சனி பெயர்ச்சி சிறப்பு கட்டுரை

நண்பர்களுக்கு வணக்கம்,
இன்று சனி பெயர்ச்சியின் பலன்கள் பரபரத்து கொண்டிருக்கிற இந்த வேளையில் என் சிந்தனையில் தோன்றிய சனி பெயர்ச்சி விசயங்களை இக் கட்டுரையின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சனி பெயர்ச்சி என்றதும் ஏதோ நரகாசுரன் நம் வீட்டிற்க்கே வந்தது போல் ஒரு அலறல் நம் மக்களிடம். இந்த சனி பற்றிய மக்கள் பயத்தை சனி பெயர்ச்சி பலன்கள் வேறு பணமாக்கி கொண்டிருக்கிறது புத்தக வடிவில்.
சனி பெயர்சிஎன்பது பிரபஞ்சத்தில் இயற்கையாக நடக்கிற சனி கிரகத்தின் நகர்வுதானே. சனி என்கின்ற கிரகத்தின் நகர்வு எப்படி ஒரு நரகாசுரன், பத்மாசுரன் அளவுக்கு ஒரு பயத்தை மக்கள் மத்தியில் உண்டு பண்ணிற்று என்பது என் மிக பெரிய ஐயப்பாடு. கிரக நகர்வுகள் என்பது தினந்தோறும் நிகழ்ந்து கொண்டுதானே இருக்கிறது. சந்திரன்,சூரியன்,செவ்வாய் ,புதன் உட்பட அனைத்து கிரகங்களும் தன பாதையில் அவற்றின் வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்றன. 71/2 ,அஷ்டம,அர்தாஷ்ட, கண்டம் என்ற இடங்கள் எல்லா கிரகங்களுக்கும் தானே இருக்கிறது.சனி என்ற ஒரு கிரகத்தை மனித குலத்திற்கே எதிரானவன் என்ற தன்மையை யார் உண்டு பண்ணியது?.
சனி என்பது நம்முள் மூளையில் சுரந்து முதுகு தண்டின் வழியே உள்ளிறங்கி தண்டு வடத்தை இயக்குகிற ஒரு சக்தி வாய்ந்த திரவத்தின் இயங்கு நிலை (விரிவாக வேண்டுமெனில் என் சனி கட்டுரை என் டைம் லைனில் படியுங்கள்) அவரவர் பிறப்பு நிலையில் சனி இருக்கிற தன்மைக்கு ஏற்றவாறு இப்பொழுது சனி நகர்வு (சனி பெயர்ச்சி) தன வேலையை நம்முள் செய்யும் அவ்வளவே.
இதே போல் தினமும் சந்திரனும்,சூரியனும் உட்பட 9 கிரகங்களும் தன நகர்வில் ஒரு மாற்றத்தை நம் மனதில்,உடலில், எண்ணங்களில் செய்து கொண்டேதான் இருக்கின்றன.
மேலும் சனி ஒன்றும் பகை காரகன் அல்ல.சனி திசையில் வாழ்க்கையின் உச்சத்துக்கு சென்ற எத்தனையோ தொழிலதிபர்களை எனக்கு தெரியும்.அதேபோல் சனிதிசையில் ஆன்மீக சிந்தனையில் மேல் இடத்திற்கு போன சிந்தனையாளர்களையும் நான் அறிவேன்.சனி நட்சத்திரங்களான பூசம்,மிக பெரிய அர்பணிப்பு, குணமும் தெய்வீக சிந்தனையும்,சகிப்பு தன்மையும் கொண்டது.அடுத்து அனுஷம்,தீவிரமான செயல்திறன் கொண்டது, கொண்ட கொள்கையில் வெற்றி வாகை சூடுகிற தன்மையும், அடுத்து உத்திரட்டாதி தெய்வீக சிந்தனையும்.சனாதன தர்மத்தை கடைபிடிப்பதுமான, மேலும் ஆன்மீக வடிவம். உழைப்புக்கு ஆதாரம், சிந்தனைகளை செயல்வடிவம் கொடுத்தல், போன்ற உயரிய விசயங்களை உள்ளடக்கிய உன்னதமான கிரகத்தின் தன்மைகள் எப்படி மக்கள் பயப்படும்படி போனது.
சரி மேற்கூறிய தன்மைகள் கிரக நகர்வில் நம் ஜனன கால தன்மையின் அடிப்படையில் மாறுபாடுகளை உண்டு பண்ணும். என்பதும் உண்மையே இருந்தாலும் அது இயற்கைதானே.சனி மெதுவாக நகர்கிற கிரகம், ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் சஞ்சரிக்கிற கிரகம். அதன் தன்மை நம்முள் விதைத்திருக்கிற (ஜனன காலம்) சனி தன்மைக்கு ஏற்றவாறு செயல்படுத்தும். அவ்வளவே.இதை புரிந்து கொண்டால் சனி என்பவர் மிக பெரிய வாழ்வியல் அனுபவங்களை நமக்கு வழங்குவார். மேலும் ஜனனத்தில் சனியின் தன்மைகளான இருப்பிடம்,எடுத்திருக்கிற ஆதிபத்தியம்,ஏறிய நட்சத்திரம்,நடப்பு திசா புத்தி போன்றவை அடிப்படையில் தானே கணக்கிட வேண்டும்.அதை தவிர்த்து இந்த ஊடகங்களும், சில ஆன்மிக பத்திரிக்கைகளும் சனியை பற்றிய ஒரு வித பயத்தை மக்களிடையே உண்டு பண்ணுகிறது.
7 1/2 சனியா முடிந்தாய்,அஷ்டம சனியா அழிந்தாய், அர்தாஷ்ட சனியா விளங்காது,சப்தம சனியா கணவன், மனைவி உறவு அவுட்.என்ற எண்ணங்களை மக்கள் மாற்றி கொள்ளவும்,சனியின் தன்மைகளை புரிந்து கொள்ளவும் தான் இக்கட்டுரை. தேய்பிறை அஷ்டமியில் கால பைரவ வழிபாடும்,தியானமும்,நல்ல உணவு முறையும் சனியின் தன்மையின் வீரியத்தை குறைத்து நம்முள் நம்பிக்கையையும் செயல் தீவிரத்தையும் வளர்க்கும்.(என் சனியின் பரிகார வழிபாடு கட்டுரையை படிக்கவும்)
மிக துரித கதியில் இயங்குகிற அதாவது 2 1/2 நாள் ஒரு ராசியில் சஞ்சரிக்கிற சந்திரன் கூட வாழ்க்கையை புரட்டி போடக்கூடிய நிகழ்வுகளை நிகழ்த்த கூடிய வல்லமை படைத்த கிரகம். நம் வாழ்வில் நடந்த, நடக்கின்ற, நடக்ககூடிய அனைத்தும் ஏற்கனவே நம் பிறப்பில் தீர்மானிக்க பட்ட ஒன்றே. அதன் சூத்திர வடிவம் தான் ஜாதகம்.நடப்பவை அனைத்தும் நம் பிறப்பில் நமக்கு வழங்க பட்ட ஒன்றே.இப்பிறப்பில் என்னென்ன வெல்லாம் நமக்கு தேவையோ அவற்றை நமக்கு வழங்கியே நாம் இங்கே அனுப்பி வைக்க பட்டிருக்கிறோம் அவற்றை முழுமையாக அனுபவிப்போம் சனியை வரவேற்போம் அனுபவிப்போம் அனுபவம் பெறுவோம்.இன்னும் வரும்,........ அஸ்ட்ரோ கனகு.

எழுதியவர் : கனகரத்தினம் (19-Dec-14, 3:22 am)
சேர்த்தது : கனகரத்தினம்
பார்வை : 185

சிறந்த கட்டுரைகள்

மேலே