கு உதவி செய்யறதா ஒத்துக்கிட்டது கணிதப் பாடத்துக்கு. எனக்கு கணக்கு நல்லா வரும்னு உனக்கே தெரியும். அதான்... நீட்டா அந்தப் பையன கொஞ்ச நேரம் சும்மா உக்காரு தம்பின்னு சொல்லிட்டு. நானே எக்சாம் எழுதிக் கொடுத்திட்டு வரலாம்னு ஐடியாடா"

"என்னவோடா கண் தெரியாத ஒரு பையனுக்கு ஹெல்ப் பண்றங்கற. அதனால உன்ன ஓட்ட முடியலை. போய்ட்டு வா. முடிஞ்ச வரை நல்லா ஹெல்ப் பண்ணு. சொதப்பி வெச்சி.. பாஸாக இருந்த பையனை ஃபெயிலாக்கிடாத" என்றான். நான் முறைத்தேன். சிரித்தான்.

"போடா போடா.. சேவை செய்யறவன் கோவிச்சுக்கக் கூடாதுடா" என்றான்.

நான் கல்லூரியில் பி.எஸ்.சி., இரண்டாமாண்டு மாணவன். கண் தெரியாத மாணவர்களுக்கு நடத்தப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக, அந்த மாணவர்களுக்கு உதவுவதற்காக ஏதாவது கல்லூரியில் இருந்து மாணவர்களைக் கேட்பார்கள். இந்த வருடம் எங்கள் கல்லூரியிலும் கேட்டார்கள். அதற்குப் போவதாய் ஒத்துக் கொண்டேன் நான். இதோ நாளை அங்கு செல்லப் போகிறேன். கண்ணாமூச்சி விளையாட்டுல கொஞ்ச நேரம் கண் கட்டியிருந்தாலே நமக்கு எப்படா அந்தத் துணியை அவிழ்ப்போம்னு ஆயிடுது.. ஆயுள் முழுக்கக் கண்கள் கட்டப்பட்ட அந்த சிறுவனோட நிலைய நினைச்சுப் பாருங்க. பாவம் அந்தக் கண் தெரியாத பையன் என்ன படிச்சிருக்க முடியும். அவனுக்கு உதவி செய்ய நான் ஒத்துக் கொண்டது சரிதானே.

அந்த அறையில் தரையில் பத்தடி இடைவெளியில் அனைத்து மாணவர்களையும் அமரச் செய்திருந்தனர். அவர்கள் செய்கைகளைப் பார்க்கும் போதே மிகவும் பரிதாபமாக இருந்தது. அந்த மாணவர்களில் சிலர் தலையை நேராக வைக்கக் கூட சிரமப்பட்டுக்கொண்டு இருந்தனர்.

என்ன வாழ்க்கைடா இது. இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா?

அப்படி ஒருவன் இருந்தால்.. ஒரு பாவமும் அறியாத இந்தப் பிஞ்சுகளுக்கு இந்த நிலை நேர்ந்திருக்குமா? மனசு கணத்தது...

"சார்.. சார்.."

ஒரு ஆசிரியை என்னை சார் என அழைத்து என் நினைவைக் கலைத்தார்..

ஆ நம்மளயா சார்னு கூப்பிடறாங்க.... ஒரு நிமிசம் தடுமாறினேன்...

"ம் சொல்லுங்க"

"சார் இவன் பேரு ஆறுமுகம். இவனுக்குதான் நீங்க எக்ஸாம் எழுதித் தரணும்." என்று என்னிடம் சொன்னவாறே.

"ஆறுமுகம் சாருக்கு வணக்கம் சொல்லு"

"வணக்கம் சார்"

"வணக்கம்ப்பா சார்னு கூப்பிடாத அண்ணான்னு கூப்பிடு"

"சரிங்கண்ணா" என்றான் சிரித்துக் கொண்டே. அந்த சிரிப்பை என்னால் ரசிக்க முடியவில்லை. ஏனோ வலித்தது மனது.

"சரிங்க சார் நீங்க அங்க போய் உக்காருங்க. தரைலதான் சார் உக்காந்து எக்ஸாம் எழுதணும். கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்குங்க சார்." என்று என்னிடம் சொல்லிவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் அவனிடம் திரும்பினார்.

"என்ன ஆறுமுகம் எல்லாத்தையும் மறக்காம எடுத்துக்கிட்டு வந்திட்டியா"

"எடுத்திட்டு வந்திட்டேன் மேடம். நான் ரெடியா இருக்கேன் மேடம்" என்றான்.

அந்தப் பையனை பார்க்கப் பாவமாக இருந்தது. பாவம் இந்தப் பையனுக்கு நாம் நிச்சயம் உதவ வேண்டும். பத்தாம் வகுப்பு கணிதப் புத்தகத்தை இந்த மூன்று நாட்களாகப் புரட்டி வந்தது நல்லதாய் போயிற்று என நினைத்துக் கொண்டேன்.

தேர்வு நேரம் ஆரம்பித்தது.. அந்தச் சிறுவன் மிகவும் துடிப்பானவனாக இருந்தான்.. தேர்வுக்குத் தேவையான காம்பஸ், பென்சில், பேனா, ரப்பர் எல்லாத்தையும் அவன் கைக்கு வசதியான இடத்தில் எடுத்து வைத்தான்.

"தம்பி இருப்பா.. நான் அதெல்லாம் எடுத்துக்கறேன்பா.. நீ ஏன் சிரமப்படறே"

"உட்காந்து செய்யற இந்த வேலையே சிரமமா? என்னண்ணா சொல்றீங்க. என்னால பாக்க மட்டும்தாண்ணா முடியாது. நான் சொல்றத மட்டும் செய்யிங்கண்ணா... இல்லைன்னா மூனு மணி நேரம் பத்தாது." என்றான்.

பொட்டிலடித்தார் போல் என்னைத் தாக்கியது அவன் கேள்வி.

கேள்வித்தாள் கொடுக்கப்பட்டது.

"அண்ணா அதுல வலது மூலையில. எல்.ஆறுமுகம்னு என் பேர் எழுதுங்க. அப்புறம். ஆன்ஸர் சீட்ல அதே மாதிரி வலது மூலையில. என் பெயர், என்னோட ரிஜிஸ்ட்ரேசன் நம்பர், பாடம், தேதி இதெல்லாம்.. அடுத்தடுத்து இருக்கும்" அதை ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணிடாம கவனமா ஃபில் பண்ணுங்கண்ணா.."

என்ன இவன் இதையெல்லாம் எனக்கு சொல்லித் தருகிறான் என சற்றே எரிச்சலுற்றேன்.

"அப்புறம் கேள்வித்தாள்ல மேல கணிதவியல்னு போட்ருக்கா. பாத்தீங்களா. அதுக்கு கீழ என்ன இருக்குன்னு படிங்கண்ணா.."

ரொம்ப ஓவரா போறானே. இந்தப் பையன். எதை எதைல்லாம் பாக்க சொல்றான் பார் இந்தப் பையன். என என் ஈகோ அந்தப் பையனைத் திட்டியது.

நான் மௌனமாக கேள்வியைப் படிக்க ஆரம்பித்தேன்.

"அண்ணா என்ன பண்றீங்க"

"கேள்வியப் படிச்சிட்டு இருக்கேண்டா"

"அண்ணா... நீங்களே படிக்கறதுல என்ன யூஸ்ணா? எனக்கு படிச்சுக் காமிங்க. அதுக்கு நான் பதில் சொல்றேன். சொல்லச் சொல்ல எழுதுங்க. சுறுசுறுப்பா இருங்கண்ணா. ரொம்ப ஸ்லோவா இருக்கீங்க நீங்க. டைம் பத்தாம போயிடும் அப்புறம்"

எனக்கு ஆத்திரம் எல்லை மீறியது. கட்டுப்படுத்திக் கொண்டே அவனுக்கு படித்துக் காட்ட ஆரம்பித்தேன். படிக்கப் படிக்கவே இதற்கு என்ன பதில் வரும் என யோசிக்க ஆரம்பித்தேன்.

படித்து முடிக்கும் முன்பே சட்டென பதில் வந்தது அவனிடம் இருந்து.

அந்த நிமிடம் முதல் முழுமையாக என்னை ஆட்சி செய்தான். என்னால் ஒரு புள்ளியைக் கூட கூடுதலாக அந்த விடைத்தாளில் வைக்க முடியவில்லை. அரை மணி நேரம் முன்னதாகவே தேர்வை முடித்தான்.

"சரிண்ணா இப்ப பேப்பரையெல்லாம்.. ஒழுங்கா ஆர்டர் மாறாம அடுக்குங்கண்ணா.. மாத்திக் கட்டிடாதீங்க.. பாத்து ஜாக்கிரதையா செய்ங்க"

அவன் மொழி புரிய ஆரம்பித்திருந்தது. அதனால் இப்போது கோபம் வரவில்லை.

கண் தெரியும் என்னைவிட அவன் வேகமாக செயல்பட்ட விதம். எனக்குத் தேவை உன் கண்தாண்டா... உன் மூளையில்லை என்பதாய் அவன் நடந்துக் கொண்ட வேகம் எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

நேரத்தை சரியாய் கணக்கிட்டு அவன் செயல்படும் விதம் கண்டு என்னை நினைத்து நானே முதல் முறையாய் வெட்கப்பட்டேன்.

என் அகங்காரம், கண் தெரியாதவன்தானே இவனுக்கு என்ன தெரியப் போகிறது நாம்தான் அவனுக்காக பாஸாக்க வேண்டும் என்று நினைத்திருந்த என் இறுமாப்பு என என் கண்ணைக் கட்டியிருந்த விசயங்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் உதிர்ந்து விழ ஆரம்பித்தன.

எனக்கு கண் தெரிய ஆரம்பித்தது.

எழுதியவர் : கணேஷ் கா (2-Feb-14, 12:53 am)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 279

மேலே