கைந்நிலை யில் உள்ள குறைபாடுள்ள பாடல்கள் - பூர்த்தி செய்ய நம்மால் முடியுமா

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பதினேழு உறுதியாய்ச் சொல்லப்படுகிறது. பதினெட்டாவது நூல் இன்னிலையா? கைந்நிலையா? என்ற ஐயம் உள்ளது. 'இன்னிலை' என்று பலர் கூறினர். 'கைந்நிலை' ஒன்று பலர் கூறினர். 'இன்னிலை' என்ற நூலை திரு. வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் அச்சிற் பதித்தனர். 'கைந்நிலை' என்ற நூலை ஆசிரியர் திரு. அனந்தராமையர் அவர்கள் பதித்தனர்.

இன்னிலை என்ற நூலை இயற்றியவர் பொய்கையார் எனப்படுகிறது. இந்நூல் அறப்பால், பொருட்பால், இன்பப்பால் வீட்டுப்பால் என நான்கு பகுதிகளாகவும், அவற்றில் வீட்டுப்பால் 'இல்லியல், துறவியல் என இரண்டு இயல்களாகவும் வகுக்கப்பட்டுள்ளன.

அறப்பால் 10 வெண்பா, பொருட்பால் 9 வெண்பா, இன்பப்பால் 12 வெண்பா, வீட்டுப்பால் (இல்லியல் 8 வெண்பா, துறவியல் 6 வெண்பா) 14 வெண்பா எனக் கொண்டுள்ளன" என்பது வ. உ. சி அவர்கள் முன்னுரை.

கைந்நிலை என்ற நூல் ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே. ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன. பாடல் அளவைக் கொண்டும், நூற் பொருளை ஒட்டியும் இதனை 'ஐந்திணை அறுபது' என்றும் கூறலாம். ஐந்திணை பற்றிய வெண்பா நூல்களிலிருந்து வேற்றுமை தெரிவதற்காக, ஆசிரியரே 'கைந்நிலை' என்று இந்நூலிற்குப் பெயர் சூட்டி இருக்கலாம்.

இந்நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசை முறையில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன. இந்நூற் செய்யுட்களில் 18 பாடல்கள சிதைந்துள்ளன (1, 8,14-17, 20, 26-35, 38). இவற்றுள் மூன்று பாடல்கள் ஒரு சொல் அளவில் சிதைவுபட்டவை. ஏனைய பதினைந்தும் அடிகளும் சொற்களும் பல வேறு வகையில் சிதைந்து காண்கின்றன. இந் நூலைச் செய்தவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் எனப்படுகிறது.

எனவே இந்த கைந்நிலையில் குறைபாடுள்ள பாடல்களை TVU வலைத்தளத்தில் குறிப்பிட்டு, கருத்தும் முழுமை பெறாமலே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் பாடலில் தரப்பட்டுள்ள சொற்களையும், விடுபட்ட சொல் என்னவாக இருக்கும் என்றும் நான் குறிப்பிட்டிருக்கிறேன். அதைச் சரியா என நீங்களும் (மலைச்சாரற் கானக நாடன் கலந்தான் - கைந்நிலை 1) வாசித்துச் சொல்லவும்.

பின் வரும் பாடலகளை முழுமை பெறச் செய்ய (8,14-17, 20, 26-35, 38) நம் எழுத்து தளத்திலுள்ள தங்களைப் போன்றோர் (கந்ததாசன், விவேக் பாரதி, சியாமளா ராஜசேகர், கவின் சாரலன், மெய்யன் நடராஜ், அபி மலேசியா, சரஸ்வதி பாஸ்கரன் மற்றும் நான் குறிப்பிட மறந்தவர்கள்) முடியுமா என்ற முயற்சியாகவும் பாக்களின் நயத்திற்காகவும் பதிவு செய்து வருகிறேன்.

1. குறிஞ்சி

வரைவு நீட்டித்தவழி யாற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்.

நுகர்த லிவருங் கிளிகடி யேன
னிகரின் மடமா னெரியு - மம....சாரற்
கானக நாடன் கலந்தா னிலனென்று
மேனி சிதையும் பசந்து.

இந்தப்பாடலில் நான்காவது சீர் முழுவதும் தெரியாமல், 'மம..சாரற்' என்றிருக்கிறது. எரியும் என்ற ஈரசைச் சீருக்குப் பின், நிரையசை வர வேண்டும். மலை என்ற நிரையசைச் சொல்லை, சாரல் உடன் சேர்த்தும், 'மடமா னெரியும் மலைச்சாரல் என்று மோனையும் இசைவாய் அமைத்தால், குறிஞ்சித் திணைக்கு ஏதுவாகவும் அமையும் என்று கருதுகிறேன்.

நுகர்த லிவருங் கிளிகடி யேன
னிகரின் மடமா னெரியும் மலைச்சாரற்
கானக நாடன் கலந்தா னிலனென்று
மேனி சிதையும் பசந்து.

பொருளுரை:

தினைக்கதிரைத் தின்பதற்காகத் தினைத்தாளின் மேல் ஏறுங் கிளிகளை யோட்டுகின்ற தினைப்புனத்தில் ஒப்பில்லாத இளமையான மான்கள் நெருங்கித் திரியும் மலைச்சாரலில் காட்டிற்கு உள்ளாகிய நாட்டையுடைய தலைவன் என்னுடன் சேர்ந்தான்; அவ்வாறு சேர்ந்த தலைவன் இப்பொழுது அருகில் இல்லாது பிரிந்தான் என்பதையறிந்து என் உடல் பசலை நிறமாகி எழிலழிந்தது என்று தலைவி தோழிக்குக் கூறினாள்.

விளக்கம்:

நுகர்தல் - தின்னுதல். இவரும் - ஏறுகின்ற. கடி - ஓட்டுகின்ற.

ஒன்றற்கொன்று உயர்ந்ததும் தாழ்ந்ததுமாய், கன்றும் பிணையும் கலையுமாய்ப் பலவகையாக வரும் மான்கள் என்பதை விளக்க ‘’நிகரில்மடமான்’’ என்றார்.

நிகரில் - ஒன்றற்கொன்று ஒப்பில்லாத

நுகர்தல் இவரும் - நுகர்தற்கு இவரும்,

ஏனல் - தினை. இது தினை விளையும் இடத்தை யுணர்த்தியது:

அமர் சாரல் - ஒப்பில்லாத இளமையான மான்கள் நெருங்கித் திரியும் விரும்புகின்ற மலைச்சாரலில்;

அமர் சாரல் என்ற சொல் பொருத்தமாயிருக்குமா அல்லது மலைச்சாரல் என்ற சொல் பொருத்தமாயிருக்குமா என்று சிந்திக்க வேண்டியது.

கானக நாடன் என்பது தலைவனையுணர்த்தியது.

மலைச்சாரலில் வந்து சேர்ந்தான், தினைப்புனத்திற்கு வந்து சேர்ந்தான் எனக் கொள்ள வேண்டும்.

பகற்குறியிற் பல இடங்களில் வந்து கலந்திருப்பான் ஆதலால் ‘’ஏனல், சாரல்’’ என்றார்.

சாரலிலுள்ள ஏனலில் எனினும் ஏனல்களையுடைய சாரலில் எனினும் பொருந்தும்.

என்னையறியாதே என்மேனி பசந்து சிதையும் என்று வியப்பாகக் கூறினள் எனக் கொள்ள வேண்டும்.

என்று என்பது என்று அறிந்து என்ற பொருளைத் தந்தது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Jun-15, 10:37 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 377

மேலே