பாடையில் ஏற்றிய பூவாடை

பொன்னம்மா,
வயது அறுபது.

அடக்கமும், அழகும்
ஒருசேர் கொண்ட அன்னபூரணி.

வைரம் பாய்ந்த தேகம்,
நோய் துளைக்காத உடல்,
வேளாவேளைக்கு உணவு,
அலுப்புக்கேத்த தூக்கம்
அயராத உழைப்பென்ற
உயரிய வாழ்வை வாழ்ந்து வந்தாள்.

தெருத் தெருவாய்
பூ விற்பதே,
அவளின் வியாபராம்.

அதிலும், நியாமாய் தொழில்
செய்யும் நியாயஸ்தி.

திருமண பந்தத்தை,
உதறி எரிந்து,
ஒத்தையாய் ஒண்டிக்
குடித்தனம் இருக்கும் குணவதி.

இன்று,
பூக்கூடையோடு முதலித் தெருவை
அடைந்தாள்.

பொன்னம்மா!
பொன்னம்மா!
என்று ஆஸ்பத்திரி வாட்ச்மேன்
குரல் கேட்டு திரும்ப,
திமிரோடு திரும்பிகொண்டிருந்த வேன்,
இடித்தெரிந்தது!

பூக்கூடை பின்னோக்கியும்,
பொன்னம்மா முன்னோக்கியும் பறந்தனர்.

காற்றில் பூவாசமும்,
பொன்னம்மாளின் வலியோசையும்,
தெருவை திகிலடித்தது.

பொத்தென்று வாட்ச்மேன்
காலடியில் விழுந்தாள்.

தரைபதித்த தலை,
மண்ணை,
செம்மண்ணாக்கியது.

பொன்னம்மாளை,
வாட்ச்மேன் அள்ளிகொண்டோடி,
மூன்றாம் அறையில் இட்டார்.

டாக்டர் சிகச்சை அளிக்க,
ஐயோ, ஐயோ என்று வலிதாங்காமல்,
கதறியபடி வாட்ச்மேன் கையை
இறுக்குகிறாள்.

பத்தே நிமிடத்தில்,
உயிர் பிரிந்தது.
ஆனால் வாட்ச்மேனிடம்
ஏதோ சொல்ல நினைத்து,
முடியாமல் இறந்ததுபோல் ஒரு
காட்சி.

அடுத்த வினாடியே,
அறை முழுதும் துற்நாற்றம்.
சுற்றி இருந்த அனைவரும்,
விக்கி விக்கி வாந்தி எடுத்தனர்.

முதிலித் தெருவையே,
தன் மல்லிகை பூவாசதால்,
மணக்கச் செய்தவள்,
அநாதை பிணமாய் விறைத்து
கிடக்கிறாள்.

வாட்ச்மேனும், தெருவாசிகளும்,
ஈமக் கடன் முடித்தனர்.

பொன்னம்மாளின் இறப்பு,
வாட்ச்மேனை தளரச் செய்தது.
பயத்தில், குளிர் ஜுரம் கண்டது.

இரண்டு நாட்கள்,
அவதிப்பட்டு,
மாத்திரை துணைகொண்டு தேறினார்.

இருந்தும் பொன்னம்மாள்,
என்ன சொல்ல வந்தாள்,
என்ற கேள்வி,
கிழவனை கிறுக்கு பிடிக்க
வைத்தது.

மூன்றாம் நாள்,
இரவுப் பணிக்காக,
ஆஸ்பத்திரி அடைந்தார்.

மூன்றே அறைகளும்,
ஒரு அறுவை சிகிச்சை அறையும்,
ஒரு பரிசோதனை அறையும்
கொண்ட சிறிய ஆஸ்பத்திரி அது.

அன்று மூன்று அறைகளும்,
காலியாய் இருந்ததால்.
மெயின் கதவை,
பூட்டிவிட்டு வெளியே வந்தமர்ந்தார்.

திரும்பத், திரும்ப
பொன்னம்மாள் பற்றியே கேள்வி,
வாட்டிக் கொண்டிருந்தது.

மணியோ பன்னிரண்டு,
மயான அமைதி.

மறக்க நினைக்கிறார்,
முடியவில்லை.
கண்கள் மூடி தூங்க நினைக்கிறார்,
பொன்னம்மாள் முகம் நிழலாடுகிறது.

செய்வதறியாமல்,
பொன்னம்மா என்னை விட்டு போ....!
என்று அலறி முடிக்கும்போது.

கிரீச்...!
கிரீச்...!
கிரீச்...!
என்று மூன்று முறை சத்தம் வந்தது.

சுதாரித்து கொண்டு எழுந்தார்.

இஷ்..!
இஷ்..!
இஷ்..!
என்ற சத்தம் அஸ்பத்ரிக்குள்
இருந்து வந்தது.

குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு,
பூட்டைத் திறந்தார்.

யாரது?
யாரது?
என்று வினா எழுப்பினார்.

கிரீச்...!
கிரீச்...!
கிரீச்...!
என்று மூன்று முறை சத்தம்
மூன்றாம் அறையில் இருந்து வந்தது.

போயிரு பொன்னம்மா!
வீனா இங்க பேயா சுத்தாம போயிருன்னு
கத்துகிறார்.

இஷ்..!
இஷ்..!
இஷ்..!
என்ற சத்தம் பதிலாக வந்தது.

இப்போது ஆஸ்பத்திரி முழுதும்,
அதே மல்லிகை பூ வாசம்.

பொன்னம்மா தான் என்று
முடிவு கட்டி,
அறையை திருக்கிறார்.

உனக்கு என்ன வேணும்,
என்ன சொல்லணும்,
நான் மனசறிஞ்சு தப்பு பண்ணாதவன்,
என்று சொல்லிகொண்டே,
பல்பு சுவிச்சை ஆன் செய்தார்.

பல்ப் எரிய,
அதே நேரம்,
கிரீச்...!
கிரீச்...!
கிரீச்...!
என்ற அகோர சத்தம்,
கிழவனை திகிலடித்து படுக்கையில்,
விழச் செய்தது.

மாரடைப்பு!
இஷ்..!
இஷ்..!
இஷ்..!
கிழவனின் முகத்தில்,
மல்லிகையின் வாசம்
ஏந்திய துளிகள் நனைத்தது.


இப்போது கருவிழிகள்,
மெதுவாக இமை கூடு நோக்கி,
கீழிருந்து மேலாக,
நகரத் துவங்கியது.
ஜன்னல் தெரிகிறது,
எரியாத டியூப் லைட் தெரிகிறது,
மேலே ஓடாத மின் விசிறி தெரிகிறது,
எரிந்து கொண்டிருக்கும் பல்ப் தெரிகிறது,
கட்டிலின் பின்புறச் சுவற்றில்
மாட்டியிருக்கும் ஆட்டோமேடிக்
செண்ட் ஸ்ப்ரேயர் தெரிகிறது.....

கிரீச்...!
கிரீச்...!
கிரீச்...!


இஷ்..!
இஷ்..!
இஷ்....................................................!

எழுதியவர் : கணேஷ்குமார் balu (15-Jun-14, 5:04 pm)
பார்வை : 3233

மேலே