மனிதம் - கற்குவேல் பா

மனிதம்
`````````````
நேற்றுவரை அவர்
அங்கேதான் அமர்ந்து
பிச்சை எடுத்துக்
கொண்டிருந்தார் !

நானோ அவனோ
அவளோ அவர்களோ
யாரும் ஒரு ரூபாயும்
தட்டில் இட்டதாய்
இந்த நொடிவரை
நியாபகம் இல்லை !

இன்று அங்கே
கூடியிருந்த கூட்டம்
உறுதி செய்தது
அவரது இறப்பினை !

ஒன்றிரண்டு நபர்கள்
அவசர ஊர்தியை
அலைபேசியில்
அழைத்த வண்ணம்
பரபரப்பாக காணப்பட ;

வந்த ஊர்தியிலிருந்து
இறங்கிய ஊழியர்கள்
" யாருக்கேனும்
இவரை தெரிகிறதா
இவரது உடலை
யாரேனும் ஏற்க
தயாராக உள்ளீர்களா "
என்று கேட்ட நொடியில்
விரைந்து களைந்த
கூட்டத்திலிருந்து
மெதுவாக புறப்பட்டது
அவசர ஊர்தி !

செல்லும் வழியில்
அந்த மனிதர்
பிச்சை எடுத்து
சேமித்த பணம் - ரூபாய்
நூற்றி ஐம்பதை
மாநகராட்சி ஊழியர்கள்
எடுத்துக் கொள்ள ;
அரசு மருத்துவமனையை
அடைந்த உடலில்
கிழித்து எடுக்கப்பட்டது
முக்கிய உறுப்புகள் !

எடுக்கப்பட்ட உறுப்புகளில்
ஒன்றிரண்டைத்தவிர
மற்றவற்றை அதிவேகமாக்
தனியார் வசமுள்ள
மருத்துவமனைக்கு
கொண்டு சென்றே
கல்லாக்கட்டினர்
அறுத்து எடுத்த
அரசு மருத்துவர்கள் !

மிஞ்சிய
தோல் எலும்புகளை
ஒன்றாக துணியில் சுற்றி
அரசு தகன மேடையில்
வரவுகள் கடந்த
அரசாங்க செலவில்
எரியூட்டப்பட்டது ,
அந்த நொடிவரை
" மனிதம் கண்டிராத " - அந்த
மனிதனின் உடல் !

- கற்குவேல் . பா

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (9-Oct-15, 3:30 pm)
பார்வை : 660

மேலே