ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

வீடோ, நாடோ அனைததிலும் ஒற்றுமை என்பது வேண்டும். ஒற்றுமை இல்லையெனில் வீடும் நாடும் சீரழிந்துவிடும். இதனை,

‘‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

ஒன்றுபட்டுச் செயல்பட்டால் அனைவரும் வாழலாம். இல்லை எனில் அனைவருக்கும் அழிவு என்பது உறுதி. இதனையே இப்பழமொழி எடுத்துரைக்கின்றது. இதனை வலியுறுத்துவது போன்று பாகவதத்தில் பின்வரும் கதை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒருமுறை தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த பின்னர் விருந்து நடைபெற்றது. அப்போது கையினை மடக்காது விருந்துண்ண வேண்டும் என்று திருமால் நிபந்தனை விதித்தார். இதனை ஏற்காத அசுரர்கள் இது எப்படி முடியும்? கையை மடக்காது யாராலும் உண்ண முடியாது. இது வேண்டுமென்றே பழிவாங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட நிபந்தனை. இதனை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று விருந்துண்ண முடியாது சென்றுவிட்டனர்.

ஆனால் தேவர்கள் இதனை ஏற்றுக் கொண்டனர். தேவர்கள் எதிர் எதிர் இலையில் அமர்ந்து உணவைப் பிசைந்து எடுத்துத் தங்களுக்கு எதிரில் உள்ளவர் வாயில் கையை மடக்காது ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டனர். இதனால் மனநிலைவுடன் விருந்தினை ருசித்து உண்டனர். தேவர்கள் இதிலும் ஒற்றுமையுடன் சிந்தித்துச் செயல்பட்டதால் வெற்றி பெற்றனர். அசுரர்கள் புரிந்து கொள்ளாது ஒற்றுமையின்றி செயல்பட்டதால் விருந்துண்ண முடியாமலேயே சென்றனர். இக்கதை ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதற்காகக் கூறப்பட்டுள்ள கதையாகும்.

எழுதியவர் : முனைவர் சி.சேதுராமன் (3-Sep-15, 3:40 pm)
சேர்த்தது : nalina
பார்வை : 5586

மேலே