வருது வருது விலகு விலகு

உலகில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நுகர்வு கலாச்சாரம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு மனிதரும் தங்களுக்கு தேவையான ஏதோ ஒன்றை விலை கொடுத்து வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

அதேபோல் ஒவ்வோரு ஆண்டும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமை தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்த இரண்டுக்குமிடையிலான தொடர்பு என்னவாக இருக்கிறது? ஏன் நுகர்வோர் தினம் அனுசரிக்கப்படுகிறது? வெறுமனே கூடி பேசிவிட்டு கலைந்து செல்வதர்க்காகவா? அல்லது வெற்று வார்த்தையை தூக்கிக்கொண்டு அலைவதர்க்காகவா? சரி யார்தான் நுகர்வோர்? இப்படி ஆயிரம் கேள்விகள் நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது.

நுகர்வு கலாச்சாரம் உருவான பிறகு நம்பிக்கையின் அடிப்படையில் நாட்டை கொடுத்ததும், நெல்மணிகளுக்கு விலைபேசியதும், போர்ப்படைகளுக்கு குதிரையும் யானையும் வாங்கியதும் முடிந்து போன வரலாறு.

அப்படிப்பட்ட வரலாற்றை திரித்து வார்த்தைகளில் கட்டி சுருங்க சொன்னால் நுகர்வோர் என்பவர் ஒரு பொருளை பயன்படுத்துபவர். வாடிக்கையாளர் என்பவர், உற்பத்தியாளரிடம் பொருளை வாங்கி, அதை பயன்படுத்தாமல் மற்றொருவருக்கு கொடுப்பவர். அவ்வளவுதான் கதை.

ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விஷயம் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால் உலகில் எல்லோருமே நுகர்வோர்தான்.

ஒரு உண்மையை சொல்வதென்றால் நாம் எந்த பொருளை வாங்கினாலும் அதற்குரிய தரத்தையோ அதனால் நாம் பெறப் போகும் நன்மை தீமைகளை பற்றியோ சரிவர விசாரிக்காமலேயே பல நேரங்களில் தயாரிப்பாளர்களிடமிருந்து ஒரு பொருளை வாங்கி விடுகிறோம். ஆனால், நம்மில் எத்தனை பேர் வாங்கிய பொருள் பற்றி சரிவர தெரிந்து வைத்திருக்கிறோம்?
பெரும்பாலும் இல்லைதானே பதிலாக இருக்கிறது.

20ஆம் நூற்றாண்டிலிருந்துதான் நுகர்வோரின் முக்கியத்துவம் கவனிக்கப் பட்டு வருகிறது. உலக நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் கணிப்பின்படி 21 ஆம் நூற்றாண்டில் நுகர்வோர் விழிப்புணர்வு இன்னும் அதிக தேவையாயிருக்கிறது.
வெளியில் செல்லாமலே ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணத்தை மாற்றிவிட முடிகிறது.

நாம் உபயோகிப்பதற்காக விலை கொடுத்து வாங்கும் ஒவ்வொரு பொருளும் அதன் உரிய பலனைத் தருகின்றதா? நாம் கொடுக்கும் விலைக்கு உரியதுதானா? நாம் ஏமாற்றப்பட்டுள்ளோமா என்பனவற்றை அறியும் உரிமை நமக்கு இருக்கிறது. இந்த கதையே நம்மில் பலருக்கு இன்னும் தெரியாமல்தான் இருக்கிறது.

தரம் குறைந்த பொருட்களை நமக்குத் தந்து விட்டு, அதன் தயாரிப்பாளரோ கடைக்காரரோ நம்மை ஏமாற்றுவது சட்டப்படி குற்றம். அதற்காக அந்த பொருளை நம்மிடம் விற்பனை செய்தவர் மீது நாம் வழக்கு தொடர முடியும். அது போலவே பேங்குகளிலோ ஆஸ்பத்திரிகளிலோ, பஸ், ரெயில், டாக்ஸி, ஆட்டோ, அல்லது விமானம் போன்றவற்றிலோ நாம் பெறும் சேவைகளில் குறைபாடுகளோ குளறுபடிகளோ இருந்தால் அவையும் நம் உரிமையைப் பாதிக்கும் செயல்கள்தான் அதற்காகவும் நாம் வழக்கு தொடர முடியும்.

சில பொருட்கள் நம் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்குமானால் அந்தச் பொருட்களின் தயாரிப்பாளர் விற்பனையாளர்கள் மீது நுகர்வோர் உரிமை மீறல் அடிப்படையில் குற்றம் சாட்டலாம். வழக்கு தொடரலாம். தண்டனையும் வாங்கித்தரலாம்...முடியும்.

யாரோ ஒருவரால் நாம் பாதிக்கப்படுவதை, எங்கோ ஒருவர் செய்கிற தவறால் மக்கள் பாதிப்புக்குள்ளாவதை இப்போது நம்மால் தடுக்க முடியுமென்றால் அதற்கும் ஒரு மனிதன் காரணமாயிருந்தான் என்பது எத்தனை சிறப்பானது. ஆம், அமெரிக்காவின் முன்னால் ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி தான் அந்த மனிதன்.

1962 ஆம் ஆண்டில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசும்போதுதான் முதன்முறையாக நுகர்வோர் ப்ற்றிய சில கருத்துக்களை மக்களிடமும் அதிகாரிகளிடமும் அவர் முன்வைத்தார்.

1985 ஆம் ஆண்டில் ஐக்கியநாடுகள் சபையால் இது ஏற்றுக்கொள்ளப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டாலும் நவீனகால இயக்கத்துக்கு ஏற்ப 1999 ஆம் ஆண்டு, மேம்படுத்தப் பட்ட புதிய சட்ட விதிகள் உருவாக்கப்பட்டன. அவற்றின்படி நுகர்வோருக்கு,

1.அடிப்படைத் தேவைகளில் திருப்தி அடையும் உரிமை,

2.பாதுகாப்பு உரிமை,

3.பொருட்கள் பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ளும் உரிமை,

4.வாங்குவதை தேர்ந்தெடுக்கும் உரிமை,

5.உத்தரவாதம் பெறும் உரிமை,

6.நிவர்த்தி பெறும் உரிமை,

7.நுகர்வோர் உரிமை,

8.கல்வி பற்றித் தெரிந்து கொள்ளும் உரிமை,

9.ஆரோக்கியமான சுற்றுச்சூழல் பெறும் உரிமை போன்ற உரிமைகள் உள்ளன.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக தேசமான இந்தியாவிலும் நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய சட்டங்களும் அதற்கான விதிமுறைகளும் வகுக்கப்பட்டிருகின்றன. இந்த சட்டம் இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்1986 என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் வாழும் மக்களின் நுகர்வுத் தன்மையை பதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் ஏற்படுத்தப்பெற்றச் சட்டமாகும்.
நுகர்வோர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாகவும், அதன் செயற்பாடுகள், முக்கியத்துவங்கள் அதிகரிக்கப்பட்டு திருத்தச்சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு, 2003 ஆண்டு புதிய பரிமானங்களுடன் வெளியிடப்பட்டது.

நாம் கடைகளுக்கு செல்கிறோம். உணவு பொருள்கள் வாங்குகிறோம். உடைகள் வாங்குகிறோம். மரப்பொருட்கள் வாங்கிறோம். மாமிசம் வாங்குகிறோம். வாகனம் வாங்குகிறோம். வீட்டுக்கு தேவையான வண்ண பூச்சுகள் வாங்குகிறோம், குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் வாங்குகிறோம், வெளிநாட்டு குளிர்பானங்களின் மோகத்தில் திளைக்கிறோம், மது அருந்துகிறோம். சுற்றுலா செல்கிறோம். விடுதி அறைகளில் அறை எடுத்து தங்குகிறோம். விமானத்தில், ரயிலில், பேருந்தில் பயணிக்கிறோம். இப்படி எல்லாவிதமான நுகர்வுகளையும் நாம் மேற்கொள்கிறோம். ஆனால் அதற்குரிய ரசீதை மட்டும் சரியான முறையில் கவனித்து வாங்க மறந்துவிடுகிறோம்.

இதையெல்லாவற்றையும் மறந்துவிட்டு இணையத்திலேயே வாழ்கையை தொலைத்து கொண்டிருக்கிறோம்.

1 ரூபாய்க்கு கடையில் மிட்டாய் வாங்குவதும், 1 கோடி ரூபாயில் வீடு கட்டுவதும் நுகர்வால்தான் நடக்கின்றன. சிமெண்டும், ஜல்லியும், செங்கற்களும், சரியான விலைக்கு யாராவது வாங்கியிருக்கிறோமா?

இன்று சுத்தமான காற்றும் நீரும் நாம் கடையில் கேட்டு வாங்கி கொண்டிருக்கிறோம், அதில் எந்தளவு உண்மையிருக்கிறது என்பதை நாம் பரிசோதனை செய்திருக்கிறோமா? சாதாரணமாக அன்றாட தேவைகளுக்கே யாரோ ஒருவரை நம்பியிருக்கிற நாம் அதற்கான முக்கியத்துவம் குறித்து யோசிப்பதேயில்லை இல்லையா... ஆம்?

யாரோ ஒருவரு செய்கிற தவறு எத்தனை உயிர்களோடு விளையாடுகிறது என்பதை பணம் பார்க்க நினைப்பவர்கள் என்னுவதேயிலலை. சில நாட்களுக்கு முன்பு நடந்த ஆவின் பால் கலப்படம் எத்தனை மக்களுக்கு தெரியும்?

நுகர்வோராகிய நமக்குப் பல உரிமைகள் இருப்பதைப் போன்றே கடமைகளும் இருக்கின்றன. நாம் வாங்கும் பொருட்களின் தரம் அவற்றின் விலை மற்றும் உறுதிப்பாடு போன்றவற்றைப் பரிசோதிக்க வேண்டும். ஐ எஸ் ஐ போன்ற முத்திரைகள் உள்ளனவா, பொருட்களின் விலை என்ன, உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகள் அச்சிடப்பட்டுள்ளனவா, அந்தச் பொருட்களின தயாரிப்பு விபரங்கள், அதில் அடங்கியுள்ள பிற துணைப்பொருட்கள் போன்றவற்றை அறிவதோடு நாம் கொடுக்கும் விலைக்குத் தரும் ரசீதில் வரி உட்பட சரியான விபரங்கள் உள்ளனவா எனப்பார்க்கும் கடமையும் பொருட்களை வாங்கும் நமக்கு இருக்கிறது.

சாதாரணக் காய்ச்சலுக்கும் ஸ்கேன் செய்யச்சொல்லும் மருத்துவமனைகளும், சுண்டு விரல் வீக்கத்திற்குக் கூட, பொட்டலம் பொட்டலமாக மருந்து எழுதித் தள்ளும் மருத்துவர்களும் நம்மிடம் நிறையவே இருக்கிறார்கள். அதுபோலவே டாக்ஸி, ஆட்டோ மீட்டர்களில் தில்லு முல்லுகள் செய்கின்றனர். இவையெலாம் நுகர்வோர் உரிமைக்கு எதிரானவையே.

நாம் வாங்குகிற பொருட்களை கவனிக்காமல் ஏதோ மேலோட்டமாக பார்த்துவிட்டு சென்றுவிடுகிறோம்.
ஆனால், என்ன விலை? என்ன தரம்? எந்த விளைவை ஏற்ப்படுத்துகிறது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டிய உரிமை நமக்கு இருக்கிறது. நாம் இதையெல்லாம் செய்தாகவேண்டிய கட்டாயமும் பொறுப்பும் கூட நமக்கிருக்கிறது.

அடிப்படையில் விவசாய மக்களை சார்ந்த இந்தியா போன்ற தேசங்களில்தான் அவசரத்துக்காக கிடைப்பதை வாங்கிகொண்டு மக்கள் சென்று விடுகிறார்கள். அது அவர்களின் குற்றமல்ல. தேசத்தின் சாதாரண நிலையே இதுதான்.

திருட்டுத்தனமாக ஒரு பொருளை விற்பனை செய்வதன் மூலமாக பணம் சம்பாதிக்க நினைக்கும் சிலரால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நாட்டிலும் கருப்பு பணம் தலைவிரித்தாடுகிறது.

நாம் நம்முடைய வேலையை ஒழுங்காக செய்தாலே பாதி தவறுகளை சரி செய்துவிட முடியும். அதை செய்வதற்கு நாம்தானே முயலவேண்டும். அதை விடுத்துவிட்டு குறைசொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்.

எழுதியவர் : வரலாறு சுரேஷ் (24-Feb-15, 10:46 pm)
பார்வை : 915

மேலே