மூன்று நண்பர்கள்

மூன்று நண்பர்கள்
****************

ஓர் ஊரில் 3 இணை பிரியாத நண்பர்கள் இருந்தனர். நட்பு என்றால் இவர்களைப் போல் இருக்கவேண்டும் என்று சொல்லும் அளவிற்கு ஒற்றுமையாக இருந்தனர்.

அவர்களின் பெயர்களும் வித்தியாசமாக இருக்கும். ஒருவன் பெயர் 'வம்பு'. அடுத்தவன் பெயர் 'மரியாதை'. மூன்றாமவன் பெயர் 'உன் வேலையைப் பார்'. மிகவும் ஜாலியான நண்பர்கள்.

ஒரு நாள் 'வம்பு' காணாமல் போய் விட்டான். மற்ற இருவரும் துடித்து போய் விட்டார்கள். எங்கு தேடியும் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் செய்ய சென்றார்கள்.

'மரியாதை' வெளியவே நின்று விட்டான். 'உன் வேலையைப் பார்' காவல் நிலையத்திற்குள் சென்றான். பதட்டமாக இருந்ததால், எல்லோரையும் மோதிக் கொண்டு அவசர அவசரமாக உள்ளே சென்றான்.

அங்கு அமர்ந்திருந்த இன்ஸ்பெக்டருக்கு, கோபம் வந்தது. "எங்கேயடா உன் மரியாதை" என்று கேட்டார். "வெளியே நிற்கிறான் ஐயா" என்று பதிலளித்தான் இவன்.

ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் "உன் பெயர் என்ன" என்று கேட்டார். இவனும் பவ்யமாக 'உன் வேலையைப் பார்' என்று சொன்னான்.

இவன் பதிலில் வெகுண்டெழுந்த இன்ஸ்பெக்டர் "என்னடா வம்பு தேடி வந்தாயா?" என்று கேட்டார். இவனும் அதே பணிவான குரலில் "ஆமாம்" என்றான்..

பின் என்ன நடந்திருக்கும் என்பதை வார்த்தையில் வேறு விளக்கணுமா?

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (16-Feb-15, 10:49 pm)
Tanglish : moondru nanbargal
பார்வை : 300

சிறந்த நகைச்சுவைகள்

மேலே