சிவந்த இரவுகள்

சிவந்த இரவுகள்
================

எல்-பாசோவின் வாசத்தை மிஞ்சி
உவர்ப்புக்குளித்த
அந்த அறையில்
பலரும் வந்து போயிருக்கலாம்,,
ஆனால்
சலனத்தின் பெரும்பான்மை
நிச்சலனத்தில்தான் என்பதைப்போல்
கருத்துரைக்க
முன்வராத எவரும்
அந்த நாற்றத்தால்
மனக்கற்பு அழித்துக்கொண்டவர்கள்தான்
என அறிவேன்

எப்படிஎன்று கேட்கவேண்டாம்
கண்ணீர் விற்பவர்கள்தான்
இரவுகளை
நிறமாக்கிக் கொண்டிருந்தார்கள்
அது, என் மற்றும் அவளின்
நுகர்வுதாண்டிய
வேறு யாரின் நுகர்விற்கும்
அத்தனை போதமில்லை அங்கே ம்ம்ம்

நாளை அந்த அறை பூட்டப்படலாம்
உன் பிரவேசமிழந்து
பிழிந்தெடுக்கும்
சப்பாத்து நடமாட்டங்களின்
எதிரொலி எழுப்பாத நீள் சுவர்களும்
முடங்கிவிட்ட
தானியங்கி கடிகைமுட்களின்
உயிர்நாடிகளும்
சில நாட்கள் முதலாய்
உன்னோடு பந்தமற்றுப்போய்விட்ட
மல்லிகை கசங்கல்களின்
கருகிய மீதங்களும்
சாந்து பூசி ஒழிவாக்கப்பட்ட
உயர் ரக சிகரெட்டின் காரநெடிகளும்
இனியுமான
அற்பநாட்களுக்காவது
என்னை உறங்காமல் செய்திருக்கட்டுமே மித்ரா ம்ம்ம்

என்னால்
உன் அசையும் உடைமைகள் யாதும்
உடைப்படவில்லை
தேவைக்கு மிஞ்சிய சிணுங்கள்களால்
திறக்கப்பட்ட உன் எல்லா
மதகுகளின் வழியோடிருந்தும்
ஒழுகி நொடிந்த
வெள்ளப்பெருக்கொன்றின் பின்னாலும்
அந்தக்கறை உணங்கிடவில்லை
ஆனால் அதற்குள்
உன் துளிகளுக்குள் அடைப்பட்டுவிட்ட
நான் மட்டும்
உன் மனக்கரையில்
காய்ந்த கறையாகி பதிந்துவிட்டேனேனோ மித்ரா

சலவை செய்ய மறந்து
ஒத்திவைத்த நம் உடுப்புகளில்
சரிதமெழுதி
பழி தீர்த்த ஆசுவாசத்தில்
இதுவரையான ஆதாரமில்லாமல்
அரங்கேற்றப்பட்ட
என் எல்லா கள்ளத்தனங்களையும்
அறைந்துவிட்டுப் போயிருந்தது
அந்த பின்னிரவின் பனிவாடைக்காற்று ம்ம்ம்ம்,,

ஆனால் என் கற்பனைப்பெண்டுலத்தின்
வழக்க நகர்தலின்
அலைவு நேர விலகுதலினால்
தமனியில் ஒரு குறுமுறிவுக்கோடு

உறைந்துகொண்டிருக்கும் இரத்தத்திலிருந்து
ஆக்சிஜன் பிரிகின்றசமயம்
பாவங்களுக்கெல்லாம்
விலைத் தேடிக்கொண்டிருந்தேன்

எப்பொழுது வேண்டுமானாலும் விடுபடலாம் ம்ம்ம்
நிலுவையிலிருக்கும்
புனைவுமையற்ற
கேள்விப்பட்டியல் ஒன்றிற்கும்
சற்றே சாவு பயத்துடன்
ஓட்டமுறைந்து
நாளங்களை அழுந்தப்பிடித்த
ஆத்மகதைக்குமான
அந்த மெல்லிய திசுவின் பிணைப்பு

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (16-Apr-15, 1:41 pm)
பார்வை : 81

மேலே