மெய்ப்பொருள் காண்பது அறிவு பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்ட

பொள்ளாச்சி அபி அவர்களின் சிறுகதைகளை படிக்கும் போது நான் முதலில் உணர்ந்தது கலைரசனையைத்தான்.அவருடைய ஒவ்வொரு படைப்புக்களும் நிகழ்கால உலகின் நடத்தையை கருவைக் கொண்டவை எனலாம்.'மெய்ப்பொருள் காண்பது அறிவு'கதையின் தலைப்பே விசித்திரமாக புதுமையாக காணப்படுவதைப் போல கதையும் புதுமையாகவுள்ளது.சில இடங்களில் களத்திற்கு ஏற்றால்
போல் அழகிய வருடல்கள் அமையப்பெற்றவை 'மலடிச் சோலையில் மலர்ந்த பனியால் இதழ் நனைத்த ரோஜாவைப் போல்'ஒட்டு மொத்த கதைகளுக்கே அழகைக் கொடுக்கிறது.

கதையின் தொடக்கத்தில் கரைகடந்து சென்ற சண்முகம் தன் தாயகத்திற்கு திரும்புகையில் பல தேச மனிதர்கள் அவர்களுடைய நடை,உடை கலாச்சாரங்கள் முகப்பாவனைகள் என்பன விமான நிலையத்தில் நேரும் காட்சியை ஒரு துளி கூட மாறாமல் அழகாய் மனக்கண்ணில் தோன்றும் வண்ணம் படைப்பாளர் வருடி இருப்பதோடு சண்முகம் தன ஊருக்குச் செல்ல டாக்சியில் ஏறும் போது நானும் கதையோடு பயணித்து போல் உணரச்செய்கிறது.

கதையின் போக்கில் சண்முகம் விமான நிலையத்திருந்து வெளியேறிய போது அவரை நாடி நின்ற டாக்ஸி ஓட்டுனர்களை விட்டு சற்று தூரத்தில் லேசாய் பழுப்பேறிப்போயிருந்த உள்மடியில் கிழிந்த காலர் தெரிகின்ற வெள்ளைச்சட்டை அளவான சிரிப்போடு ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்த மாநிற கார் ஓட்டுனரை அழைத்ததன் மூலம் அவனுடைய இரக்க மனநிலை சித்தரிக்கப்படுகிறது.காரணம் கதையில் தலைப்பைப் போல் அவ்வாகன ஓட்டுனர் கெஞ்சி குழாவி தன் உழைப்பை பிச்சையாய் வாங்காமல் நேர்மையாய் எதிர்பார்ப்பதை எண்ணி மனக்கண்ணில் சண்முகம் உணர்ந்துதான் அழைத்தார்
என்பதை கதாசிரியர் சொல்லாமல் உணர்த்துகின்றார்.

வாகன ஓட்டுனர் நீங்கள் எங்கு செல்ல வேண்டும்?சண்முகம் நினைத்ததைப் போல் அப்பாதை மார்க்கமே செல்லல்,பயணக்களைப்பிளிருந்த சண்முகத்தை அதனை மறக்கச்செய்ய பாடல் போடவா என்று ஆவலோடு கேட்டல்,இடையில் நிறுத்தச்சொல்ல ஏன் என்று வினவுதல்,டீக்கடையில் டீ வாங்கிக் கொடுத்தல் என்று வாகன ஓட்டுனரின் ஒவ்வொரு வருடல்களும் 'தொழிலில் நேர்மையைக் கொண்டவர்கள் உள்ளத்திலும் உயர்வான எண்ணம் கொண்டிருப்பார்' என்பதை அழகாய் கதைசொல்கிறது

வாகனத்திற்குள் இசையை அனுபவித்துக் கேட்டுக் கொண்டிருந்த சண்முகம் தன்னை அறியாமல் கண்களை அலை பாய விட்ட போது வாகன் ஓட்டுனர் குறுக்கிட்டு எமது நாட்டு சங்கிதமா?என்று வினவ 'ஆம்'லண்டலில் நடைபெற்ற கச்சரியின் போது பதிவு செய்யப்பட்டது.மேலைத்தேய சங்கீதத்தை விட கிழைத்தேய சங்கிதம் தான் உயர்வானது என்பதை இவ்வுலகமே நிகழ்காலத்தில் அறிந்ததை கதையும் ஒருமுறை உணர்த்துகிறது.

வாகன ஓட்டுனரும் சண்முகமும் டீக்கடையில் டீ வாங்கி குடித்துக் கொண்டிருக்கும் போது கண்களிலும் தென்படும் மனம் வலிக்கும் காட்சியை கதை சித்தரிக்கிறது."டீக்கடையின் உள்ளே டீ குடிப்பவர் கையில் சில்வர் தம்ளர்கள் மின்னியது,மரத்தடியில் நின்றும் அமர்ந்திருந்தவரின் கைகளில் பிளாஸ்டி கப்புகளும் தெரிந்தது"என்ற வரிகள் ஜாதிமதங்கள் மறந்து மனிதர்கள் என்ற ரீதியில் வளர்ந்து கொண்டிருக்கும் உலகில் பல கிராமப்புற பிரதேசத்திலுள்ள சாதிப்பிரிவினையை கதை சுட்டிக்காட்டி பழமையின் மிச்சத்தை தூக்கி வீசி மனிதனாக வாழ வேண்டும் என்ற ஆழமான கருத்தை நான் உணரும் போது சண்முகத்தின் கண்களில் திரண்டு நின்ற கண்ணீர் என் கண்களில் சாயல் காட்டியது என்று தான் சொல்ல வேண்டும்.இவ்வாறு கதையும் கருவும் நிகழ்காலத்தின் உலகின் கதையோடு பொருந்துவதோடு 'மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்ற தலைப்போடு இணைந்து 'சாதி மதம் ஒழிப்போம்'என்பதை உணர்த்துகின்றது.

மேற்படி திறனாய்வு என் சொந்த படைப்பாகும்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (9-Jun-15, 2:27 pm)
பார்வை : 1252

மேலே