நகைச்சுவை 108
குப்புசாமி ஒரு தீவிர சிவ பக்தன். பல நாள் கடுந்தவமிருந்தான்.
திடீரென ஒருநாள் சிவபெருமான் அவன்முன் தோன்றி, "பக்தா ! உன் பக்தியைக் கண்டு மெச்சினோம். கலியுகத்தில் உன்போன்ற பக்தர்கள் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. என் இதய பீடத்தில் வீற்றிருக்கும் சக்தி தேவியும், சிரசில் வாழும் கங்கா தேவியும் உன் பக்தியை கண்டு வாழ்த்துக்கள் வழங்கச் சொல்லி இருக்கிறார்கள். நான் என்ன வரம் தர வேண்டும் உனக்கு" எனக் கேட்டார்.
சற்றும் தயங்காமல் குப்புசாமி, "எனக்கு சாவே வரக்கூடாது" எனக் கேட்டான்.
இறைவனும் மகிழ்ச்சியுடன்,"ததாஸ்து" எனக் கூறி மறைந்தார்.
குப்புசாமி மகிழ்ச்சியுடன் வீடு திரும்பும் வழியில் அவரது பழைய நண்பர் ஒருவரை சந்தித்தார். ஆனால் குப்புசாமியின் பெயர் அவருக்கு ஞாபகம் வரவில்லை. எனவே, குப்புசாமியைப் பார்த்து, என் பெயர் அனந்து. நீங்கள் குப்புசாமி தானே" என்று கேட்கவும், குப்புசாமி," என் பெயர் குப்புமி" என்றார்.
எத்தனை முறைகள் முயன்றும் அவரால் குப்புமி என்று தான் சொல்ல முடிந்தது.
"சா" வரக்கூடாது என்ற வரம் பொய்க்கவில்லை.
குப்புமி எப்படி சாதம் வேண்டும் எனக் கேட்பாரோ ..
கிருஷ்ணா ! குருவாயூரப்பா !!
நன்றி : மேஜர் லோகநாதன் அவர்கள் !