அனுராக் காதலர் தின சிறப்புச் சிறுகதை - நிறைவுப் பகுதி

"ராகவ்... நாளைக்கு எங்கூட ஒரு இடத்துக்கு வரமுடியுமா?" கேட்டது அனு.

"எ... எங்கே?"

"எதுக்கு பயப்படுறீங்க.... எங்க கிராமத்துக் கோவில்ல அக்கா வீடு சாமி கும்பிடப் போறாங்க... நீங்களும் வரணும்... அக்கா கூட்டிக்கிட்டு வரச்சொன்னா.... குறிப்பா குட்டிப்பொண்ணு உங்களைப் பாக்கணுமின்னா..."

".........." பேசாமல் நின்றேன்.

"ஏன்.... என்னாச்சு... சரி... வரப்பிடிக்கலைன்னா வேணாம்.." சொன்னவளின் முகம் சந்தோஷம் இழந்திருந்தது. அதைப் பார்க்க கஷ்டமா இருந்தது.

"இல்ல அனு.... இன்னொரு பிரண்ட்கூட வெளியே வர்றேன்னு சொல்லியிருந்தேன். இப்ப நீங்க வேற..." இழுத்தேன். ஆனா 'ங்க' போடுறவன் முதல்முறை அனுன்னு பேரைச் சொல்லியிருக்கேன்.

"சரி... உங்களுக்கு அந்த பிரண்ட் முக்கியம்ன்னா அவங்க கூடப் போங்க... நான் கிளாஸ்மெட்டுத்தானே... டியரஸ்ட் பிரண்ட் இல்லையில்ல... என்ன நான் ரொம்ப எதிர்பார்த்தேன்... அங்க போனா லோன்லியா பீல் பண்ணுவேன்..." என்றபடி நகர்ந்தவளை "அனு" என நிறுத்தினேன். திரும்பி என்னைப் பார்த்தாள்.

"எத்தனை மணிக்குப் போகணும்... நானும் வாறேன்..." என்றேன்.

பிப்ரவரி -14.

"என்னடா எங்க வேணுமின்னாலும் போகலாம்ன்னு சொல்லிட்டு அர்ஜெண்டா ஒரு பிரண்ட் கூட போறேன்... ஈவினிங் போகலாங்கிறே... என்னைவிட அவன் முக்கியமா?" போனில் கத்தினாள் ஹேமா.

"என்னடி பண்ணச் சொல்றே... திடீர்ன்னு கூப்பிடுறான்... முக்கியமான விஷயமா? நாம ஈவினிங் போவோம்...ப்ளீஸ்... புரிஞ்சிக்கடா ஏமா..." மெதுவாக அஸ்திரத்தை வீசினேன். ஆனால் முதல்முறை அது வேலை செய்யலை.

"என்னை ஏமாத்துறே?" என்றபடி போனை வைத்தாள். அவளை ஏமாத்துறது வருத்தமாகத்தான் இருந்தது. இருந்தாலும் நான் வருவேன்னு ரொம்ப நம்பிக்கையோட வந்தவளை ஏமாத்த வேண்டான்னு இவளை ஒரு நாள் ஏமாத்துறது தப்பில்லைன்னு தோணுச்சி.

"இது எங்க குலதெய்வம்..." எனக்கருகில் அமர்ந்தவள் காஞ்சிப்பட்டில் அம்மனாய்த் தெரிந்தாள்.

"ம்..."

"வருஷா வருஷம் இங்க திருவிழா சிறப்பா நடக்கும். அக்கா வீடு பூஜை போடணுமின்னு சொன்னதால இப்ப வந்தோம்... இல்லேன்னா மே மாசம் திருவிழாவுகுத்தான் வருவோம்... இப்படி உக்காந்து கோவிலோட அழகை ரசிக்கெல்லாம் முடியாம எல்லாப் பக்கமும் ஒரே கூட்டமா இருக்கும்..." சொல்லிக் கொண்டிருந்தாள். காற்றில் பறந்த அவளின் முடி என் முகத்தில் தாலாட்ட என்னை இழந்து கொண்டிருந்தேன்.

"புடிச்சிருக்கா?" என்றாள்.

"எது...?" இடமா இல்லை முடியின் தாலாட்டா எதைக் கேட்கிறாள் என்பது தெரியாமல் பொதுவாய்க் கேட்டு வைத்தேன்.

"எதுவா... இந்த ஊர்... இந்தக் கோவில்..."

"ம்... ரொம்ப..." என்று சிரித்தேன்.

"ஹேமாவுக்கும் உங்களுக்கும்தான் கல்யாணமாமே?"

இப்ப எதுக்கு தேவையில்லாமல் இந்தக் கேள்வி என்று குழம்பியபடி, "வீட்ல முடிவு... அத்தை பொண்ணு அவ..." என்றேன்.

"உங்க முடிவு?"



"என்னோட முடிவுன்னு இதுல என்ன இருக்கு... ரெண்டு பேரோட பேரண்ட்ஸூம் முடிவு பண்ணியாச்சு..."

"உங்களுக்குன்னு ஒரு முடிவு இல்லையா?"

"இல்லை..."

"..........." அவள் பேசாமல் நிலத்தில் கிறுக்கிக் கொண்டிருந்தாள். அவள் கூந்தலைச் சரி செய்தாள். எங்களுக்குள் மௌனம் விளையாண்டது.

"என்னாச்சு?" நான்தான் நேரத்தைத் தின்ற மௌனத்தைக் கொன்றேன்.

"ஒண்ணுமில்ல... " என்று எழுந்தவள் பின்புறம் ஒட்டியிருந்த மணலைத் தட்டினாள். என்னைத் தட்டுவதாய் உணர்ந்தேன். நீருக்குள் நீந்தும் அவளின் கண்களின் தவிப்பைப் பார்த்தேன். ஏனோ வலித்தது.

"ஏய்... என்னன்னு சொல்லு... என்ன ஒரு மாதிரி ஆயிட்டே?" ஒருமைக்கு மாறினேன்.

"ஏய்... அதெல்லாம் இல்ல... எப்பவும் போலத்தான் இருக்கேன்..." சிரிக்க முற்பட்டாள்.

"அனு ப்ளீஸ்...எனக்குத் தெரியும்... என்னாச்சு?" கேட்டபடி முதல் முறையாக அவள் கையைப் பற்றி இழுக்க மறுபடியும் அமர்ந்தாள். இப்போது சற்றே இடைவெளி விட்டு அமர்ந்தாள். ஹேமாவின் கரம் பற்றியிருந்தாலும் அதில் இல்லாத ஏதோ ஒன்று இந்த முதல் ஸ்பரிசத்தில்.

"என்ன சொல்லு?"

"அதான் ஒண்ணுமில்லேன்னு சொன்னேனே?"

"சரி... அப்ப நான் கிளம்புறேன்..." என எழுந்தேன்.

"ஏய்ய்ய்ய்..." என்றபடி என்னை அருகே அமர்த்தினாள்.

"சொன்னா தப்பா நினைக்கமாட்டியே... இவதான்னு முடிவு ஆகியிருந்தாலும் எனக்காக முடிவை மாத்திக்குவியா?" அவளின் கேள்வியின் பின்னே இருப்பது புரிந்தது. ஹேமா.... இதை ஏற்பாளா? இதை நான் ஏற்றால் ஹேமா மரணத்து வரைக்கும் கூட போவாள். ஆனாலும் மனசு அனு எனக்கு வேண்டுமென்று சொன்னதால் "உனக்காக... என்ன செய்யணுமின்னாலும் செய்கிறேன்" என்றேன்.

"ஐ லவ் யூ ராக்" என்றவள் எதிர்பாராத தருணத்தில் என் கன்னத்தில் முத்தமிட்டாள். ஹேமாவுக்கு நானோ எனக்கு அவளோ முத்தமெல்லாம் கொடுத்ததில்லை. முதல் முத்தம்... அதுவும் தேவதையின் முத்தம்... எச்சில்படாத ஆனால் மனசுக்குள் பூப்பூக்க வைத்த முத்தம்... காதலை அழகாய்ச் சொன்ன முத்தம்.. என்னை வானில் பறக்க வைத்த முத்தம், முத்தச் சூடு ஆறும் முன் அவள் என் தோள் சாய்ந்தாள். யாரேனும் வரக்கூடும் என்ற அச்சம் வர, அவசரமாய் அவளை விலக்கினேன்... உதடுகள் அவள் நெற்றியில் பதிந்தன சம்மதமாய்...

"என்னங்க... இன்னைக்கி பிப்ரவரி-14, அனு போன் பண்ணினா... உங்களைக் கேட்டா... இன்னும் தூங்குறீங்கன்னு சொன்னேன்... லவ்வர்ஸ்டே ஸ்பெஷல் எதுவும் இல்லையான்னு கேட்டா..." என்னை எழுப்பி காபி கொடுத்தபடியே சொன்னாள் ஹேமா, என் மனைவி.

என்னடா அனுவைக் காதலிச்சிட்டு ஹேமாவை கட்டியிருக்கானேன்னு பாக்குறீங்களா? எங்க காதல் வீட்டுக்குத் தெரிந்து... ஹேமா விஷம் குடிச்சி... இத்யாயி... இத்யாயி... எல்லாம் முடிஞ்சி போச்சு... காதல் காத்திருப்புக்கள் எல்லாமே சாதியிலும் பெரியவர்களின் பிடிப்பிலும் அழிந்து போச்சு....

சரி... அப்ப அனு எங்கேன்னு கேக்குறீங்களா? என்னைய ரொம்ப நம்பினா... ஓடிப்போயிடலாம்ன்னு அவகிட்ட சொன்னப்போ மறுத்துட்டா... வேண்டாம்... அவ உயிரை எடுத்துட்டு நாம வாழ்ந்தா அது வாழ்க்கையில்லன்னு சொல்லிட்டா... ஹேமாவுக்காக என்னை விட்டுப் பொயிட்டா... ம்... காதல் அவளைக் கோழை ஆக்கிருச்சு... சொல்லாமக் கொன்னுட்டுப் பொயிட்டா....

அப்ப போன்ல பேசின அனு யாருன்னுதானே யோசிக்கிறீங்க... இவ என்னோட மகள்... எனக்கு அம்மு... ஹேமாவுக்கும் மற்றவர்களுக்கும் அனு... அனுபமா.. அனுபமா ராகவன்... அனுராக்... ம்... இந்தப் பேரை வச்சவளே ஹேமாதான்.... நினைவுகளோடு கிளம்பி வெளியே வந்தேன்... ஹாலில் மாலை சூடிய போட்டோவுக்குள் சிரித்துக் கொண்டிருந்தாள் என்னோட அனு...

-:முற்றும்:-
-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (14-Feb-15, 8:41 pm)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 271

மேலே