திடீரென உதித்த ஒரு கவிதை

ஒரு
திங்கட்கிழமையன்று
தலைக்கு ஷாம்பூ
போடும்போது
திடீரென உதித்த
ஒரு கவிதையை,

அதிகாலை
அவசரங்களில்
எழுத மறந்து............

அலுவலகத்தின்
பணிநேர
மூச்சுத் திணறல்களில்
மூழ்கிப் போனதில்
அங்கேயும் எழுத
அவகாசம் கிட்டாமல் ............

மாலைப் பேருந்தில்
பெண் ஒருத்தி
பார்க்கிறாளென்று
அவளையே
கவனித்துக் கொண்டிருந்ததில்
அப்போதும்
எழுதத் தவறி ............

இல்லம் வந்து
லுங்கிக்கு மாறி
முகங்கைகால் கழுவி
தேநீர் சுவைத்து
அக்கடா எனச்சாய்ந்து
சன் மியூசிக் பார்த்து
கிடைத்த
விளம்பர இடைவேளையில்
ஒருவழியாய்
எழுதி முடித்தபோது ............

அது
வேறு கவிதை
ஆகிவிட்டிருந்தது !

எழுதியவர் : குருச்சந்திரன் (1-Feb-15, 2:41 am)
பார்வை : 209

மேலே