அன்ன நடையாளின் அடையாளம்
மின்னல் வெட்டியது
என்று நினைத்தேன்
சன்னல் வெளியே
எட்டிப்ப் பார்த்தேன் !
நடந்து சென்றது
நங்கை ஒருத்தி
மதி முகம் கொண்ட
மங்கையே ஒருவள் !
வீசிய காற்றால்
பேசியும் கொண்டன
செடிகளின் இலைகள்
மலர்கொடியின் அழகை !
அன்ன நடையின்
அடையாள சின்னமாய்
அசைந்து ஆடிடும்
பின்னலின் துள்ளலுடன் !
இயற்கை நிகழ்வுகள்
இயல்பாய் நடந்தாலும்
இனியாளின் வருகையால்
இருநொடிநின்று தொடர்ந்தது !
மயங்கி விழுந்தனர்
வாலிப நெஞ்சங்கள்
தயங்கியே நடந்தனர்
தள்ளாடும் வயதினர் !
கூவிடும் குயில்களும்
குரலையே மாற்றின
தன்னிலை மறந்தன
பறப்பதை துறந்தன !
இன்னிசை மெல்லிசை
செவிகளில் ஒலித்தன
இதழ்களில் புன்னகை
அறியாமல் மலர்ந்தன !
வண்ணமிகு வானவில்
வந்ததோ தரையிறங்கி
எழில்மிகு அழகியவள்
ஏன் இங்கே வந்தாளோ !
கவியெழுத எனக்கவள்
கருபொருள் ஆனதேனோ
கற்பனைதான் என்றாலும்
கவிதைக்கு உதவியதே !
கற்பனைக்கு எல்லையேது
மனதில் தோன்றிட வயதுமேது
எண்ணியதை எழுதிட்டேன்
எழுத்திலும் பதித்திட்டேன் !
பழனி குமார்