உலகம் அறியாத மனிதர்கள்

அது என்னப்பா பாரத ரத்னா உள்ளிட்ட நாட்டின் உயரிய விருதுகள் எல்லாம் சினிமா பிரபலங்கள் , அரசியல் வாதிகளுக்கு தான் கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமா..? இந்தியாவில் பெரும்பான்மை சமூகமான விவசாயிகளுக்கு எத்தனை பேருக்கு இந்த விருதுகள் எத்தனை கொடுக்கப்பட்டுள்ளது என்றால் நிட்சயம் ஒன்றும் இல்லை என்பதே உண்மை..

கடந்த 2013 ஆண்டு இதே விருது கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொடுக்கப்பட்டது . அவர் ஒரு விளையாட்டு பிரபலம்..இந்த துறையில் 25 ஆண்டுகளில் பல சாதனைகளை நிகழ்த்தியவர். அதில் யாருக்கும் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை.. ஆனால் இந்த சாதனைக்காக அவர் ஊதியமாக பல நூறு கோடிகளை விளையாடும் காலத்திலேயே பெற்றுவிட்டார்.பரிசுகளாக பல கோடி மதிப்புள்ள பெராரி கார் வரை இலவசமாக பெற்றுவிட்டார் .அதுவும் வரி செலுத்தாமலே .இருந்தும் கூட பாரதத்தின் உயரிய விருதான பாரத் ரத்னாவும் அவரை அலங்கரித்தது.

ஆனால் அதே நேரத்தில் இன்னொரு நபர் சத்தமில்லாமல் ஒரு மிகப்பெரும் சாதனை நிகழ்த்தி கட்டியுள்ளார்..நாம் வாழும் காலத்தில் . ஆனால் அப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியும் கூட அவருக்கு கோடிகளும் குவியவில்லை . சிறந்த இந்திய குடிமகன் என்று அரசின் உயர் விருதுகளாலும் இல்லை.. ஊடகங்களிலும் தொடர்சியான பாராட்டுக்களும் இல்லை.. மாறாக அவர் நிகழ்த்திய சாதனை மட்டும் என்றும் அழியாத புகழோடு இருக்கும் என்பது மட்டும் உண்மை. அவரது பெயர் ஜாதவ் பயேங் இவர் கிடத்தட்ட தனது வாழ்நாளின் 36 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு காட்டை உருவாக்கவே செலவிட்டு அதில் சாத்தித்தும் கட்டியுள்ளார்.நாட்டின் வன வளங்களை அழிக்கும் இன்றைய காலட்டத்தில் இதை சாத்தித்துள்ளார் .அதுவும் கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் காடுகளை தனி ஒரு மனிதராக யார் உதவியும் இன்றி எந்த ஒரு ஊதியமும் இன்றி ருந்தும் கூட பாரதத்தின் உயரிய விருது அவருக்கு இல்லை . மாறாக எதாவது ஒரு அரசியல் வாதிக்கு அல்லது சினிமா பிரப்பலங்களுக்கு இந்த விருதை கொடுப்பது பற்றி தான் இன்றுவரை சிந்தித்து வருகிறது நமது அரசுகள். ஏன் இப்படியான நிலை .. ஒருவேளை அவர் ஏழை என்பதால் , ஊடகங்களால் புகழ்சிகள் இல்லை என்பதால் நம் நாட்டின் உயரிய விருதுகள் கொடுக்கப்படவில்லையோ .. அவரை பற்றிய ஒரு சிறிய குறிப்பு..

யார் இந்த மனிதர் ?!

உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது…எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். ‘தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை’ என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!
கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்…!

யார் இவர் ?

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை ‘முலாய்’ என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன.
மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்…ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார் .

1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் ‘சமூககாடுகள் வளர்ப்பு’ திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை…!

மண்ணை வளப்படுத்த புது யுக்தி – எறும்பு

200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்…ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து ‘சிவப்பு எறும்பு’களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார்.

இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்…வெகு விரையில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்…இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் !!

இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.

2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர்.
அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

குடும்பம்:

மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.
டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். “இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் ” என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!
இவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.

மரங்கள் மட்டும் அல்ல:

தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 30,000 ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன…!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின் சொர்க்கபுரி தான் இந்த ‘முலாய் காடுகள்’ !!
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது…இரு ஆண்டுகளுக்கு முன் மிக ‘பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்’ இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். ‘ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்’ என வியந்திருக்கிறார்.

இப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்…ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை…இவரது புகைப்படத்தை மிகுந்த தேடுதலுக்கு பின் தற்போதுதான் கூகுளில் பார்க்கவே முடிந்தது...

இவரை போன்ற எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சமூகத்தின் , இயற்கையின் மீது அக்கறை கொண்ட நல்லுங்கள் தான் நம் நாட்டின் உயரிய சொத்துக்கள் .. ஆனால் ஏனோ நமது அரசுகளுக்கு இவர் செய்த சாதனைகள் , தியாகங்கள் எல்லாம் கண்களில் தெரியவில்லை போலும்.. எது எப்படியோ இவரின் சாதனை இயற்கையை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு உந்துதல் இவரது இந்த சாதனை எக்காலத்திலும் அழியாத ஒன்று என்றால் மிகையில்லை..


நன்றி- சமுதாய உரிமை

எழுதியவர் : (22-Dec-14, 7:08 pm)
பார்வை : 429

மேலே