கண்ணீர் தொட்டு கவிதை எழுது - வினோதன்

குருதிக்குடுவை நிறைய
பெருங்குணம் சுமந்தபடி
சமூகம் நோக்கினேன்,
தட்டிவிட்டபடி - கையில்
சாக்குப்பை திணித்து
பணம் பொறுக்கும்படி
பரிவின்றி பணிக்கப்பட்டேன் !

உயர்கல்வி உடுத்தி
தெரு கடக்கும்போது
அழுத்தமாய் சிரித்தது
அழுக்குச் சமூகம் - நீ
யாரென்பதை - நின் முகம்
தவிர்த்து - பண முகாமே
தீர்மானிக்கும் என்றபடி !

என் திறமைகளை
அளவீடு செய்ய மறுக்கும்
செவிட்டு உலகம்
செருப்பை உற்றுநோக்கி
என்னை கணிக்கிறது !

ஏறி-இறங்கிய உடுப்பற்ற
நான் - ஏற-இறங்கவே
பார்க்கப் படுகிறேன் - என்
அழுக்கற்ற அகம் பொசுங்க
பொய்த்தூய்மை தேடப்படுகிறது !

உண்மையை மடித்து
முதுகுக்குப்பின் ஒழித்து
போலிப் புன்னையோடு
காசோடு காதல்புரி - உன்
நேர்மைக்கு தீயிட்டுவிட்டு !

பணக்கார காதல்களுக்கு
வாயிற்சீட்டும் - ஏழைக்
காதல்களுக்கு வாய்ப்பூட்டும்
பட்டுவாடா செய்யப்படுகிறது
மேலும்சில காரணிகளோடு !

எங்கு திரும்பினும்
முகமதிப்பை மிதித்தபடி
பணமதிப்பை கேட்கும்
சமூகம் - எனைத்தள்ளிய
இடம்தோறும் - எனைப்போன்றே
பணப் பொறுக்குப் போருக்கு
பழக்கபடாத முகங்கள் !

ஓர் நாள் விடியும்
என்ற நம்பிக்கையை
நெஞ்சிலும் - வறுமையை
முதுகில் சுமந்தபடி
வானவில் ரசிப்பதெப்படி...?
நிறைய அழு - கண்ணீர்
தொட்டு கவிதை எழுது !!!

- வினோதன்

எழுதியவர் : வினோதன் (16-Apr-14, 5:27 pm)
பார்வை : 136

மேலே