மலேசியப் புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும் -திருமதி இராஜம் இராஜேந்திரன் - பாகம் 3

3.மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதைகள்

பத்தாண்டு கால பார்வை (1996 - 2006)

வானம்பாடிக்குப் பிந்திய காலத்தின் பிற்பகுதியும் மறுமலர்ச்சி கால பகுதியும் இந்தப் பத்தாண்டு காலப் புதுக்கவிதை ஆய்வில் அடங்கும்.


ஒவ்வொரு முறையும் புதுக்கவிதை தேக்க நிலையை அடையும் போது ஆங்காங்கே புதுக்கவிதையின் பால் பற்றுக்கொண்ட ஒருசில இயக்கங்களும் அமைப்புகளும் அவ்வப்போது கருத்தரங்குகளை நிகழ்த்தி புதுக்கவிதையை மீட்டெடுக்கும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இக்காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் விளக்கப்படுகின்றன.

1. மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதைக் கருத்தரங்கு

தொண்ணூறுகளில் ஏற்பட்ட தொய்வின் காரணமாக, 15.9.1996இல் மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து நடத்திய ஑புது நோக்கில் புதுக்கவிதைகள்ஒ எனும் கருப்பொருளில் மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதைக் கருத்தரங்கு ஒன்று மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் எனும் தலைப்பில் சா. அன்பழகன் அவர்களும், மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதைகளில் பெண்ணிய சிந்தனைகள் எனும் தலைப்பில் முனைவர் வே. சபாபதி அவர்களும், மலேசியப் புதுக்கவிதையின் தரமும் திறமும் தொடர்பாக முனைவர் ரெ. கார்த்திகேசு அவர்களும் விளைபயன் மிக்க ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்தனர்.

இக்கருத்தரங்கில் புதுக்கவிதையாளர்களும் ஆர்வலர்களும் கணிசமான எண்ணிக்கையில் கலந்து பயனடைந்தனர். 1964ஆம் ஆண்டில் காலூன்றிய புதுக்கவிதை வேரூன்றிய வரலாற்றையும் எதிர்நோக்கிய எதிர்வினைகளையும் புதுக்கவிதையின் போக்கினையும், தர மதிப்பீடுகளையும் ஒருசேர தொகுத்து தந்ததில், புதுக்கவிதையைப்பற்றி பங்கேற்பாளர்கள் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடிந்தது எனலாம்.


3. 2 புதுக்கவிதை திறனாய்வுக் கருத்தரங்கு

இந்த மண்ணில் புதுக்கவிதைப் பூ பூத்துக் குலுங்க மீண்டும் ஓர் அரிய முயற்சி 1999ஆம் ஆண்டில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது. இச்சங்கத்தின் அன்றைய செயலாளரும் இன்றைய தலைவருமான பெ. இராஜேந்திரன் அவர்களின் தலைமையில் புதுக்கவிதை திறனாய்வுக் கருத்தரங்கு ஏற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டு, தொடக்கத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் பின்னர், நான்கு மாதங்களுக்கு ஒரு முறையும் திறனாய்வுக் கருத்தரங்குகளை இருநாள் நிகழ்வாக நாடு தழுவிய நிலையில் நடத்தி வருகின்றது. ஆய்வுக்குட்பட்ட காலம் வரை இதுவரை பதிநான்கு திறனாய்வுக் கருத்தரங்குகள் தொடர்ச்சியாக நடத்தி சாதனை புரிந்துள்ளது.

3.2.1 முதலாவது புதுக்கவிதைத் திறனாய்வுக் கருத்தரங்கு தொடக்க விழா

முதலாவது புதுக்கவிதைத் திறனாய்வுக் கருத்தரங்கு 1999ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் ஆதரவோடு தொடக்க விழா கண்டது. புதுக்கவிதைத் துறைக்குப் புத்துயிர் ஊட்டும் வகையில் அமைய வேண்டும் என்ற நோக்கோடு தமிழகத்தின் சிறந்த புதுக்கவிதையாளர்களாகிய கவிக்கோ அப்துல் ரஹ்மான், தமிழன்பன், சிற்பி ஆகியோர் வரவழைக்கப்பட்டனர். இவர்களின் ஆக்கவுரைகளும் கோ. முனியாண்டி அவர்களின் ஆய்வுரைகளும் வறண்டு போயிருந்த புதுக்கவிதை நிலத்தில் நீர்பாய்ச்சியது போல் அமைந்தது. புதுக்கவிதை பயணத்திற்கு இக்கருத்தரங்கு முன்னின்று ஆராத்தி எடுத்து, அடியெடுத்து கொடுத்தது.

3.2.2. இரண்டாவது புதுக்கவிதைத் திறனாய்வுக் கருத்தரங்கு

11-12.3.2000இல் மோரிப், பந்திங் எனும் இடத்தில் இரண்டாவது புதுக்கவிதைத் திறனாய்வுக் கருத்தரங்கு இரண்டு நாள் நிகழ்ச்சியாக பரிணாம வளர்ச்சியைக் கண்டது. பாதை வகுத்து கொடுப்பதும் வ௞காட்டல் தன்மையுமே உண்மையான இலக்கியப் பணியாக அமையும் என்பதை உணர்ந்து, பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டன. அத்தகைய பட்டறைகள் மூத்த புதுக்கவிதையாளர்களைத் தலைவர்களாகக் கொண்டு இயங்கின. இப்பட்டறைகள் மூலம் புதுக்கவிஞர்கள் அடிப்படை பயிற்சியைப் பெற்றதோடு, மூத்த சகக் கவிஞர்களுடன் கருத்து பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பையும் பெற்றனர்.

"காதல்" எனும் தலைப்பில் அமைந்த கவியரங்கை கவிமணி கா. இளமணி வழிநடத்தினார். இதில் ஏ. தேவராஜன், கு. தேவேந்திரன், ஓவியன், வே. இராஜேஸ்வரி, பெ.சா. சூரியமூர்த்தி ஆகியோர் கவிதைப் படைத்தனர். 1999ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மற்றும் 2000ஆம் ஆண்டு ஜனவரி ஆகிய மூன்று மாத புதுக் கவிதைகளை, நா. பச்சைபாலன் ஆய்வு செய்து, ஆய்வுக்கட்டுரை படைத்தார்.


ஆய்வாளரின் கவனத்தை ஈர்த்த கவிதையின் சில வரிகள்:

புள்ளிங்கள
நல்லா படிக்க வை
பொம்பளயும்
கண்ணு கலங்காம
காப்பாத்து

............................

கடைசியா
ஒன்னு சொல்ல
மறந்துட்டேன்யா

நீ
கொண்டாந்து
சேத்தியே
ஆஸ்ரமம்
அத வேற இடத்துக்கு
மாத்திட்டாங்க
அட்ரச
எழுதியிருக்கேன்
மறந்துடாம படி.


கவிஞரின் 'கடித பாணி' யில் அமைந்த இக்கவிதை, படிப்பவரின் மனதைப் பிழிவதாக இருக்கின்றது. இயல்பான பேச்சு நடையிலே தாயின் அன்பு ஆழமாக வெளிப்படுகின்றது. பரிசுக்குரிய கவிதைகளாக, "அக்கினியின் வீர வணக்கத்துடன் ஒரு போர் வீரன்", சிவாவின் "மழை", கணபதி கணேசனின் "ஒரு யாழ்ப்பாணத்து மரணம்" ஆகிய கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இக்கருத்தரங்கின் முக்கிய அம்சமாக இடம்பெற்றது பயிற்சி பட்டறையாகும். பட்டறையில் பங்குபெற்ற அனைவரும் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் வே. சபாபதி அவர்களின் மேற்பார்வையில் பட்டறை நடைபெற்றது. இப்பட்டறையின் வழி நல்ல தரமான கவிதைகள் அரங்கேறின. எம்.ஏ. இளஞ்செல்வனின் "புதுக்கவிதை ஒரு பொதுப்பார்வை" எனும் ஆய்வுக்கட்டுரை மிகப் பயனுள்ளதாக அமைந்தது.

3.2.3 மூன்றாவது புதுக்கவிதைத் திறனாய்வுக் கருத்தரங்கு


மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் 24, 25.6.2000ஆம் ஆண்டில் பேராக் மாநிலத்தின் லுமூட் கடற்கரையில் இரு நாள் புதுக்கவிதை திறனாய்வுக் கருத்தரங்கு சிறப்பாக அரங்கேறியது.

இந்நிகழ்வில் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். முதல் அங்கமாக பெர்னாட்ஷா அவர்கள் "திரைப்படப் பாடல்களில் புதுக்கவிதை " எனும் தலைப்பில் உரையாற்றினார். புதுக்கவிகளும் மூத்தக் கவிகளும் இணைந்து நடத்திய கவிதைப் பட்டறையில் ஐந்து புதுக்கவிதைகள் புதிதாகப் பிறந்தன. பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு கவிதையையும் மிகத் துல்லியமாக அலசி ஆராய்ந்தனர். மூத்தக் கவிகளின் கருத்துகள் இளையோருக்கு மிகவும் உற்சாகத்தை ஊட்டின. அதனைத் தொடர்ந்து பேருந்து பயணத்தின் போது நடந்த திடீர் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டவர்களுள் நான்கு பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கவியரங்கம் எம்.ஏ. இளஞ்செல்வனின் தலைமையில் களைக்கட்டியது. இக்கவியரங்கில், அருள்தாஸ் மனஹரன், நடராசன், தேவராஜுலு, பிரான்சிஸ் ஆகியோர் "அரசியல்" எனும் தலைப்பில் தத்தம் படைப்புகளைக் கருத்தாழமிக்க சொல்லாடல்களால் சிறப்பாகப் படைத்தனர்.


மறுநாள் டாக்டர் வே. சபாபதி அவர்களின், "மூன்று மாதம் கவிதைகளின் திறனாய்வு" எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரையுடன் கவிதைக் கருத்தரங்கு தொடர்ந்தது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மன்று மாதங்களில் சுமார் 340 புதுக்கவிதைகள் மலேசியத் தமிழ் இதழ்களில் வெளிவந்துள்ளதாகவும் அவற்றில் 160 புதுக்கவிதைகள் மக்கள் ஓசையில் வெளிவந்ததாகவும் ஆய்வாளர் குறிப்பிட்டிருந்தார். எண்ணிக்கையிலும் தரத்திலும் இக்காலகட்டத்தில் புதுக்கவிதைகள் உயர்ந்திருந்தாலும் அதிகமான புதுக்கவிதைகள் வெறும் உரைநடை போக்கு மிகுந்தும் கவிச்சுவை குறைந்தும், வெறும் சொற்களை மட்டும் வைத்து வித்தைகாட்டும் போக்கும் காணப்படுவதைத் திறனாய்வாளர் சுட்டிக்காட்டியுள்ளார். பாடுபொருள்கள் அனைத்துலக நிலைக்கு விரிவடையச் செய்துள்ளதாகவும் உள்நாட்டுப் பிரச்சினைகளை அலசி ஆராயும் போக்கு குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஆய்வாளரின் பார்வையில் சிறப்புப் பெற்றதாய், "பழைய பரமசிவனும் புதிய நூற்றாண்டும்", "இந்தியா இருட்டுகிறது", "நாய்கள்" ஆகியவை பரிசுக்குரியனவாகத் தேர்ந்தேடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், "மலேசியப் புதுக்கவிதைகளில் சமுதாய அக்கறை" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பல நல்ல கருத்துகள் சிந்தனைக்கு விருந்தாக அமைந்தன. இக்கருத்தரங்கின் முக்கிய அங்கமாக "கடலோரக் கருத்தரங்குக் கவிதைகள்" எனும் நூல் வெளியீடு கண்டது.

இந்நிகழ்வுக்கு மேலும் ஒரு சிறப்பு இலக்கிய உரையாக அமைந்தது தமிழகக் கவிஞர் அறிவுமதி அவர்களின் உரை. "நல்ல மொழிப் பயிற்சியே கவிநயத்தை மேம்படுத்தும்; சிந்தனை மரபில் ஏற்படும் இடர்பாடுகளைக் குறைக்க பண்டைய தமிழ்ச் சிந்தனை வேரூன்றி வளர வேண்டும்; சமுதாய மறுமலர்ச்சியைக் கொண்டு வருவதாகவும் புதுக்கவிதைகள் அமைய வேண்டும்" என்று புதுக்கவிகளுக்கு வழிகாட்டினார். இக்கருத்தரங்கில் இடம்பெற்ற அனைத்து அங்கங்களும் மூத்த கவிஞர்களுக்கு முதிர்ச்சியையும் இளைய கவிஞர்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாகவும் தூண்டுதலாகவும் அமைந்தன எனத் துணிந்து கூறலாம்.


3.2.4 நான்காவது புதுக்கவிதைத் திறனாய்வுக் கருத்தரங்கு

இக்கருத்தரங்கு தைப்பிங் நகரில் 14, 15.10.2000 ஆகிய இரு தினங்கள் இலக்கிய விழாவாக நடைபெற்றது. மலேசியப் புதுக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவரான எம்.ஏ. இளைஞ்செல்வன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கருத்தரங்கு கவியரங்கம் நினைவஞ்சலி கவியரங்கமாக முகம் மாறி இருந்தது. புதுக்கவிதையின் பாசறையான அவர் அன்று பாடுபொருளாகிப் போனார். எம்.ஏ. இளஞ்செல்வனின் மறைவையொட்டி கவிஞர்கள் கவிதைகளை மாலைகளாகத் தொடுத்து அவருக்கு சூட்டி அஞ்சலி செலுத்தினர்.

அந்நிகழ்வுக்குப் பிறகு மலாயாப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் முனைவர் வே. சபாபதி அவர்கள், "புதுக்கவிதையின் படிநிலை உத்திகள்" எனும் தலைப்பில் புதுக்கவிதையின் சிறப்பு உத்திகளான உவமை, உருவகம், படிமம், குறியீடு ஆகியவற்றை மிக விரிவாகவும் விளக்கமாகவும் ஆழமாகவும் எடுத்துரைத்தார். புதுக்கவிதைத் திறனாய்வுக் கருத்தரங்கின் தலைவர் இராஜேந்திரன், அதன் செயலாளர் வித்யாசாகர், முனைவர் வே. சபாபதி அவர்களின் மேற்பார்வையிலும் வ௞காட்டலிலும் கவிதைப் பட்டறை நடைபெற்றது.

அடுத்ததாக மே, ஜூன், ஜூலை (2000) மாதங்களின் இதழ்களில் வெளிவந்த புதுக்கவிதைகள் தொடர்பாக கணபதி கணேசன் அவர்கள், ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தார். இம்மாதிரியான கருத்தரங்குகள் வழி தங்கள் கவிதைகள் கவனிக்கப்படுகின்றன; கௌரவப்படுத்தப்படுகின்றன என்ற உந்துதலும் ஆர்வமும் எழுதுவோரிடம் மேலோங்கி வருகிறது என்பதை 450 கவிதைகளே ஆதாரம் என ஆய்வாளர் குறிப்பிட்டார். அவற்றில் சில தரமான கவிதைகளைச் சுட்டிக்காட்டினார்.அவற்றில் ஒன்று


"ஈழத்து மண்ணில்
முளைத்திருக்கும்
ஒவ்வொரு புல்லின்
நுனியைக் கிள்ளிப்பார்
வீர ரத்தம் சொட்டும்"


இக்காலக் கவிதைகள் எண்ணிக்கையில் மட்டுமல்லாது தரத்திலும் உயர்ந்துள்ளன. இதற்கு கருத்தரங்குகளே திருப்புமுனையாக, புதுக்கவிதைகளை வரவேற்கத்தக்க வசந்தமாக அமைந்திருக்கின்றது என ஆய்வு மூலம் ஆணித்தரமாக ஆய்வாளர் குறிப்பிடுகிறார். சிறந்த மூன்று புதுக்கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆய்வரங்கத்தைத் தொடர்ந்து "மலேசியக் கவிதைகளில் பெண்ணியத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறதா? இல்லாயா?" என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்திற்கு முனைவர் ரெ.கார்த்திகேசு தலைமையேற்றார்.


கருத்தரங்கு ஏற்பாட்டுக்குழுத் தலைவர் இராஜேந்திரன் தம் உரையில், கடந்த ஓராண்டு காலமாகப் பத்திரிகையில் வெளிவந்த ஏறக்குறைய ஆயிரம் புதுக்கவிதைகளை ஆய்வு செய்து, நூறு கவிதைகளை அடையாளங் கண்டு, அவை காற்றில் கரைந்துவிடாமல் இருக்க, அவற்றைத் தொகுத்து நூல் வடிவம் பெறச் செய்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். "லுமூட் கடலோர கவிதைகள்" எனும் நூல் வெளியீடு கண்டது. நம் நாட்டின் புதுக்கவிதைகள், அதன் வளர்ச்சிகள், கடல் கடந்து கால் பதித்துள்ளதையும், ஐம்பதாண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் இலக்கியம் வளர்த்து வரும் பிரபல மாத ஏடான "கலைமகள்" நமது புதுக்கவிதை முயற்சியைப் பாராட்டி, அங்கீகாரம் வழங்கியுள்ளதையும் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்.

3.2.5 ஐந்தாவது புதுக்கவிதைத் திறனாய்வுக் கருத்தரங்கு

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் 16, 17.12.2000இல் ஐந்தாவது புதுக்கவிதை திறனாய்வுக் கருத்தரங்கு கேமரன் மலையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் ஆதி. குமணன் தொடக்கி வைத்தார்.
"உரைநடையை ஏற்றுக் கொள்ளாமல், செய்யுள் செய்யுளாக இருந்திருந்தால், கவிதை செத்துப் போயிருக்கும். அது வசனத்தைக் கவசமாக ஏற்றுக் கொண்டதால், கவிதை இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப, கால மாற்றத்திற்கு ஏற்ப வாகனம் மாறும். ஆனால், இலக்கியம் வளர்ந்து கொண்டுதான் போகும்" என அவர் தம் உரையில் குறிப்பிட்டார்.


மேலும், இக்கருத்தரங்குகள் வழி புதியவர்களும் சிறப்பான முறையில் கவிதை படித்தை கையாண்டு வருகிறார்கள். தமிழ் உணர்வைவும் இலக்கியத்தின் மீதான தாக்கத்தையும் இக்கருத்தரங்குகள் ஏற்படுத்தி வருகிறது என்றார். அதனையடுத்து "தைப்பிங் மலையோரக் கவிதைகள்" எனும் புதுக்கவிதை தொகுப்பு நூல் வெளியீடு கண்டது. "புதுக்கவிதையில் அங்கதம்" எனும் தலைப்பில் பிறரது குறைகளைச் சுட்டிக்காட்டித் திருத்தும் ஓர் உத்தியாக "அங்கதம்" செயல்படுவதை, எல்லாரும் எளிதில் விளங்கிக் கொள்ளுமாறு பல எடுத்துக் காட்டுகளுடன் விளக்கமளித்தார் டாக்டர் வே. சபாபதி அவர்கள்.


வழக்கம் போல் கவிதைப் பயிற்சிப் பட்டறை தொடங்கியது. படைக்கப்பட்ட கவிதைகள் அரங்கேறின. அவற்றின் மீது விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்தன. ஆரோக்கியமான திறனாய்வுக்குப் பிறகு, சிறந்த கவிதைகள் உருவாகின.


பட்டறைக்குப் பிறகு, "ஊமைச்சனங்கள்" தலைப்பில் கவியரங்கு நடைபெற்றது. இதனை சை. பீர்முகம்மது தம் தலைமைக் கவிதையை முன்னுரையாகக் கொண்டு இக்கவியரங்கை வழிநடத்திச் சென்றார். சந்துரு, கலைச்செல்வி, எஸ். தினகரன், மு. துரைராஜு, வ. முனியன், ந. பச்சைபாலன் ஆகியோர் கவியரங்கில் பங்கேற்று, சிறந்த கவிதைகளைப் படைத்தனர். படக் கவிதைகளும் படைக்கப்பட்டன. மறுநாள் 2000ஆம் ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உள்ளூர் இதழ்களில் வெளிவந்த புதுக்கவிதைகளைக் கவிஞர் கோ. புண்ணியவான் ஆய்வு செய்து, கட்டுரை சமர்ப்பித்தார். சிறந்த மூன்று கவிதைகளுக்குப் பரிசளிக்கப்பட்டது.

3.2.6 ஆறாவது புதுக்கவிதைத் திறனாய்வுக் கருத்தரங்கு


ஒவ்வொரு கருத்தரங்கிலும் படிப்படியான முன்னேற்றங்களைக் காண்கிறோம். புதுப் புது தேடல்களுக்கு வ௞யமைக்கிறோம். படைப்புகளின் மீது நடத்தப்படும் திறனாய்வுகளும், கருத்துப் பரிமாற்றங்களும் தரமான இலக்கியம், இலக்கியவாதிகள் உருவாக வழி வகுக்கும். அவற்றிற்கு புதுக்கவிதைத் திறனாய்வுக் கருத்தரங்குகள் களமாக அமைந்து வருகின்றன எனக் கூறி 24, 25.3.2001-இல் மலாக்காவில் நடைபெற்ற ஆறாவது புதுக்கவிதை திறனாய்வு கருத்தரங்கைத் தொடக்கி வைத்தார், ஏற்பாட்டுக் குழு தலைவர் பெ. இராஜேந்திரன்.

முதல் நிகழ்வாக, "கேமரன் மலையோரக் கவிதை" எனும் புதுக்கவிதை தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. அதனையடுத்து "புதுக்கவிதையில் முரண் உத்தி" எனும் தலைப்பில் டாக்டர் வே. சபாபதி அவர்கள் கட்டுரை ஒன்றைப் படைத்தார்.

பின்னர், வழக்கம் போல் குழுக்கள் பிரிக்கப்பட்டு, "முரண் அணியில்" கவிதை எழுதும்படி பணிக்கப்பட்டது. அரை மணித்துளிகளுக்குப் பிறகு, கவிதைகள் வடிக்கப்பட்டன. அதன் தொடர்பான விமர்சனங்களும் விறுவிறுப்பான விவாதங்களும் நடைபெற்றன. பட்டறையில் தீட்டிய புதுக்கவிதைகளில் ஒன்று இது.

"குடும்பக் கட்டுப்பாடு
பிரச்சாரக் கூட்டம்
தலைவருக்கு
அவசர அழைப்பு
மனைவிக்குப்

பத்தாவது பிரசவம்"

இரண்டாம் நாளின் முதல் அங்கமாக நவம்பர், டிசம்பர் (2000), ஜனவரி (2001) ஆகிய மாதங்களில் வெளிவந்த புதுக்கவிதைகளைப் "புதுப்பார்வை" எனும் தலைப்பில் ஆய்வாளர் க. உதயகுமார் ஆய்வு செய்தார். சுமார் 650 கவிதைகள் ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டு, அலசி ஆராயப்பட்டது.


ஆய்வரங்கத்திற்குப் பிறகு, படக் கவிதை எழுதும் போட்டியில் சிறந்த கவிதைகளுக்குப் பரிசு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விவாத அரங்கம் அரங்கேறியது. புதுக்கவிதை "சிக்கலும் சிணுங்கலுமாய் இருக்க வேண்டுமா?" அல்லது "நேரடியாக விஷயத்தைப் புரிய வைக்க வேண்டுமா?" எனும் தலைப்பில் விவாதம் தொடங்கியது. நல்ல பல கருத்துகள் சிந்தையைத் தூண்டிவிட்டது. முடிவில் "எளிமைத் தன்மையே புதுக்கவிதைக்குச் சிறப்பு" என ஏகமனதாக அனைவரும் ஏற்றுக் கொண்டனர். எல்லா அங்கங்களும் பயன்தரும் வகையில் அமைந்தன.


ஏழாவது புதுக்கவிதைத் திறனாய்வுக் கருத்தரங்கு

கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 8, 9 ஆகிய நாட்களில் குளுவாங் நகரில் சற்றே மாறுபட்டு தோட்டப்புற சூழலில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.

"உலக அங்கீகாரத்தைப் புதுக்கவிதைப் பெற்றிருக்கிறது" எனும் செய்தியை முன்னுரையாகக் கொண்டு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் ஆதி. குமணன் அவர்கள், ஏழாவது புதுக்கவிதை திறனாய்வுக் கருத்தரங்கைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

நம்மாலும் இங்குத் தரமான படைப்புகளைப் படைக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொள்ளுங்கள். அந்த நம்பிக்கை மட்டும் போதாது. ஆசை மட்டும் போதாது, அதற்கான உழைப்பும் படிப்பும் சிந்தனையும் வேண்டும் என்று கூறினார். அவரைக் கவர்ந்த கடந்த கருத்தரங்கில் படைக்கப்பட்ட ஒரு கவிதையைச் சுட்டிக் காட்டினார்.
"ஊரைச் சுற்றி
அறிவிப்புப் பலகைகள்
குப்பைகளைக் கண்ட
இடத்தில் வீசாதீர்கள்!
இனி குப்பைத் தொட்டியிலும்
வைக்க வேண்டும்
தயவு செய்து
குழந்தைகளை இங்கே
வீசாதீர்கள்!"

பின்னர் "மலாக்கா கடலோர கவிதைகள்" எனும் புதுக்கவிதை தொகுப்பு நூலை திரு. ஆதி.குமணன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தார்.
இதனையடுத்து "புதுக்கவிதையில் தொன்மக் கூறுகள்" எனும் தலைப்பில் இணைப் பேராசிரியர் டாக்டர் வே. சபாபதி அவர்கள், புதுக்கவிதை இலக்கியத்தில் தொன்மக் கூறுகளின் பயன்பாட்டையும் தொன்மங்கள் கருத்துப் புலப்பாட்டு உத்தியாகப் பயன்படும் விதங்கள் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார்.

அடுத்த அங்கமாக பயிற்சி பட்டறை ஆரம்பமானது. தொன்மக் கூறுகள் கொண்டு கவிதைகள் இயற்றப்பட்டன. அவற்றில் தெறித்த கவிதைகள் சில இங்கே தரப்பட்டுள்ளன.


"அய்யா முத்தப்பா
என்னை நம்பி
எட்டுச் சீவன்
உளிக்கு
ஓல வச்சி
பால தண்ணிராக்கி
சிவப்பு பொட்டுல
எங்க பொலப்ப
கண்ணீராக்கிடாதப்பா"

எனும் கவிதையில் "முத்தப்பா என்பது தொன்மம்" என்றும் நம் முப்பாட்டன் வழியில் முத்தப்பனை வணங்கும் வழக்கம் இருந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது.

அடுத்து கவிஞர் அறிவுமதி அவர்கள் இலக்கிய உரையாற்றினார்.

"உலகத்தின் பரபரப்பான சூழலுக்குமிடையே மலேசிய மண்ணில் மட்டும் இலக்கிய வளர்ச்சிக்காகத் திட்டமிட்டு செயல்படுவது என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது" என்று கவிஞர் அறிவுமதி உணர்ச்சிப்பூர்வமாகக் கூறினார். "நம்முடைய இலக்கியப் பார்வைகள் கடந்தகால வரலாறுகளையும் நமது வேர்களையும் அறிந்து கொள்வதில் இளைய தலைமுறையினர் அதிக நாட்டம் கொள்ள வேண்டும்" எனும் ஆலோசனையை முன் வைத்தார். இன்றைய இந்த முயற்சி நாளைய விளைச்சலுக்கு அடித்தளம் அமைக்கும் என்ற நம்பிக்கையை விதைத்தார்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவர் ஹாஜி சை.பீர்முகம்மது அவர்கள் 2001ஆம் ஆண்டின் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய நான்கு மாதக் கவிதைகளை ஆய்வு செய்தார். அவற்றில் பெரும்பான்மையான கவிதைகள் காதலைப் பாடுபொருளாகக் கொண்டிருக்கின்றன என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்


32.8.எட்டாவது புதுக்கவிதைத் திறனாய்வுக் கருத்தரங்கு

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் எட்டாவது புதுக்கவிதை திறனாய்வுக் கருத்தரங்கு (மார்ச் 2002) திங்கள் 2, 3 ஆகிய நாட்களில்) 2002ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 2, 3ஆம் தேதிகளில் கோலாலம்பூரில் கோலாகலமாக நடைபெற்றது. கருத்தரங்கின் தொடக்க விழா மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு. ஆதி. குமணன் அவர்களின் உரையோடு தொடங்கியது.

இந்நிகழ்வுக்கு தமிழகத்திலிருந்து வருகை புரிந்திருந்த கவிஞர் பழநிபாரதி அவர்களின் இலக்கிய சொற்பொழிவு புதுக்கவிதைப் பிரியர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்தது.


அடுத்த அங்கமாக புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவராக விளங்கிய அமரர் ஏம்.ஏ. இளஞ்செல்வன் அவர்களின் பெயரால் புதுக்கவிதைப் போட்டி நடத்தப்பட்டு இக்கருத்தரங்கில் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்குப் பின்னர் வழக்கம் போல் கவிதைப் பயிற்சிப் பட்டறை குழு முறையில் நடைபெற்றது. கவிஞர் பழநிபாரதி தலைமையிலும் மேற்பார்வையிலும் பட்டறை இயங்கியது. சிறந்த கவிதைகள் பல படைக்கப்பட்டன. மறுநாள் 2001ஆம் ஆண்டு ஜூன், ஜூனை, ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய நான்கு மாதப் புதுக் கவிதைகள் திறனாய்வை இராஜம் இராஜேந்திரன் மேற்கொண்டார். 2001ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய நான்கு மாத புதுக்கவிதைகளை டாக்டர் மா. சண்முகசிவா அவர்கள் ஆய்வு செய்து ஆய்வுரையைச் சமர்ப்பித்தார்.

3. 2.9 ஒன்பதாவது புதுக்கவிதைத் திறனாய்வுக் கருத்தரங்கு

போர்ட்டிக்சன் கடற்கரையில் 2002ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5, 6ஆம் தேதிகளில் கருத்தரங்கு நடைபெற்றது. சங்கத் தலைவர் ஆதி. குமணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் "பெட்டாலிங் ஜெயா கருத்தரங்கு கவிதைகள்" எனும் நூல் வெளியீடு கண்டது. வழக்கம் போல எல்லா நிகழ்வுகளும் சிறப்பாக நடந்தேறி பயனுள்ளதாக அமைந்தன. குறிப்பாக, பா. ராமு அவர்களின் 2000ஆம் ஆண்டு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாத புதுக்கவிதைகளின் ஆய்வு, ம. கனகராஜன் அவர்களின் 2000ஆம் ஆண்டு ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாத புதுக்கவிதைகளின் ஆய்வு ஆகியவை சமகால கவிதைகளின் போக்குகளைத் துல்லிதமாகவும் கூர்மையாகவும் படம்பிடித்து காட்டியுள்ளன.

ஆய்வாளரின் கவனத்தை ஈர்த்த பல கவிதைகளில் ஒரு கவிதை இது.

"என் நண்பனாகவே
நீ இன்று
வாழ்கிறாய்
உண்மையில்
இன்று வரையிலும்
நான்
உனக்குத் தோழியாகவே
நடித்துக் கொண்டிருக்கிறேன்
என் காதலை மறைத்து! "

3.2.10 பத்தாவது புதுக்கவிதைத் திறனாய்வுக் கருத்தரங்கு

இக்கருத்தரங்கு 5.6.2005இல் பினாங்கு துங்கு பைனுன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் புதுக்கவிதை பற்றாளர்கள் உட்பட அதிகமான பயிற்சி ஆசிரியர்கள் கலந்துகொண்டது நிறைவானதாகும். அடுத்த தலைமுறையை நோக்கி பயணிக்கப்பட்ட இந்த இலக்கியப் பயணத்தில் நீண்டதொரு இளைஞர் அணி வரிசைப் பிடித்து நின்றது, புதுக்கவிதைத் துறைக்கு கிடைத்த ஓர் அங்கீகாரமாக கருதப்படுகிறது.

பட்டைத் தீட்டும் கவிதைப் பட்டறை, படக்கவிதைகள், திடீர் கவிதைகள், பேருந்து கவிதைகள் ஆகிய நிகழ்வுகளில் புதுக்கவிதை ஆர்வலர்கள் தங்களின் முழுமையான பங்களிப்பைச் செய்து பயனடைந்தனர். கோ. புண்ணியவானின் 2002ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர், 2003ஆம் ஆண்டு ஜனவரி ஆகிய நான்கு மாதப் புதுக் கவிதைகளின் திறனாய்வுக் கட்டுரையில்,

"பால்மரக் காடுகளில்
எழுதி வைத்த
எங்கள் முதுகெலும்புகளில்
முகவரி இன்னும் தெரியவில்லை"


எனும் கவிதையும்

"உயர்வான செய்தி
அனுதினம்
விளம்பரம் செய்யும்
செய்தித்தாள் வானம்"

கவனத்தை ஈர்த்த கவிதைகளாக இடம்பெற்றன.
இக்கருத்தரங்கிற்குச் சிகரம் வைத்தாற்போல "மரபையையும் புதுமையையும்" முதல் முறையாக ஒரே மேடையில் சரியாசனத்தில் அமர்த்திய பெருமை பெ. இராஜேந்திரன் அவர்களையே சாரும். இலக்கணவாதியும் இலக்கியவாதியுமான கவிஞர் சீனி நைனா முகமது அவர்கள் "ஓசை" எனும் தலைப்பில் கவிதைகளின் வேர்களை அணுகும் முறையை அனுபவப்பூர்வமாக எடுத்துரைத்தார். மேலும் தனது உரையில் படைப்பாளி எப்பொழுது தன் படைப்புகளுக்குள் காணாமல் போகின்றானோ அப்போதுதான் அவனுக்கு அந்த ஓசையோடு உணர்ச்சியோடு அது வரும். இலக்கணத்தையும் சரி கணிதத்தையும் சரி புரிந்துகொள்ள வேண்டும். மனப்பாடம் செய்யக் கூடாது. மனப்பாடம் செய்தால் மறந்து விடும். ஆகவே, புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டால் மறக்காது. ஆகவே, அந்தக் காட்சிப் படிமத்தோடு அதை உள்வாங்கிக் கொண்டீர்கள் என்றால் ஓசையை மிகவும் அழகாகவும் தெளிவாகவும் கையாள்வீர்கள் எனும் விளக்கத்தையும் ஆலோசனையையும் முன்வைத்தார்.

3.2.11 பதினோறாவது புதுக்கவிதைத் திறனாய்வுக் கருத்தரங்கு

தஞ்சோங் மாலிம் நகரின் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய மண்டபத்தில் இக்கருத்தரங்கு 14, 15 பிப்ரவரி 2004இல் நடைபெற்றது. "புதுக்கவிதையில் உலகப் பார்வை" எனும் தலைப்பில் விளக்கவுரை ஆற்றினார் நா. பச்சைபாலன்.
"தனிமனித உணர்வுகள், உறவு, சமூகம், நாடு, உலகம், பிரபஞ்சம் என விரிய வேண்டும். ஆனால், கவிஞர்களிடையே உலகப் பார்வை என்பது மிகக் குறைவாகவே உள்ளது. நமக்குப் புதிய வாசிப்பு அனுபவம் வேண்டும், பாடுபொருள் பன்முகம் ஆக வேண்டும். சுதந்திரமாக எழுதும் போது படைப்பின் தரமும் உயர்வு காணும். உத்திகளோடு பாடுபொருள்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். இதனை மையமாக வைத்து கவிதைப் பயிற்சிப் பட்டறை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பேருந்து கவிதைகள், படக்கவிதைகள், கவிராத்திரி கவிதைகள் ஆகிய அங்கங்களும் கருத்தரங்கிற்கு மெருகூட்டின.

அடுத்து, கருத்தரங்கின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக கவியரங்கம் நடைபெற்றது. பா. அ. சிவம் தலைமையில் பெண்ணியம் என்ற தலைப்பில் இந்தக் கவியரங்கம் அமைந்தது. 2003ஆம் ஆண்டின் செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதப் புதுக்கவிதைத் திறனாய்வு சீ. அருணாசலம் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. அந்த நான்கு திங்கள் கவிதைகளின் பாடுபொருள்களின் தளம் சற்று வேறுபட்டிருப்பதாகவும் போராட்ட உணர்வின் தாக்கம் சற்று தூக்கலாக இருப்பதாகவும் ஆய்வாளர் சுட்டிக்காட்டினார்.

அவர் மனதை வருடிய கவிதைகளில் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.


"விண்வெளி மீறினால்
அறிவியல் ஆராய்ச்சியாம்
வேலியை மீறினால்
மட்டும்
ஓடுகாலியாம்..! "
"உன்னைக் கொடுமைப்படுத்திய
ஆண்மையைத் தண்டித்து
வன்முறைக் கடிதம்

எழுதி விடுகிறேன்
இனி வேண்டாம்
தாலி என்ற இரண்டெழுத்தில்
வன்முறை"

"இந்நாட்டு புதுக்கவிதை வளர்ச்சியென்பது தனிப்பட்ட ஆளுமையாலோ அல்லது ஒரு குழுமத்தாலோ உருவாக்கப்பட்டதல்ல. இலக்கியத்தின்பால் ஈடுபாடு கொண்ட அனைவரின் கைகோர்த்தலால் இன்றைய வளர்ச்சியின் மீது நாம் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறோம். இக்கூற்றினை அறிந்து உள்வாங்கிக் கொண்டு, இன்றைய கவிஞர் பெருமக்கள் கவிதைகளைப் படைத்திடல் வேண்டும். கவிதையை எழுதும் முன் அதன் தொடர்பான செய்திகளை அறிந்திடல் சாலச் சிறந்ததாகும். வாசிக்கும் பழக்கத்திற்குள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிட வேண்டும். பாடுபொருளின் மீதும் அதன் கருத்துருவாக்கத்தின் மீதும் தத்துவார்த்தமான மீள் பார்வை உணர்வு வேண்டும்" என சீ. அருணாசலம் அவர்கள் புதுக்கவிதையாளர்களைக் கேட்டுக் கொண்டார்.

அடுத்த நிகழ்வாக புதுக்கவிதைத் திறனாய்வுக் கருத்தரங்கில் சிறப்பம்சமாக பட்டிமன்றம் நடைபெற்றது. "இளைய சமுதாயத்தை அதிகம் கவர்வது சினிமாவா? இலக்கியமா?" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் "போர்ட்டிக்சன் - பினாங்கு கவிதைக் கருத்தரங்கு்" தொகுப்பு நூலை வெளியிட்ட, தண்டாயுதபாணி ஆலயத் தலைவர் டாக்டர் ராமநாயுடு அவர்கள், "நான்கு மாதங்களுக்கு ஒருமுறை புதுக்கவிதைக்குத் திறனாய்வுக் கருத்தரங்கு நடத்தப்படுவதோடு அந்த நிகழ்ச்சிகளை எல்லாம் தொகுத்து புத்தகமாகவும் வெளியிடுவது மிகப் பெரிய பணியாகும். அதனைச் சிறப்பாகச் செய்து வரும் எழுத்தாளர் சங்கத்தை மனமாரப் பாராட்டுகிறேன்" என்றார்.

இறுதியாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தால் நடத்தப்பட்ட எம்.ஏ. இளஞ்செல்வன் மூன்றாமாண்டு நினைவு புதுக்கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

3.2.12 பன்னிரண்டாவது புதுக்கவிதைத் திறனாய்வுக் கருத்தரங்கம்

10, 11 ஜூலை 2004இல் மலாக்கா - ஆயர் குரோ எனுமிடத்தில் 12ஆவது கருத்தரங்கு நடைபெற்றது. 11ஆவது கருத்தரங்கின் தொகுப்பு நூலான தஞ்சோங் மாலிம் கருத்தரங்கு கவிதைகள்" எனும் நூல் சங்கத் தலைவர் பெ. இராஜேந்திரன் அவர்களால் வெளியீடு செய்யப்பட்டது. பின்னர் "தண்ணீரில் போட்ட கோலமாய் கனவில் வரைந்த ஓவியமாய்" எனும் தலைப்பில் பேருந்து கவிதைகள் படைக்கப்பட்டு மூன்று சிறந்த கவிதைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து 2004இன் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதக் கவிதைத் திறனாய்வை கே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சமர்ப்பித்தார். அவர் தமது ஆய்வுரையில், இந்த நான்கு மாதக் கவிதைகளை வாசித்துப் பார்க்கும் போது என்னையும் அறியாமல் என் விழிகள் ஒருசில கவிதைகளை மொய்க்கத் தவறவில்லை. கவிஞர்களின் சிந்தனா சக்தியையும் அவர்கள் கையாண்ட உத்திகளையும் கண்டு நம் நாட்டிலும் எத்தனையோ படைப்பாளிகள் இலைமறைகாயாக இருப்பது கண்டு மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்தது. ஏனோதானோ என்று எழுதிய காலம் இப்பொழுது சற்று மாறத் தொடங்கி இருக்கிறது. அதற்கு இந்த 4 மாதத்தில் உள்ளூர் இதழ்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்த கவிதைகளில் என் கவனத்தை ஈர்த்திழுத்த இந்தக் கவிதைகள் சான்று எனக் கூறினார்.

"காலம் மாறி
பருவம் மாறி
உருவம் மாறி போயி

நீ மகள வீட்டுலேயும்
நான் மகன் வீட்டுலேயும்
இருக்கறப்ப மட்டும்

புரியவேயில்லை
பிள்ளைங்களுக்கு
நம்ம காதல்

காதலர் தினம்
காதலுக்குத்தானாம்
உலகமே சொல்லுது

நாம மட்டும்
ஒருத்தரை ஒருத்தர்
பார்க்க முடியாம...
.........................................
ஒன்னா இருக்கலாம்
வா செல்லம்மா...
முதியோர் இல்லத்துக்கு!

பிள்ளைகளிடம் பெற்றவர்கள் சொல்லியழ முடியாத துயரத்தை, தவிப்பைக் கவிஞர் கவிதையாய் வடித்திருக்கிறார். நமது பண்பாட்டின் கண்ணாடிச் சுவர்களை உடைத்தெறியாமல்.

பெண்களைப்
பூக்களோடு ஒப்பிடாதீர்கள்
பூக்களெல்லாம்
இரத்தக் கண்ணீர்
வடிப்பதில்லை!
பெண்களை
நிலவுடன் ஒப்பிடாதீர்கள்
நிலவு பாலியல் கொடுமையால்
இம்சிக்கப்படுவதில்லை!

இக்கருத்தரங்கிற்கு சிறப்பு வருகை புரிந்த தமிழகக் கவிஞர் சிநேகன் அவர்களின் இலக்கிய உரையில், "இங்கு கவிதையை வளர்க்க ஓர் இயக்கத்தையே நடத்திக் கொண்டிருக்கிறது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம். சத்தமில்லாது ஒரு கவிதை யுத்தம் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. 50 வயது கடந்தவர்களையும் இளைய தலைமுறையினரையும் ஒன்றாகச் சேர்த்து இலக்கியம் படித்து கொடுக்கும் புதுமையை நான் இங்கு பார்க்கிறேன்" என்று குறிப்பிட்டார். மேலும் அவருடனான கலந்துரையாடலின் போது கருத்து பரிமாற்றம், அனுபவப் பகிர்வு, வழிகாட்டல் முதலியன புதுக்கவிதை ஆர்வலர்களுக்கு உற்சாகத்தையும் உந்துதலையும் தந்தன.

3.2.13 பதின்மூன்றாவது புதுக்கவிதைத் திறனாய்வுக் கருத்தரங்கு

இக்கருத்தரங்கு 26. 27 பிப்ரவரி 2005இல் மலாயா பல்கலைக்கழகத்தில் நடந்தேறியது. வழக்கமான அங்கங்களுடன் பா.அ. சிவம் அவர்களின் 2004ஆம் ஆண்டின் மே, ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதக் கவிதைத் திறனாய்வு, மா. நவீன் அவர்களின் 2004ஆம் ஆண்டின் செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாத கவிதைத் திறனாய்வு ஆகியவை கருத்தரங்கிற்கு வளம் சேர்த்தன.

மேலும் "கவிஞர் விசாரணை அரங்கம்" இக்கருத்தரங்கில் புதிய அங்கமாக இணைக்கப்பட்டிருந்தது. இதில் கவிஞர் ஏ. தேவராஜனின் படைப்புகள் சக கவிஞர்களால் விமர்சனம் செய்யப்பட்டன. பின்னர் அவரை விசாரணை கூண்டில் ஏற்றி வைத்து பல கேள்வி கணைகள் தொடுக்கப்பட்டன. எந்த ஓர் ஈகோ தன்மையும் தலைதூக்காமல் எல்லா கேள்விகளுக்கும் விரிவான விளக்கம் அளித்தார் கவிஞர். இத்தகைய நிகழ்வு ஆரோக்கியமான கவிதைச் சூழலை உருவாக்கி விட்டிருந்தது. பின்னர் "மலாக்கா ஆயர் கெரோ கருத்தரங்கு கவிதைகள்" எனும் நூல் சங்கத் தலைவர் பெ. இராஜேந்திரன் அவர்களின் தலைமையில் வெளியீடு கண்டது.

3.2.14 பதினான்காவது புதுக்கவிதைத் திறனாய்வுக் கருத்தரங்கு

இக்கருத்தரங்கு கோலசிலாங்கூர் எனுமிடத்தில் 7,8 அக்டோபர் 2006-இல் நடத்தப்பட்டது. கடந்த கருத்தரங்குகளில் நடைபெற்ற எல்லா அம்சங்களும் மிகவும் உற்சாகமான முறையில் நடைபெற்றன. 2006ஆம் ஆண்டின் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் வெளிவந்த கவிதைகளை பா. அ. சிவம் ஆய்வு செய்தார். தமது ஆய்வுரையில் நமது நாட்டில் கவிதைகளின் போக்கும் நிலையும் இளம் தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளர்களால் நவீன கவிதைத் தளத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. இடைப்பட்ட ஒன்றரை ஆண்டில் இந்நிகழ்வு, இம்மாற்றம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இது முந்தைய அனுபவங்கள் மற்றும் வாசிப்பின் நீட்சியாகத்தான் இருக்க முடியும்.
நவீன கவிதைகள் புதிய மொழிக்கான வெளிப்பாட்டை உணர்த்தி வரும் வேளையில், சொற்களுக்குள் கவிதையை முடக்கிவிடும் தன்மைகள் இங்கு மலிவாகவே கிடைக்கின்றன என குறிப்பிட்டார்.

ஆய்வாளரைப் பாதித்த கவிதைகளில் சில இங்கே தரப்பட்டுள்ளன.

நீ
திரையிலும்
சுவரொட்டிகளிலும்
பார்த்து இரசிக்கிறாயே
அந்தப் பெண்
நானல்ல...

ஆடைகளுக்காக
அம்மணமாகவும்
காலுறைகளுக்காக

கால்களைக்
காட்டிக்
கொண்டும்
கண்களுக்காக
குருடாகவும்
நிற்கும்
அந்தப் பெண்
நானல்ல!"


"அப்பாவையாவது
யாரோ ஒரு
பொம்பளையோடு
அடிக்கடி
அந்த அறையில்
பார்க்க முடிந்திருக்கிறது...!

ஏனோ தெரியவில்லை,
அம்மாதான்
கடைசிவரை
முனுசாமியையோ
கருப்பையாவையோ
அங்கு
அழைத்து வந்ததேயில்லை..!

தொடரும் /......

எழுதியவர் : திருமதி இராஜம் இராஜேந்தி (20-Oct-14, 5:01 pm)
சேர்த்தது : வேலு
பார்வை : 659

மேலே