கதை திரைக்கதை வசனம் இயக்கம்

விஜய் அஜீத்துக்கு எல்லாம் பிடிச்ச லூசு சூர்யாவுக்கும் பிடிச்ச கதைதான் அஞ்சானோட சோகக்கதை. ராஜு பாய் வாய்ல குச்சியோட சுத்துறாரே வாய்க்குள்ள இருக்க குச்சி வாய்ல குத்திடாதேன்னு தான் பதற முடியுதே தவிர அதைப் போய் எப்டிங்க ஸ்டைல்னு எடுத்துக்குறது? கருமம் பிடிச்ச அதை எல்லாம் எப்டிங்க ஸ்டைல்னு சொல்லி படமா எடுத்திங்க லிங்குசாமி. தலைவா ல விஜய் என்ன கொடுமை பண்ணினாரோ அதே கொடுமைல கொஞ்சம் ஆனியன் கேரட் எல்லாம் தூவி அஞ்சான்ல சூர்யா பண்ணி இருக்காரு....

வில்லன் யாருன்னு தெரிஞ்சு போச்சு, ப்ரண்ட கொன்னவன ராஜு பாய் திரும்ப வந்து கொல்லுவாப்ளன்றது ஒண்ணுந் தெரியாத பாப்பா சமந்தாவுக்கே தெரியும் போது நமக்கெல்லாம் தெரியாதா? என்ன துப்புக் கெட்ட படத்தை எடுக்க இம்புட்டு துட்டு செலவு பண்ணி இருக்காய்ங்களேன்னு நினைக்கிறப்பதான் கப்புன்னு தொண்டைய அடைக்குதுங்க...

இவங்களுக்கு எல்லாம் சூப்பர் ஸ்டார் மாதிரி மாஸ் ஹீரோவா ஆகணும்ன்ற ஆசை இருக்கே தவிர கதைய கேட்டு நடிக்கணும்ன்ற அறிவு இல்லாமலேயே போய்டுது. ராஜு பாய்... ராஜு பாய்னு... ஸ்கீரீன் புல்லா கூவுறானுங்கோ, எனக்கு என்னமோ பாஷா பாய் பாஷா பாய்னு தான் கேட்டுகினே இருந்துச்சு. தன்ன ராஜு பாய் கிடையாது ராஜு பாயோட ப்ப்பிரதர்ன்னு காட்டிக்கிட புருவத்துல ஒரு மெகா மேஜிக் மேக்கப் போட்ருக்கானுங்கோ பாருங்க சூர்யாவுக்கு.... ஒங்களுக்கெல்லாம் ஆஸ்கார்தாண்டா கொடுக்கணும்...

தேவையில்லாம அதிகமா பேசி நம்ம எனர்ஜிய வேஸ்ட் பண்ணாம அஞ்சான விட்டுட்டு அப்டியே கதை திரைக்கதை வசனம் இயக்கத்துக்குள்ள போலாம் வாங்க...

அஞ்சானைத்தான் கடிச்சு துப்பி சூப்பு வச்சு சாப்டாச்சு. படம் நல்லா இல்லை விமர்சிச்சோம் அது எல்லாம் சரி. நல்லா இருக்க பார்த்திபன் சார் படத்தை இன்னாத்துக்கு வளிச்சுக்கினு வேணும்னே நல்லா இல்லேன்னு எழுதணும்னு கேக்குறேன்? இணையத்துல இருக்க அஞ்சான்கள் படுத்துற பாட்டுக்கு அஞ்சான் படமே தேவலாம் போல... ஆமாம் பின்ன படத்துல எல்லா கேரக்டரும் பார்த்திபன் சாரு மாதிரியே பேசுறாங்களாம்... பின்ன அவரு டைரக்ட் பண்ணின படத்துல அவரு மாதிரி இல்லாம மணிரத்னம் சார் படத்துல வர்ற மாதிரியா பேசுவாங்க...? வண்டி வண்டியா டர்னிங் பாயிண்ட்ஸ்கள ஏத்தினு, ட்விஸ்ட்டு ட்விஸ்ட்டுன்னு சொல்லி ட்விஸ்ட் பொங்கல் வச்சி, கொஞ்சம் சோகம் கொஞ்சம் காதல், இப்டி அப்டின்னு ஆத்து ஆத்துனு ஆத்தி கதை சொல்றேன் பேர்வழின்னு உலக சினிமாப்படங்கள பாத்துட்டு இங்க வந்து வாந்தியெடுக்குற லோ கிரெடிட் கிரியேட்டர்ஸ்ங்களுக்கு எல்லாம் சுளுக்கு எடுத்து வுட்டுருக்கிற பார்த்திபன் சார பாத்தா கொஞ்சம் பொறாமையாய்தான்பா இருக்கு......

தேவர் பிலிம்ஸ் காலத்துல இருந்து அரைச்ச தேங்காயை அரைக்கிறத பார்த்து புளிச்சுப் போய் கிடந்த மனுசங்களுக்கு அடச்ச்சே கதையும் வேணாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம் ஜாலியான திரைக்கதை இருந்தாப் போதும்பான்னு எதிர்பாத்தவங்களுக்கு எல்லாம்.. கதை திரைக்கதை வசனம் இயக்கம் நிஜமாவே ஒரு திருவிழா பாஸ்...! பார்த்திபன் சார்கிட்ட பிடிச்ச விசயமே மனுசன் ரவுண்ட் த க்ளாக் காதலோடேயே இருக்கறதுதான்...

காதலோடு இருக்கவங்களால மட்டும்தான் தீரத் தீர வாழ்க்கையை அனுபவிச்சு வாழ முடியும்ன்றப்ப... காதலிச்சு கட்டிக்கிட்ட மனைவிய என்ன என்ன பண்ணுவாங்கன்னு யோசிச்சு எல்லாம் நாம பாக்க வேணாம். சாதாரணமா பார்த்திபன் சாரோட படங்கள பார்த்தாலே போதும். இந்தப் படத்துலயும் அப்டித்தான் அட்டகாசமான ஒரு கணவன் மனைவிய நமக்கு அறிமுகம் செஞ்சு வக்கிறாரு. தாலிய எடுத்து கண்ல ஒத்திக்கிட்டு நெத்தி நிறைய குங்குமம் வச்சுக்கிட்டு, தலை நிறைய பூ வச்சிகிட்டு, ரெடிமேடான சினிமா மனைவிகளை பார்த்து பார்த்து போராடிச்சுப் போச்சுப்பா...ன்னு புலம்பிட்டு இருக்க அடுத்த ஜெனரேசன் மக்கள்ஸ்......

உங்களுக்காகவே புத்தம் புது கலர்புல்லான கணவன் மனைவி இந்த படத்துல கலக்கோ கலக்குன்னு கலக்குறாங்க. மனைவிக்கு கால் பிடிச்சு விடுறதை பெருசா பேசி அதை எல்லாம் ரொம்ப பெரிய விசயமா தியாகமா காட்டிக்கிற கணவன்மார்களே.... உங்களுக்கு எல்லாம் டாட்டா பை..பை....சி யூ....

படுக்கை அறையை ஒரு கவிதைப் புத்தகமாக்கிக் கொள்ளுங்கள்...
எழுத விரும்பும் கவிதைகளை........
உங்களுக்குப் பிடித்த வர்ணங்களில் வானவில்லாய் வரைந்து பாருங்கள்...
உங்கள் மனைவியின் காதருகே சென்று....
ஐ லவ் யூ என்று சொல்லி, சொல்லி அலுப்பு கொடுக்காதீர்கள்...
அவள் காலருகே சென்றமர்ந்து ஒரு முறையேனும்
அவள் பாதத்தில் முத்தமிட்டு அவள் கொலுசொலிக்குள்
தொலைந்து போக முயற்சி செய்யுங்கள்....
அன்பாய் இருப்பதாய் சொல்லி அடுத்த கட்டத்திற்கு
பாய முயலும் இயந்திர உலகத்தில்...
நீங்கள் விடிய விடிய அவள் உறங்குவதைப் பார்த்து ரசியுங்கள்....
காதலென்பது கூடல் மட்டுமல்ல...
காதலென்பது ஊடல்...
காதலென்பது விவாதித்தல்
காதலென்பது கட்டியணைத்தல்
காதலென்பது விலகி நிற்றல்...
காதலென்பது....காத்திருத்தல்...
காதலென்பது விழுந்து விழுந்து பேசுதல்.....
காதலென்பது பேசிக் கொள்ளாமல் தினமும் முறைத்தல்...
பிடிக்கும் என்று சொல்லி சொல்லி
வார்த்தைகளால் நாம் செய்த அலங்காரங்கள் போதும்...
அவளுக்குத் தேவை...
விடியலில் ஒரு பெட் காஃபி...
முடியுமா உங்களால்...????!

படத்தைப் பத்தி பேசிட்டு இருக்கும் போதே அது எங்கேயோ நம்மள கூட்டிட்டுப் போய் ஏதேதோ யோசிக்க வைக்குது பாத்தீங்களா.. அதான் ஒரு படைப்பாளியோட வெற்றி. தமிழ் சினிமா இதுவரைக்கும் தனக்குன்னு காப்பாத்தி வச்சிருந்த மரபுகள எல்லாம் தூக்கிப் போட்டு உடைச்சுட்டு... ரிலாக்ஸ்டான அடுத்த தலைமுறைக்குள்ள மெதுவா தன் முதல் அடியை எடுத்து வச்சிருக்குன்னு தான் சொல்லணும்...

பார்த்திபன் சாரோட கதையை அதாவது தனக்கு கதை கிடைக்கலையே அப்டீன்ற கதையை, அப்டி கதை கிடைக்காம பட்டுட்டு இருந்த அவஸ்தையை ஒரு படமா எடுத்தா என்னன்னு அவர் யோசிச்ச இடம்தான் அவர் அடிச்சு இருக்க இந்த சிக்ஸர்....! எல்லா கேரக்டர்ஸ்மே நச்சு நச்சுன்னு அவர் தேர்ந்தெடுத்து இருக்க விதம் அட்டகாசம். அதுவும் ரெண்டு கண்லயும் ததும்பி வழியுற போதையோட ஒரு அட்டகாசமான கதாநாயகி தமிழ் நாட்டுக்குள்ள என்ட்ரி ஆகி இருக்காங்க...வாழ்த்துகள் அகிலா கிஷோர்...!

தம்பி ராமையா சமீபமா வந்த எல்லா படத்துலயும் செம ஸ்கோரர்தான். மனுசன் இந்த படத்துல வசனத்தோட சேர்த்து அப்பாவியான முகபாவத்தை அப்பப்போ காட்டி அடிச்சு தூள் கிளப்பி இருக்கார். அதுவும் தேவர் பிலிம்ஸ்ல படங்கள்ள எல்லாம் யானை ஓடுனாலும் ஒரே மியூசிக், குரங்கு ஓடுனாலும் ஒரே மியூசிக்ன்னு அவர் கமெண்ட் அடிக்கிறதும் அதுக்கு அப்புறம் பேக்ரவுண்டல.. அதே மியூசிக்க தம்பி ராமையா வரும்போது எல்லாம் டடண் டண்.... டடண் டண்ன்னு போட்டு கலாய்க்கிறதயும் செம்ம ஜாலியா சில்லுன்னு ஒரு மிராண்டா குடிச்சுக்கிட்டே ரசிக்கலாம் பாஸ். படத்தோட க்ளைமாக்ஸ் அக்மார்க் பார்த்திபன் ரகம்....!

திரைக்கதை, வசனம் இயக்கம் (கதைதான் இல்லையே பாஸ்...! ) அடுத்த தலைமுறையினருக்கான சிம்ப்பிள் மூவி....

மொத்தத்துல ....அடி தூள்...!!!!!!!!

எழுதியவர் : Dheva .S (1-Sep-14, 11:08 pm)
பார்வை : 189

சிறந்த கட்டுரைகள்

மேலே