மங்கையர்க்கரசி

கார்முகில் போலொருச் செந்தமிழ் மங்கை
வைகறைத் துயிலெழுந்து மஞ்சள் பூசி
நீராடி மேனியெங்கும் சவ்வாது மணக்க
மங்கள உடையணிந்து கூத்தாடும் கூந்தலை
அழகாய் நெய்து மதிமயக்கும் மல்லிகைச் சூடி
நெற்றியிலே செந்தூரத் திலகமிட்டு
வெள்ளி கொலுசு சலசலக்க கண்ணாடி
வளையல் கலகலக்க முத்து மாலை பலபலக்க
கல் பதித்த மூக்குத்தி, காதணி அணிந்து
விழியோரம் நாணத்தை பட்டும் படாமல் தீட்டி
செவ்விதழ் விரித்தொரு புன்னகைப் பூக்க
அடிமேல் அடிவைத்து அன்னமவள் நடந்து வந்தால்!

அடடா... இவள் ஆடவன் கொடுத்தக் கொடையோ!
இல்லை... பிரம்மன் வடித்தச் சிலையோ! இறைவா…
இத்தங்கப் பதுமையைக் காண இமைக்கின்ற
இருவிழிகள் போதாதே; என்னுடல் முழுதும் விழியாக்கி
இமைக்காத வரமொன்றைத் “தா” என்று யாசிப்பேன்!
யாசகம் கேட்ட எனை இறைவனாக்கி அவன்
யாசிப்பானோ என்றும் கூட யோசிப்பேன்!

எழுதியவர் : கார்த்திக் நித்தியானந்தம (11-Nov-14, 1:40 am)
பார்வை : 974

மேலே