மழை இரவில் நடைப்பயணம் உன்னோடு-வித்யா

மழை இரவில் நடைப்பயணம் உன்னோடு-வித்யா

ஒளியின் நிழலாய்
மங்கிய இரவு
மெளனமாக நான்
வார்த்தைகளோடு நீ
மேடும் பள்ளமுமாய்
நமக்கான பாதை.......!!

மூச்சிரைக்க மூச்சிரைக்க
முதலுதவிக் கேட்டுக்
காற்று......

முன்னறிவிப்பின்றி
எதிர்பாரா முத்தம்தரும்
நமக்கான மழை.......

முன்னிரவில்
விண்வெளியில்
தன்னைத்
தானேப்பதுக்கும்
நிலா.....

வழிநெடுகிலும்
வானம்மூடிக்
கிளைப்பரப்பிக்
காத்திருக்கும்
மேகம்.......

வானவில் சிறகுகள்
வானின் கரு"மை"யில்
நனைத்து என் பெயர்
தீட்டிக் கொண்டிருக்கும்
உன் இதழ்கள்.......

பார்வை நீட்சிகளின்
விருப்பமில்லா உராய்வுகளில்
தீப்பொறிக் கக்கும்
என் இமைகள்......

கரையும் நம் பாதங்களில்
பயணம் தொடரும் பாதைகள்

இப்படியே
எதுவுமே பேசாமல்
உணர்வுத் திருவிழாவில்
நமக்கான மழையில்
குடைபிடித்துக் கொண்டே

ஓர் உலகம்
முடிந்த இடத்தில்
தொடங்கி முடிவில்லாப்
பாதையில் மெளனமாக
நனைகிறது
நமக்கான இப்பயணம்........!!

எழுதியவர் : vidhyaa (2-Nov-14, 10:33 pm)
பார்வை : 181

மேலே