சூரிய சந்திரர்

எங்கும் ஒளிவெள்ளம் . மரங்களும் மின்பூக்களைச் சூடி இருளில் கவினுறக் காட்சியளித்தன . திரும்பிய பக்கமெல்லாம் அழகின் சிரிப்பு . நடிகர் சங்கக் கட்டிடமே புதுப்பொலிவோடு காட்சி தந்தது . இன்று நடிகர் சங்கத்தின் வைரவிழா . திரையுலகமே திரண்டிருந்தது . ஆங்காங்கே கேமரா ..... பேட்டி ....! அழகுடன் ஆடம்பரமும் அணிவகுத்திருந்தது .

ஏறக்குறைய ஏ.சி ஹால் நிரம்பியிருந்தது . வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள் வந்த வண்ணம் இருந்தனர். பவளவிழா என்பதால் அறுபது பேருக்கு விருதுகள் வழங்கப் படவுள்ளது . ஆர்ட் டைரக்டர் விஷ்வாவின் கைவண்ணம் ஸ்டேஜில் தெரிந்தது. வானுலகையே மேடைக்கு அழைத்து வந்திருந்தார் விஷ்வா . வண்ண வண்ண விழிசிமிட்டும் தாரகைகளுடன் நடுநாயகமாய் சூரிய, சந்திரர்களின் அலங்கார அரியாசனம் . கலையெழில் கொஞ்சும் அலங்காரத்தை வியக்காதோர் யாருமில்லை.

விழாக் கமிட்டியின் தலைவர் டைரக்டர் சந்தோஷ் அவசரமாக உள்ளே வந்தவர் காம்பியர் திவ்யாவைக் கூப்பிட்டார் .

“ திவ்யா ! ரைட் சைட் என்டிரன்ஸ்-ல நடிகர் சந்தர்காந்த் வந்திட்டிருக்கார்மா . ஸ்பெஷல் இன்டர்வியூ எடுத்திடு . லைஃப் டைம் அச்சீவ்மெண்ட் அவார்ட் அவருக்கு கெடச்சதப் பத்திக் கேளும்மா ...அதோட அவரோட நெக்ஸ்ட் ப்ராஜக்ட் பத்தி கேளு . அவரோட மிஸஸும் வராங்க. அவங்க கிட்டயும் பேட்டி எடுத்திடு !”

“ஓ.கே சார் !”

ஹாலில் மிகப்பெரிய ஸ்க்ரீனில் எல்லாக் காட்சிகளும் நேரடியாக ஒளிபரப்பாகின . கொஞ்ச நேரத்தில் பேண்ட் வாத்தியம் முழங்க , வான வேடிக்கையுடன் வரவேற்பு கண்ணையும் , கருத்தையும் கவர்ந்தது . எல்லோர் விழிகளும் ஸ்க்ரீனில் பதிந்தன .வழிநெடுக மலர்த் தூவி அழைத்து வரப்பட்டவர் யாரென அனைவருள்ளும் ஆவல் பிறந்தது ,ராணுவ உடையில் கம்பீரமாய் இருந்த ஒருவரை டைரக்டர் சந்தோஷ் கைக்குலுக்கி அழைத்து வந்தார் .மேடையில் அவர் சூரியன் போல் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் உட்கார வைக்கப்பட்டார் . ஹாலில் அமர்ந்திருந்த பலரின் முகத்தில் கேள்விக்குறிகளும், ஆச்சர்யக்குறிகளும்!
சீஃப் கெஸ்ட் யாரென்பதை சர்ப்ரைஸாக வைத்திருந்ததால் நார்த்திலிருந்து பேமஸ் ஆக்டர் , ஆக்ட்ரஸ் வரலாம் என்பதே எல்லோரின் கணிப்பு .

அடுத்து சிறிது நேரத்தில் மீண்டும் பேண்ட் வாத்தியம் முழங்க சரவெடி அதிர வைத்தது . டைரக்டர் சந்தோஷ் விழாக் குழுவினருடன் வரவேற்கக் காத்திருந்தார் . எல்லோர் பார்வையும் மீண்டும் ஸ்கிரீனில் நிலைக்குத்தியிருந்தது . மெலிந்த தேகம் ,கருத்த நிறம் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, தோளில் வெள்ளைத் துண்டு போட்டு வந்தவரை டைரக்டர் சந்தோஷ் கைக்கூப்பி, ஆரத்தழுவி கரம்பிடித்து அழைத்து வந்து சந்திராசனத்தில் அமர வைத்தார் . கற்பனையில் மிதந்த திரை நட்சத்திரங்களுக்குச் சப்பென்று இருந்தது .

குத்துவிளக்கேற்றி, இறைவணக்கத்துடன் விழா இனிதே தொடங்கியது. வரவேற்புரை வழங்க வந்த டைரக்டர் சந்தோஷ் சீஃப் கெஸ்ட் இருவரையும் அறிமுகப்படுத்தினார் .

“ என் இனிய கலைக்குடும்பமே ...! உங்க அனைவரையும் இருகரம் கூப்பி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி ! நம்ம நடிகர் சங்கத்தின் வைர விழாவுல விருதுகள் கொடுத்து நம்மள கௌரவிக்க வந்திருக்கிற சிறப்பு விருந்தினர உங்களுக்கு நான் அறிமுகப் படுத்தறேன். சூரியாசனத்துல வீற்றிருப்பவர் பேரு திரு.அமல்ராஜ் . ராணுவ வீரர் . சந்திராசனத்துக்குச் சொந்தக்காரர் திரு.கந்தசாமி . இவர் விவசாயி . நம்ம நாட்டின் முதுகெலும்புகளாய்த் திகழும் இவங்க கையால விருது வாங்கறத பெரிய பேறா நான் நெனைக்கிறேன் . எளிமையின் உச்சம் இவங்க ....! பகட்டும் , படாடோபமும் அறியாதவங்க . என் அன்புக் கட்டளைய மறுக்க முடியாம இங்கு வந்திருக்காங்க ...! அவங்க இருவரையும் வருக வருக வருகவென வணங்கி வரவேற்குறேன் .....!!”

“ எல்லா விழாக்கள்ளயும் லைஃப் டைம் அச்சீவ்மெண்ட் அவார்ட் கடைசியிலதான் கொடுப்பாங்க ....! ஆனா இங்க முதல் விருதே அதுதான் . இந்த விருத பெறுவது பிரபல நடிகர் சந்தர்காந்த் . உங்க எல்லாரோட வாழ்த்துக்களோட நம்ம அபிமான நடிகர் சந்தர்காந்த் அவர்கள மேடைக்கு அழைக்கிறேன் .”

கரகோஷத்தால் அரங்கமே அதிர்ந்தது . மேடை ஏறிய நடிகர் சந்தர்காந்த் சிறப்பு விருந்தினர்களைக் கட்டியணைத்துக் கொண்டார் .அவர் விழிகள் பனித்திருந்தன . அவருக்குரிய விருதினை ராணுவ வீரர் அமல்ராஜ் வழங்க , நெகிழ்வுடன் பெற்றுக்கொண்ட சந்தர்காந்த் அவருக்கு ராயல் சல்யூட் அடித்தார் .

மைக் முன் நின்றவர் சில மணித்துளிகள் அமைதியாய் நின்றார் . பெருமூச்சு விட்டார் .

“உயிருக்குயிரான ரசிகப் பெருமக்களே , நடிகர், நடிகைகளே , கலைக்குடும்பக் கண்மணிகளே ....உங்க எல்லோருக்கும் என் பணிவான வணக்கம் .இந்த நாள் என் வாழ்க்கையில பொன் எழுத்துக்களால் பொரிக்கப்படவேண்டிய நன்னாள் . நடிகர் சங்கத்தின் வைரவிழால எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து கௌரவிச்சதுக்கு நன்றி . இதுல நான் பெருமையா நெனைக்கிற விஷயம் என்னன்னா ஒரு ராணுவ வீரர் கிட்டருந்து வாங்கினதுதான் ! இந்த நேரத்துல டைரக்டர் சந்தோஷ நான் இதயப்பூர்வமா பாராட்டுறேன் . சிறப்பு விருந்தினர்களா இவர் தேர்வு செஞ்சவங்கள நான் ரொம்பவும் மதிக்கிறேன் .

பொதுவா ஒரு நகைக்கடை திறப்பு விழாவோ, ஜவுளிக்கடை திறப்புவிழாவோ , ஷாப்பிங் மாலோ இன்னும் சொல்லப்போனா ஒரு ஹாஸ்பிடல், காலேஜ் திறக்கக்கூட ஃபிலிம் ஸ்டார்ஸ தான் கூப்பிடுவாங்க . ஆனா இன்னிக்கு நட்சத்திரங்களுக்கு விருது கொடுக்க ரெண்டு பேரைக் கூப்பிட்டு அவங்கள சூரிய ,சந்திர ஆசனம் கொடுத்து கௌரவிச்சதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம் .

உலகத்துல பூகம்பமோ , நிலச்சரிவோ , வெள்ளமோ , சுனாமியோ , குண்டுவெடிப்போ , தீவிபத்தோ ,தீவிரவாதமோ .....எது நடந்தாலும் உடனே ராணுவத்ததான் கூப்பிடுவோம் . நாம இங்க சொகுசா எந்த பயமுமில்லாம விழாக் கொண்டாடுரோம்னா அங்க எல்லையில நமக்காக அல்லும்பகலும் காவல் காக்கிறது ராணுவம்தான் . தங்களோட உயிர துச்சமா நெனச்சு நமக்காக உழைக்கிற அவங்களுக்கு என்ன கைம்மாறு செய்யறோம் ? எந்த விதத்துலயாவது நன்றி சொல்றோமா ....? எதிர்பாரா விதமா நமக்காக போராடி அவங்க உயிர்பிரிஞ்சாலும் அந்தகணத்துலயே மறந்திடறோம் .

இன்னக்கி உள்ளபடியே நான் நெகிழ்ந்து போயிருக்கேன் . என் பேமிலிலயும் ரெண்டு பேர் மிலிட்டிரில இருந்து வீர மரணம் அடஞ்சிருக்காங்க ....என் தம்பி குஜராத் பூகம்பத்துல இடிபாடுகள்ள சிக்கிகிடந்த பலபேரக் காப்பாத்தினான் . கடைசியா உயிருக்குப் போராடிட்டிருந்த ஒரு குழந்தையக் காப்பாத்த யார் சொல்லியும் கேக்காம இடிபாட்டுக்கு அடியில போனான் ...குழந்தையக் காப்பாத்தி இடுக்குவழியா கையத்தூக்கி கொடுத்துட்டான் . ஆனா எல்லாரும் பாத்திட்டிருக்கும் போதே புதைஞ்சிப் போயிட்டான் .... இதயெல்லாம் வீடியோல பாத்தப்ப இதயமே நொறுங்கிப் போச்சு . இத மாதிரி எத்தனை பேர் ....??

என் மனைவியோட தம்பி மும்பை ஹோட்டல் குண்டுவெடிப்புல தீவிரவாதிங்க கூட போராடி பல உயிர்களக் காப்பாத்தினான் ....கடைசி மூச்சு இருக்குறவரைக்கும் அவங்கள எதிர்த்து நின்னான் . அவங்கள பல பேர சுட்டுத்தள்ளினான் . ஆனா அவனும் உயிர் பிழைக்கல.... !! “
கண்ணீர் உருண்டோடியது . ஹாலில் நிசப்தம் . அவருடைய பேச்சு கூடி இருந்தோர் இதயத்தை அசைத்தது .

“ அமல்ராஜ் கிட்ட வாங்கும்போது என் கண்முன் அந்தக் காட்சியெல்லாம் வந்துபோச்சு . நடிகர்களுக்கு மக்கள்கிட்ட நெறைய செல்வாக்கு இருக்கு . நாம சொன்ன அதக் கேக்கறதுக்கு ரசிகர்ங்க இருக்காங்க ....! நடிகர்கள்ளாம் நல்ல விஷயம் ஃபாலோ பண்றதுல எல்லாருக்கும் முன் உதாரணமா இருக்கணும் .நாம இவங்கள மாதிரி உள்ளவங்களா கௌரவிச்சா மத்தவங்களும் செய்வாங்க ....! “
கண்களைத் துடைத்துக்கொண்டு கரம் குவித்து விடைபெற்றார் .

விருதளிப்பு விழா மனநிறைவோடு நடந்தேறியது .

நன்றி நவில மேடையேறிய டைரக்டர் சந்தோஷ் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி , காலைத்தொட்டு வணங்கினார் .

“ நான் ஏன் ஒரு விவசாயிய இங்க அழைத்தேன்னு நீங்கல்லாம் நினைக்கலாம் . எத்தனைதான் கோடி கோடியா சம்பாதிச்சாலும் சாப்பிடாம நம்மால ஒரு நாள் கழிக்க முடியுமா ? நம்ம பசிபோக்க வெயில் ,மழை பாக்காம ஏர் பிடிச்சி உழர விவசாயிங்கள நாம என்னைக்காவது நெனச்சிருக்கோமா ...?? அவங்கலாம் வேலை நிறுத்தம் செஞ்சா நம்ம கதி என்னாகும் ? தங்கத்தையும் , வைரத்தையும் சாப்பிட முடியுமா ? இல்ல ...பணத்தக் கரைச்சுக் குடிக்க முடியுமா ?? இவங்க நம்ம பசியாற்றிவிட்டு தான் பட்டினி கெடக்கிற அவல நினையில இருக்காங்க ....! காடு வெளஞ்சாலும் காசுபணம் மிஞ்சாததால கடனாகி கடைசியில உயிரையே மாய்ச்சுக்கிறாங்க ....! பாடுபட்டு உழச்சதும் பலனில்லாமப் போகுது ..... இந்த கதி இனி யாருக்கும் வரக் கூடாது ....என் வீட்டுல என் அப்பாவ நான் இழந்த மாதிரி ......!!” நா தழுதழுத்தது சந்தோஷுக்கு .

“ இன்று நாம இவங்களப் பெருமைப் படுத்தியது மாதிரி .....இத டிவில பாக்குற லட்சக்கணக்கான பேர்ல பத்து இருபது பேராவது பண்ணா அதப்பாத்து மத்தவங்களும் பண்ணுவாங்க .....! நம்ம சங்கம் நல்லத செயல் படுத்தரதுல முதன்மையா இருக்கணும் ! நீங்க எல்லாரும் மனசார நான் சொல்றத ஏத்துப்பீங்கன்னு நம்பறேன் !”

கைத்தட்டல்கள் அதை ஆமோதிப்பதுபோல் இருந்தது .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (1-Sep-15, 11:13 pm)
பார்வை : 1253

மேலே