குளித்து முடித்து வெளியில் வந்த தீபக்...மறுபடியும் பேசத்தொடங்கியிருந்தான்..அடுக்களையில் பாத்திரங்களின் சப்தம் இன்னும் வேகமாக கேட்கத்தொடங்கியிருந்தது...ஒரு விசும்பலுடன் கூடிய முணு முணுப்பு கேட்டுக் கொண்டிருந்தது...ஆமாம் கீதா தான் அது...!

நேற்று இரவு வந்த அந்த சண்டையின் மூலம் எதுவென்று ஆழ்ந்து நோக்கினால் அற்பமானதாகத்தானிருக்கும்...அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட விவாதங்கள் கர்ணகொடூரமாக மாறிவிட அந்த ராத்திரி மிக அடர்த்தியாகத்தான் போனது. அவர்களுக்கு, அவர்களின் குட்டிப்பையன் அருண் பேந்த பேந்த விழித்த படியே உறங்கிப் போயிருந்தான்.

விடிந்து இன்னமும் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டு பள்ளிக்குத் தயாராகி ஸ்கூல் பேக் சகிதம் காத்துக் கொண்டிருந்தவனுக்கு கிலி பிடித்துக் கொண்டது. மீண்டும் சண்டை போடுறாங்களே...அவனுக்கு அம்மாவும் பிடிக்கும் அப்பாவும் பிடிக்கும். இரண்டு பேரின் முகங்களையும் பரிதாபமாக பார்த்துக் கொண்டு அழுகையை தொண்டையில் அடக்கிக் கொண்டு சோகமாய் அமர்ந்திருந்தான் 8 வயது அருண்.

" ஏண்டி சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா படிச்சுட்டோம் வேலை பாக்குறோம்னு திமிரா உனக்கு.. உன்னைய போய் வீட்ல உள்ளவங்ககிட்ட சண்டை போட்டு கல்யாணம் பண்ணிகிட்டேன் பாரு என்னைய செருப்பல அடிக்கணும்" தலைமுடியை உதாரணம் காட்டி கத்தினான் தீபக்.

நான் மட்டும் என்னவாம் உங்க புத்தி இவ்ளோ கேவலமா இருக்கும்னு தெரிஞ்சு இருந்தா உங்கள ஏன் கல்யாணம் பண்ணிக்கிறேன் மகா கேவலமான மனுசன் நீங்க சின்ன சின்ன விசயத்துக்கு கூட ஒத்துப் போகாத ஒரு ஜென்மம் நீங்க...ச்சே என் வாழ்க்கையே வீணாப்போச்சு...

கோபத்தில் தீபக்...கீதாவின் தலைமுடியை பிடித்து கையை ஓங்க கீதா அவனின் சட்டையை எட்டிப் பிடித்தாள் " தலைல இருந்து கைய எடுடா.... த்த்தூ..... நீ எல்லாம் ஒரு ஆம்பளை கட்டுன பொண்டாட்டிய போய் கை நீட்டிகிட்டு...." முகத்தில் காறி உமிழாத குறையாக வார்த்தைகள் வந்து வெளியில் விழுந்தன....

"த்தூத்தேறி நாயே.... யார பாத்து வாடா போடான்னு சொன்ன உன்னய கன்னத்தில் ப்ளார்ர்ர்ர்ர்........." ஓங்கி ஒன்று விட்டான் தீபக்...பதிலுக்கு அவன் முகத்தில் நகங்களை வைத்து கீறினாள்.. கீதா" யோவ் உன்ன என்ன பண்றேன் பாரு.. " கருமம் புடிச்ச தாலிய கட்டிட்டு என்ன வேணா பண்ணிவியாடா நீ" செவுளில் தீபக்கிற்கு எட்டி ஒண்ணு விட்டாள்.

ஆளுக்கொரு மூலையில் சிதறி விழுந்து வார்த்தைகளால் தண்டித்துக் கொண்டனர். "உன்னை பத்தி தெரியும்டி.. லட்சணம் ஆஃபீஸ் போனமா வந்தமான்னு வர்றியா.. அங்க அங்க ஊர் மேஞ்சுட்டு வர்ற.. கேட்டா.. ஆயிரம் லொச்சை காரணம் வேற...." வார்த்தையில் நெருப்பை அள்ளிக் கொட்டினான் தீபக்.

இது ஆண்களிடம் இருக்கும் ஒரு அருவறுப்பான குணம். மிகைப்பட்டவர்களிடம் இது கேவலமான சாக்கடையைப் போல தேங்கி நிற்கிறது. ஒரு பெண் சிரித்து பேசினாள், நாலு இடங்களுக்கு சென்று வந்தால்.. திமிராய் இருந்தாள் உடனே அவளின் நடத்தையோடு சம்பந்தப்படுத்தி பார்ப்பது. இந்த துர்குணம் சமுதாயத்தில் புரையோடித்தான் போய்கிடக்கிறது. உடையோடு சம்பந்தப்படுத்துதல் தொழிலோடு சம்பந்தப்படுத்துதல் என்று எல்லா அநாகரீகங்களும் அரங்கேறும் ஒரு இடம் அல்லது பார்வைகள் எங்கே இருந்து கிடைத்தது ஆண்களுக்கு என்பது விளங்க முடியாத புதிர்.

பெண்களின் கோபமோ ஒரு தடவை வந்து விட்டால் அதில் காம்ப்ரமைஸ் ஆகி திரும்பி கூல் ஆவது கடினம். கோபத்தின் உச்சத்தில் அவர்களுக்கு தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற எண்ணம் மிகைத்திருப்பதும் ஒரு காரணம்....மேலும் தன்னின் ஆதிபலம் என்ன என்று ஒவ்வொரு பெண்ணின் ஆத்மாவும் அறியாமலில்லை அதிலிருந்து வெடிக்கும் உக்கிரம் கடுமையானதாகவே இருக்கிறது. ஆணின் வலு உடலளவில் இருந்தாலும் பெண்னின் மனோபலத்தின் முன் எல்லாமே....தூசுதான்...

'நீயும் நீ கட்டின தாலியும்....இத கட்டிட்டுதானே இவ்ளோ பேச்சு பேசுற....அடிக்கிற உதைக்கிற...இந்தா நீயே வச்சுக்க...' தாலியை கழட்டி விசிறியடித்தாள் கீதா....! திகைத்து நின்றான் தீபக்....அதுதானே பெரும்பாலும் ஆண்களின் உச்ச பட்ச அதிகாரம்.....! இருவருமே அலுவலகத்தில் பணி புரிகிறார்கள்...அலுவலத்திற்கு நேரமாகி விட்டது வேறு கீதா துவண்டு போய் படுக்கையில் விழுந்து கேவி கேவி அழத்தொடங்கியிருந்தாள்.

அருணின் பிஞ்சுமனம் திகைத்துப்போயிருந்தது....அந்த சின்ன இதயத்தின் துடிப்பு அதிகமாகி இருந்தது...அம்மாவும் வேணும் அப்பாவும் வேணும்....ஐயோ அம்ம்மா ஓடிப்போய் கொஞ்ச நேரம் அம்மாவை கட்டிக் கொண்டு அழுதான்...கொஞ்ச நேரம் அப்பாவை கட்டிக் கொண்டு அழுதான்...

பிஞ்சுக்கு எப்படி தெரியும் வளர்ந்திருக்கும் மூளைகளின் திமிர்களும், கோபங்களும், இங்கிதங்களும் நாகரீகங்களும்..அநாகரீக வார்த்தைகளும்....! பல நேரங்களில் மனித மூளைகள் ஏன் வளருகின்றன ஏன் விருத்தியாகின்றன என்பதுதான் இப்போதைய ஆத்திரம். ஆயிரத்தெட்டு விசயங்கள் அறிந்த மனித மூளை அதை உள்ளுக்குள் சமைத்து அகங்காரமாக்கி வார்த்தைகளில் அசிங்கத்தையும் ஆணவத்தையும் கொட்டி நிந்திக்கிறது.

சக மனிதனை, சமுதாயத்தை, நண்பனை, மனைவியை, கணவனை சாடவும் ...அத்துமீறிய வார்த்தைகளை பேசவும் ஆதரிக்கவும் யார் அதிகாரம் கொடுத்தது. எப்போதும் ஒரு பிரமாண்ட சக்தி நம்மை கவனிக்கிறது என்பதை பெரும்பாலும் மறந்து விடும் மனிதர்கள்...நாகரிகத்தின் உச்சத்தில் வாழ்வது போன்று ஒரு உச்ச கதியில் தங்கள் மூளைகளைப் பிறழவிட்டு நகர்ந்து போய்க்கொண்டே இருக்கிறார்கள் அந்தோ பரிதாபம்...அவர்களின் மூளைகள் அவர்களையே அழிக்கும் என்பதற்கு வரலாற்றில் இருக்கும் சான்றுகள் அறியாதவரா இல்லை அறிந்தும் மறந்து போனவரா?

அருண் தனது பிஞ்சு மனதில் யோசித்தான்....ஏன் அம்மாவும் அப்பாவும் சண்டை போட வேண்டும்..? இரண்டு பேரையும் கட்டிக்கொண்டு நான் இரவில் இனி உறங்க முடியாதா? சண்டைல எப்டி சேருவாங்க..? எப்படி எல்லாம் சரியாகும்..?

அழுது கொண்டே யோசித்துக் தேம்பிக் கொண்டிருந்த அருணை தேற்ற ஆளில்லை அப்போது...இந்த தருணத்தை சரியாக பயன்படுத்தி....அவனின் மூளையில் சேமித்து வைத்திருந்த அன்றைய கணக்கு டெஸ்ட்டுக்கான பாடங்கள் சுத்தமாய் அழிந்து போயிருந்தன...அறிவியல் ஆசிரியர் படித்து மனப்பாடம் செய்யச் சொல்லியிருந்த....கேள்விபதில்கள் சிதைந்து போயிருந்தன....புத்தக பைக்குள் வைக்க வேண்டிய ஆங்கிலம் கிராமர் நோட் புக் எடுத்து வைக்க மறந்திருந்தான்........சண்டை எல்லாவற்றையும் திறமையாய் அவனுள் கலைத்துப் போட்டிருந்தது....

' டேய்...அருண்...ஸ்கூலுக்கு நேரமாச்சுல்ல்ல வாடா.... ' வாசலில் ஸ்கூட்டரை உதைத்து கொண்டிருந்த தீபக்....கத்தினான்....ஆமாம் ஆண்களின் கோபம் பெரும்பாலும் அந்த சூழலை விட்டு வெளியே சென்று விடுவதுதான்.....அலுவலகத்திற்கு செல்லும் அவசரத்திலும்....சண்டையால் ஏற்பட்ட கோபத்திலும்....அருணை தர தரவென்றூ இழுத்து வந்து..ஸ்கூட்டரில்...உட்காரவைத்து..ஆக்ஸீலேட்டரை..முறுக்கினான்.....

தீபக்கின் சிந்தனை....எல்லாம் எப்படியாவது...டைவர்ஸ் வாங்கிட்டு நிம்மதியா வாழணும்..என்பதை கணக்கு போட்டுக் கொண்டிருந்த அதே வேளையில்....வீட்டில் படுக்கையில் கிடந்த தீபா அலுவலகத்திற்கு அன்று லீவு சொல்லிவிட்டு.. நெருங்கிய தோழிக்கு டெலிபோனை சுழற்றினாள்.....

' ஹலோ.....ரம்யாவா.....? தீபா ஹியர் டி.....' அழுகையும் ஆத்திரமுமாக முதல் வார்த்தையாகவே கேட்டாள்...' டைவர்ஸ் அப்ளை பண்ணியாகணும்டி...என்னால இந்த ஆளு கூட வாழவே முடியாது.....' விவரித்துக் கொண்டிருந்தாள்........

* * *

தொடரும் ...

எழுதியவர் : Dheva .S (11-Aug-14, 10:17 pm)
Tanglish : o
பார்வை : 255

மேலே