ஆத்திச்சூடி சிறுகதை - எண்ணெழுத்திகழேல்

எண்ணெழுத்திகழேல்

எண் என்பது கணித நூல்,எழுத்தென்பது இலக்கண நூல்.இந்த இரண்டையும் மறவாமல்(இகழாமல்)கற்க வேண்டும்.

இவற்றை பயனற்றவை என்று எண்ணி அலட்சியப்படுத்தக்கூடாது.
இவைகளை கற்று அறிந்தவர்களுக்கே ஞான நூல்கள் தெளிவாக புரிபடும்,ஒருவருக்கு கணிதமும்,இலக்கணமும் இரு கண்கள் போல மிக முக்கியமானவை.

'எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்'என்பதும் இதனால்தான்.

அவந்தி தேசத்தில் இராஜவேல் என்ற அரசனுக்கு மிகவும் அழகான ஆனால் சிறிதும் எழுத்தறிவில்லாத மகன் ஒருவன் இருந்தான் அவனுக்கு எப்பாடு பட்டாகிலும் படிப்பறிவை புகட்டிவிடலாம் என்று அரசன் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் ஒன்றும் பயனளிக்க வில்லை.இதனால் கோபமடைந்த மன்னன், இவன் இந்த நாட்டை ஆளுவதற்கு ஏற்றவன் இல்லை என்று தன் நாட்டை விட்டே அனுப்பி விட்டான்.அரசகுமாரனும் தனது சொந்த நாட்டை விட்டு தென்னாட்டிற்கு சென்று அங்கு வசித்து வந்தான்.

ஒரு நாள் சோழராஜன் தலைநகரமான காவிரிப்பூம் பட்டணத்திற்குள் நுழைந்து அங்கு ராஜவீதியில் போய்க் கொண்டிருந்தான்.அப்பொழுது அரண்மனையின் மேல் மாடத்தில் நின்று கொண்டிருந்த சோழ மன்னனின் மகள் அரசகுமாரனின் அழகில் மயங்கி அவனை சந்திக்க எண்ணி அன்று மாலை நகர்புறத்தில் உள்ள ஒரு வசந்த மண்டபத் திற்கு வரவேண்டும் என்ற தன் எண்ணத்தை ஒரு ஓலையில் எழுதி அதை அவனிடம் எறிந்தாள்.

எழுதறிவில்லாத அரசகுமாரனோ அந்த ஓலையில் என்ன எழுதி இருக்கிறது என்று அறியாதவனாய் அதை தெரிந்து கொள்ள விரும்பி யாரிடம் கேட்பது என்று யோசித்து ஊருக்கு வெளியில் உள்ள ஒரு மண்டபத்தில் இருந்த ஒருவனிடம் அதை காட்டினான், அவனோ மிகவும் கெட்டவன், ஓலையில் எழுதியிருந்ததை படித்ததும் எப்படியாகிலும் அரசகுமாரனை ஏமாற்றி விட்டு அரசகுமாரியை தான் அடைய விரும்பி அவனிடம் 'இனி நீ இங்கிருந்தால் உன் தலை போய்விடும் என்று எழுதி இருக்கிறது' என்றான்,அதை உண்மை என்று நம்பி பயந்து போய் முட்டாள் அரசகுமாரன் சிறிதும் யோசியாமல் அந்த ஊரை விட்டே போய் விட்டான்.

அன்றிரவு ராஜகுமாரி இவன் வரவை எதிர்பார்த்து வசந்த மண்டபத்திற்கு வர.. அங்கு தான் விரும்பிய அரசகுமாரன் அல்லாத வேறொ ருவன் தன்னை ஏமாற்றி விட்டான் என்று உணர்ந்ததும் வெட்கத்தினாலும், துக்கத்தினாலும்,மிகவும் வருந்தி அப்பொழுதே தன் உயிரை போக்கிக் கொண்டாள்.

பிறகு அங்கு நடந்த இந்த விபரங்கள் யாவற்றையும் அறிந்த அரச குமாரன் தான் செய்த தவறினாலும்,தனக்காகவும்தானே ராஜகுமாரி உயிரை விட்டு விட்டாள் இனி நாம் உயிரோடு இருப்பதற்கு தகுதி இல்லை என்று நினைத்து வருந்தி அவனும் தன் உயிரை போக்கிக் கொண்டான்.கல்வியறிவு இல்லாத காரணத்தால் இப்படியாக அவன் தன் வாழ்க்கையில் பல இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியதாகி விட்டது.

எண்ணெழுத்திகழேல் என்பதில் 'எண் எழுத்து'என்பதற்கு எட்டெழுத்து என்றும்,யாவராலும் எண்ணுதற்குரிய எழுத்து என்றும் பொருள் கூறி கடவுளின் திருநாமமாகிய அஷ்டாக்ஷ்ரத்தை இகழாதே என்றும் சொல்வார்கள்.

எழுதியவர் : செல்வமணி (வலையில் படித்தத (23-Aug-15, 9:04 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 561

மேலே