தூக்கம் வரமே

கட்டாந் தரையில்
கால்நீட்டிப் படுத்தவுடன்
கண்ணயர்ந்து விடுவர் சிலர் !

கயிற்றுக் கட்டிலில்
களைப்புடன் சாய
கணநேரத்தில் உறங்குவர் சிலர் !

பத்தமடை பாய்விரித்து
படுத்தசில மணித்துளியில்
பரமசுகமாய் தூங்குவர் சிலர் !

நிம்மதியாய் தலைசாய்க்க
நித்திராதேவி அணைத்திடவே
நிமிடத்தில் துயில்வர் சிலர் !

பஞ்சணையில் படுத்தாலும்
பள்ளியறையே நரகாய்
புரண்டுபுரண்டு கிடப்பர் சிலர் !

பட்டுமெத்தை விரித்தாலும்
பகட்டாகத் தெரிந்தாலும்
படுக்கையேபகையாய் நினைப்பர் சிலர் !

விடியவிடிய கவலையில்
விழிமூடாமல் கடுப்புடனே
விழித்திருப்பர் கொட்டகொட்ட சிலர் !

தூங்கும்போது கரடிபோல்
தூக்கலான குறட்டைஒலியால்
துயில்வோரை எழுப்புவர் சிலர் !

நினைத்தவுடன் காசுகொடுத்து
நித்திரை வாங்கமுடியுமோ ?
உழைத்துக் களைக்கையில்
உறக்கம் சொர்க்கமே !

தூக்கம் இன்றேல்
ஊக்கம் இல்லை
துக்கம் மறக்கும்
தூக்கம் வரமே ....!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (20-Mar-14, 7:42 am)
பார்வை : 3398

மேலே