பழமொழியும் அதன் விளக்கமும்

1) பழமொழி : அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

விளக்கம் : ஒருவரது மனநிலையை அவரது முகத்தில் கண்டு அறியலாம். அவரது முக பாவனைகளை வைத்தே அவரது மனதில் எந்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

மனிதருக்கு முகபாவங்கள் அவரது மன எண்ணங்களை பொறுத்து அமையும்.

2) பழமொழி : அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

விளக்கம் : உறவுகள் தொலைவில் இருந்தால் எப்போதாவது சந்திக்கும் போது அவர்களிடத்தில் சண்டை குறைவாக இருப்பதையும், பக்கத்தில் இருக்கும் உறவுகளிடம் எப்போதுமே பழக வாய்ப்பு இருப்பதால் அடிக்கடி ஏதும் பிரச்சனை வருவதையும் அன்றாடம் நாம் காணலாம்.

அதே போலவே, எப்படிப்பட்ட உறவானாலும் கொஞ்சம் மரியாதை கொடுத்து நடத்தினால் பிரச்சனை வராமலும் நெருங்கி வர வர மரியாதை இல்லாமல் போவதால் சில நேரம் பிரச்சனை வருவதையும் காணலாம்

இதையே அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. என்ற பழமொழி உணர்த்துகிறது.

3 ) பழமொழி : அகல உழுகிறதை விட ஆழ உழு.

விளக்கம் : நிலம் உழும் போது நிலத்தின் அடியில் உரம் மிக்க மண் இருக்கும், மேல் மண் அடிக்கடி பயிரிடப்பட்டு தாது பொருட்கள் குறைந்து காணப்படும், புது மண்ணில் பயிர் செழித்து வளரும்.

மேலோட்டமாக உழுதுச் செல்வதை விட ஆழமாக உழுதால் அடிமண் மேலே வரும், இதனால் பயிருக்கும் செழிப்பு.

அதே போல, நூல்கள் படிக்கும் போதும், கல்வி கற்கும் போதும், சில விசயங்கள் கற்றுக்கொள்ளும் போதும் மோலோட்டமாக தெரிந்து கொள்ளாமல் ஆழ்ந்து தெரிந்துகொள்ளல் அவசியமாகும். அதுவே நிலைக்கும். மற்றவை சில தினங்களில் மறந்துவிடும்.

இப்பழமொழி அறிவுரை மட்டும் கூறாமல் பண்டைய தமிழர் விவசாய அறிவையும் விளக்குகிறது.

4) பழமொழி : அகல் வட்டம் பகல் மழை

விளக்கம் : அகல் வட்டம் காணப்பட்டால் மழை வர வாய்ப்பு உண்டு

அகல் வட்டம் என்பது (அகல்) விளக்கின் ஒளியைச்சுற்றி பிரகாசமாக தெரியும் வட்டத்தைப்போல சூரியனைச்சுற்றியும் பெரிய வட்டம் தெரியும். அவ்வாறு வானத்தில் அகல்வட்டம் தெளிவாக காணப்பட்டால் மழை வருவதற்கான வாய்ப்பு உண்டு என்பது பொருள்.

5) பழமொழி : அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

விளக்கம் : சைவ மிருகங்களில் பெரிதான யானைக்கு உணவளித்து தாக்குப்பிடிப்பது கடினம். அது அசைந்து அசைந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்கும். அதனால் உணவு சீக்கிரமாகவே தீர்ந்துவிடும்.

ஆனால் வீட்டில் உள்ளவர்கள் வேலை செய்யாது (அசையாது) சம்பாதிக்காமல் சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் எவ்வளவுதான் சொத்து இருந்தாலும் மிக விரைவில் சொத்துகள் தீர்ந்துவிடும்.

எனவே தேவைக்கு ஏற்ப உழைத்து சம்பாதித்து சாப்பிட வேண்டும்.

எழுதியவர் : செல்வமணி - இணையம் L கார்த்த (22-Sep-15, 10:43 am)
பார்வை : 15925

சிறந்த நகைச்சுவைகள்

மேலே