வெண்பா இலக்கணம் - திரு விவேக் பாரதி

வெண்பா இலக்கணம் -விவேக்பாரதி
வெண்பா இலக்கணம்

வெண்பா :

பாடல்களில் வெண்பா வகை மிகச் சிறந்த வாய்ந்தவை. இத்தகைய வெண்பா, குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, அளவடி வெண்பா, ப·றொடை வெண்பா,
கலி வெண்பா என ஐந்து வகைப்படும். வெண்பாப் பாடல்களில் குறிப்பிட்ட கருத்தைக் கச்சிதமாகக் கூறலாம். திருக்குறள், நாலடியார், நளவெண்பா, முதலான நூல்கள்
வெண்பாப் பாடல்களால் ஆனவை.

8.1. குறள் வெண்பா

குறள் வெண்பா இரண்டு அடிகளையுடையது. முதல் அடி அளவடியாக நான்கு சீர்களும் இரண்டாவது அடி சிந்தடியாக மூன்று சீர்களும் கொண்டு வரும். இதற்கு உரிய
யாப்பிலக்கணம்

"மாமுன் நிரையும்
விளமுன் நேரும்
காய்முன் நேரும்
வருவது வெண்டளை"

என்பதாகும். ஈற்றுச்சீர் காசு, பிறப்பு, நாள், மலர் என்னும் வாய்ப்பாட்டில் அமைய வேண்டும். இதில்

ஈரசைச்சீர்: பிறப்பு என்பது புளிமா
ஓரசைச்சீர்: நாள் என்பது மாச்சீர் ( நேரசை)
ஓரசைச்சீர்: மலர் என்பது விளச்சீர் ( நிரையசை)

காசு என்பது நேர்பு எனவும், பிறப்பு என்பதனை நிரைபு எனவும் தொல்காப்பியம் சாற்றும்.


இனி, ஒரு குறள் வெண்பாவை எவ்வாறு அமைக்க வேண்டும் எனக் காண்போம்.

1. பொதுவாக, பொழிப்பு மோனை கொண்டு அமைத்தல் போதுமானது. ஏனையவான இணை மோனை, ஒரூஉ மோனை, கூழை மோனை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய் முற்று மோனையும் சேர்ந்து விளங்குமாறு பாடுவது கவிஞனின் விருப்பம். அடி எதுகை வந்தால் போதுமானது. ஏனைய எதுகைகள் கொண்டு அமைப்பதும் கவிஞனின் விருப்பம்.

2. வெண்பாவுக்குரிய தளை - அதாவது மாமுன் நிரை, விளமுன் நேர், காய்முன் நேர் வருதல் வேண்டும்.

3. ஈற்றுச்சீர் - குறள் வெண்பாவின் இரண்டாம் அடியில் வரும் மூன்றாம் சீர் காசு, பிறப்பு, நாள், மலர் என்னும் வாய்ப்பாட்டில் அமைய வேண்டும்.

4. இப்போது கருத்து மட்டும் உருவாக வேண்டும்.

கம்ப இராமயணத்தில் ஒரு காட்சி. கானகம் சென்ற இராமன், பரதன் வேண்டுகோளை ஏற்று நாடு திரும்ப மறுக்கிறான். பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடிந்தபின்னர் வருவதாகக் கூறுகிறான். எனவே, பரதன் இராமனின் பாதுகையைப் பெற்று அதற்குப் பட்டம் சூட்டிப் பணிகின்றான். அப்போது பரதன் தன் தாயான கைகேயின் வரத்தால் இவ்வாறு ஏற்பட்டதே என்று கலங்குகின்றான். இது ஒரு குறள் வெண்பாவாக வடிவம் கொள்கிறது.

மாது வரத்தால் மயல்சேர வாடினனே
பாதுகையைப் பார்த்துப் பணிந்து

இப்பாடலில்,

1. மாது - தேமா - நேர் நேர்
2. வரத்தால் - புளிமா - நிரை நேர்
3. மயல்சேர - புளிமாங்காய் - நிரை நேர் நேர்
4. வாடினனே - கூவிளங்காய் - நேர் நிரை நேர்
5. பாதுகையைப் - கூவிளங்காய் - நேர் நிரை நேர்
6. பார்த்துப் - தேமா - நேர் நேர்
7. பணிந்து - புளிமா - நிரை நேர் இது பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் வந்தது.

முதலடியில் நான்கு சீர்களும் ம, வ என்ற ஓரின மோனை வந்து முற்று மோனையாயிற்று.
இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் 'ப' என்பது மோனையாக வந்து கூழை மோனையாயிற்று.
இது சிந்தடியாதலால் முற்று மோனையும் ஆம்.

மா'து'
பா'து'கையைப்
- து என்பது அடி எதுகை.

மாமுன் நிரையும், காய் முன் நேரும் வந்து வெண்பாவிற்குரிய இலக்கணம் அமையப்பெற்றது.
அளவடி வெண்பா

பொதுவாக வெண்பா என்றால் நான்கு அடிகளைக் கொண்டதாக விளங்கும். ஒரே அடியில் நான்கு சீர்கள் கொண்டு வருவது அளவடி எனக் கண்டோம். நான்கு அடிகள்
கொண்டு வரும் வெண்பாப் பாடல்களும் 'அளவடி வெண்பா' எனப்படும். இதனை அளவியல் வெண்பா எனவும் உரைப்பர். மூன்று அடிகளை உடைய வெண்பாப் பாடல்
சிந்தியல் வெண்பா எனப்பெறும்.

இன்னிசை வெண்பா

இதன் இலக்கணம் பின் வருமாறு:

1. முதலாவது இரண்டாவது மற்றும் மூன்றாவது அடிகள் நான்கு சீர்கள் கொண்டு இருக்க வேண்டும். நான்காவது அடி மூன்று சீர்களுடன் அமையும்.

2. நான்காம் அடியின் ஈற்றுச்சீர், அதாவது மூன்றாவது சீர் காசு, பிறப்பு, நாள், மலர் என்னும் வாய்பாட்டில் அமையவேண்டும். (காசு, பிறப்பு என்பது குற்றியலுகரம் எனவும், நாள், மலர் என்பது ஓரசையுடைய மாச்சீர், விளச்சீர் எனவும் காண்க.)

3. நான்கு அடிகளின் முதற்சீரிலும் இரண்டாவது எழுத்து ஒன்றி அடி எதுகை கொள்ள வேண்டும்.

4. மாமுன் நிரை, விளமுன் நேர், காய்முன் நேர் என்னும் விதியில் அமைய வேண்டும்.

5. பாடலுக்கு உரிய கருத்து ஒன்றை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இத்தகைய ஐந்து நிலைகளை அடிப்படையாகக் கொண்ட பின்னர் இன்னிசை வெண்பா அமைப்பது எளிது.

(எ.கா)

பூவளரும் காதல் பொருந்தும் குறிஞ்சியொடு
காவளரும் முல்லை கனிமருதம் நெய்தலென்றும்
தேவளரும் பாலையுடன் தேர்ந்து மொழிந்துளதே
மாவளரும் நந்தமிழர் மாண்பு.

அகத்திணை வகையில் காதல் வாழ்வில் மனம் ஒருமித்த தலைவனும், தலைவியும் இணைந்து மகிழ்வது குறிஞ்சி, உள்ளத்தால் ஒன்றி இருப்பினும் உடலால் சிறிது பிரிவு கொள்வது முல்லை. தலைவனின் பிரிவை ஆற்றாது தலைவி புலம்புதல் நெய்தல். தலைவன் தலைவியிடையேயான ஊடலும், பிரிதலும் மருதம் ஆகும். இத்தகைய நெறிமுறையை வகுத்து அவ்வாறு வாழ்வதே தமிழரின் மாண்பு என இன்னிசை வெண்பாவின் இலக்கணத்தில் கவிதை விளம்புகிறது.

நேரிசை வெண்பா

இது இன்னிசை வெண்பாப் பாடலினும் சிறிது மாறுபட்டு வரும். இதில் இரண்டாம் அடியின் நான்காம் சீர் தனிச்சீராக இருக்கும். மற்றபடி இன்னிசை வெண்பாப் பாடலுக்குரிய
இலக்கணமே இதற்கும் உண்டு.

இன்னிசை வெண்பாவில் நான்கு அடிகளிலும் முதற்சீரில் இரண்டாம் எழுத்து ஒன்றி அடி எதுகை பெற்று வரும். நேரிசை வெண்பாவில் முதலடி முதற்சீரிலும் இரண்டாம் அடி முதற்சீரிலும், இரண்டாம் அடியின் நான்காம் சீராக உள்ள தனிச் சீரிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரும். அதாவது முதல் இரண்டு அடிகளில் 'அடி எதுகை' பெறும். இரண்டாம் அடியில் 'ஒரூஉ எதுகை' பெறும். மற்றும் மூன்றாம் அடியின் முதற்சீரும் நான்காம் அடியின் முதற்சீரும் ஒரே எழுத்து கொண்டு அடி எதுகை பெறும்.

அவ்வாறு அமைந்த ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகளின் நல்லுரையைப் புகழ்ந்து ஒரு கவிஞர் பாடிய பாடலொன்றைக் காண்போம்.

கண்ணன் திருநாமம் காலையிலும் செம்பவள
வண்ணன் தனிநாமம் மாலையிலும் - திண்ணமிகு
வாஞ்சையுடன் வாழ்த்துகவே என்றுரைத்த சங்கரனார்
காஞ்சிக்கு வாய்த்த கரும்பு.

மிக்க நன்றிகள் : கவிமித்ராவின் பக்கங்கள்
சேர்த்தது விவேக் பாரதி
-----------------------------------------
பின் குறிப்பு: இது திரு அபி, மலேசியா அவர்கள் படைப்பு. கருத்து கூற விரும்புபவர்கள் அவர் படைப்பு kavithai/214756-ல் கருத்திடவும்.

(இங்கு கருத்திட இயலாது )

எழுதியவர் : அபி மலேசியா (9-Mar-15, 3:21 pm)
பார்வை : 3874

மேலே