பொம்மையே உனக்கு உடை எதற்கு…

நகரத்தின் நடுவே பிரம்மாண்டமாய் இருக்கும் கடை அது
உள்ளே நுழைந்ததும் என்னை வரவேற்க
பணி ஆட்கள் ஓடி வந்தனர் வேக வேகமாக

எத்தனையோ வகையான ஆடைகள்
அடுக்கடுக்காய் வைக்கப்பட்டிருந்தது பார்வைக்காக
என் கவனம் அவைகளில் செல்லவில்லை

மாறாய்,
அங்கே வைக்கப்பட்டிருந்த பொம்மையை கவனித்தது அது
வண்ண வண்ண உடைகள் உடுத்தி அலங்கரிக்கப்பட்ட அதனை காண்கையில்
மனதில் சட்டென ஒரு நிகழ்வு ஓடி மறைந்தது

நான் வருகின்ற வழி எல்லாம்
தெருவோரமாய் கூடாரம் அமைத்து
அதையே தன் வீடாய் மாற்றி இருந்த மக்கள்

உடுத்த சிறு கந்தல் துணியும் இன்றி
அவர்களின் குழந்தைகள் அங்கே விளையாடிய காட்சி
அதுவே என் கண் முன் நிழலாடியது

கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல்
உணர்வுகள் ஏதுமின்றி என் முன் நின்ற அந்த பொம்மையிடம்
என் மனதின் ஆறுதலுக்காக கேட்டு வைத்தேன்
“பொம்மையே உனக்கு உடை எதற்கு?” என்று

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (29-Mar-15, 10:42 pm)
சேர்த்தது : L.S.Dhandapani
பார்வை : 73

மேலே