அவள் எனக்கு வேண்டும்-11

“ம் ம்”, என்று புன்னகை பூத்தவனை அம்மா ஓடி வந்து ‘சிவா!’ என்று கையை பிடித்துக்கொண்டார்.

சிவாவின் அப்பா மனைவியை பார்த்து, “சரிம்மா.. நாங்க போயிட்டு வர்றோம்”,என்று சொல்லி கிளம்பினார்கள்.

“சரி சிவா! இப்போ வீட்டில் ஒரு பொருளும் இல்லை. முதலில் ஷாப்பிங் போலாமா?”, என்றார்.

“ம் ம் சரிப்பா”, என்று இருவரும் பேசிக்கொண்டே சிவா வேலை செய்யும் மருத்துவமனைக்கு வந்தனர்.

“என்னப்பா இங்க”, என்று அவன் இழுக்க

“ஷ் வா”, என்று அவனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

வழியில் தென்பட்ட சிஸ்டர் இருவருக்கும் ஒரு புன்னகை கொடுத்துவிட்டு சென்றாள்.

ஸ்பெஷல் வார்டில் தாத்தாவையும் பாட்டியையும் பார்த்தவன்.. லேசாக‌ அதிர்ந்தான்.

பக்கத்தில் கோமதி.....




அவளுக்கு ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருந்தது.

அதிர்ந்தவன் புரியாமல் இவர்களை பார்க்க,

அப்பா,

“நாங்கள் ஐந்து பேரும் தான்ப்பா வந்தோம். அதுவரையில் நன்றாகத்தான் இருந்தாள். தீடீரென இங்கு வந்து இறங்கவும் மயக்கம் போட்டு
விழுந்துவிட்டாள். நாங்கள் இங்கு கொண்டு வந்து சேர்த்தோம். ஒன்றும் இல்லை. காய்ச்சல் அதிகமாகிவிட்டது. எந்த மாத்தரை கொடுத்தும் காய்ச்சல் நிக்காததால் ட்ரிப்ஸ்சில் காய்ச்சலுக்கான மருந்து செலுத்தி இப்போது கொஞ்சம் பரவாயில்லை”, என்றார்.

அவன் அவளையே பார்த்துகொண்டு இருந்தான்.

இப்போது அவனின் மனைவி ஆயிற்றே. இப்போது அவள் வந்து இருப்பது
சுடிதாரில்.. சுடிதாரும் போடுவாளோ.. அவள் அணியும் ஒவ்வொரு உடுப்பையும் அவன் ரசிக்க தவறியதில்லை.

“அப்பா! நீங்க மூணுபேரும் வீட்டுக்கு போங்க.. நான் பார்த்துக்கிறேன்”, என்றான்.

பாட்டியும் தாத்தாவும் அவனை பார்க்க,

“சரிப்பா! அவள அதட்டாதே. உன்னை பார்க்க போகிறோம். நீ என்ன சொல்வாயோ என்ற அதிர்ச்சியிலே.. அவளுக்கு காய்ச்சல் வந்துவிட்டதோ
என்று எனக்கு தோணுது” என்றாள் பாட்டி.

“சரி பாட்டி! நான் பார்த்துக்குறேன். நீங்க பயப்படாம வீட்டுக்கு போங்க”, என்றான்.

அவர்கள் போன சிறிது நேரத்தில் அவளுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கும்
டாக்டர் உள்ளே வரவும்,

“ஹாய் சிவா! வந்துட்டீங்களா! உங்கப்பா எல்லாத்தையும் சொன்னாங்க‌.. ஏன் மனச போட்டு குழப்பிக்கிறீங்க. நல்ல மனைவி கிடைச்சிருக்காங்க‌..
ஜாலியா இருக்கறதவிட்டுட்டு.. எனிவே வாழ்த்துக்கள். இன்னும் கொஞ்ச நேரத்துல கண் விழிச்சுடுவாங்க. இந்தாங்க மாத்திரை.. இதை எழுந்திருக்கவும் கொடுங்கள். ம் அப்புறம் வெறும் பயம் தான்.. ஒன்னும் பயப்ப‌டவேணாம் ஒகே.. நான் வரேன்" என்றவர் தொடர்ந்தார்...

“சிவா ஒரு விஷயம் சொல்லட்டா?”

“ம் சொல்லுங்க”, என்றார்.

“என் மனைவி கூட என் அத்தைமகள் தான்”, என்று சொல்லி கண்ணடித்தவர் உடனே சென்றும் விட்டார்.

அவனையும் அறியாமல் அவளை பார்த்த சந்தோஷத்தில் விசில் அடித்தான்.

அவள் அதிர்ச்சியுடன் எழுந்தாள். ஏனென்றால் அவளை பார்க்கும் போதெல்லாம் அவன் மௌனமாக அடிக்கும் விசில் சத்தம் அது.

சிவாவை பார்த்தவுடன் அவளையும் அறியாமல் அழுகை வர,

“ஷ்! இங்கெல்லாம் அழக்கூடாது”, என்பது போல் பாவனை செய்தான்.

திரும்பி திரும்பி பார்த்தாள். பாட்டி தாத்தாவை காணவில்லை.

“என்ன” என்பது போல் ஒரு பார்வை பார்த்தான்,

“பாட்டி…!”, என்று அவள் இழுக்க,

"அவங்க ஊருக்கு போய்ட்டாங்க”, என்றான்.

“ஊ.. ஊருக்கா..!”, என்றாள்.

“ம்”

“அப்ப நான்..”, என்றாள்.

“ம்.. உன்ன விட்டாத்தானே”, என்றான்.

“அப்போ அன்னைக்கி விட்டுட்டு வந்தீங்க..”, என்று இழுத்தாள்.

“ம்.. ஏதோ அவசரத்துல வந்துட்டேன்..ஆனா உன்னப் பார்க்காம நான் எவ்வளவு தவிச்சேன் தெரியுமா?”, என்றான்.

“ம் எவ்வளவு…!”, என்று கேட்க வாய் எடுத்தவள் அமைதியாகி விட்டாள்.

அதற்குள் சிஸ்டர் வர அப்பொழுது தான் நினைவுக்கு வந்தது அவனுக்கு மாத்திரை கொடுக்கவில்லையே என்று.

சிஸ்டர் சிவாவை பார்த்து, “டாக்டர் கொஞ்சம் இப்படி வாங்க” என்றழைத்தாள்.

அவன் வரவும் இரண்டு பேரும் வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். இதனை பார்த்துக்கொண்டு இருந்தவளுக்கு பயங்கர கோபமாக வந்தது. அவன் வந்ததும் தெரியாமல்.. அவள் கழுத்தில் அணிந்து இருக்கும் செயினை
போட்டு வாட்டிக் கொண்டு இருந்தாள்… அதற்கு வாய் இருந்தால் அழுதிருக்கும். அவன் அவள் கையில் மாத்திரையை கொடுத்து, நீர் எடுத்து
கொடுத்துவிட்டு வேகமாக வெளியே சென்றுவிட்டான்.

(தொடரும்)

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (3-May-14, 4:45 pm)
பார்வை : 593

மேலே