சந்தோஷமாக வைத்திருப்பவனே நல்ல நண்பன்

ஒரு பெரிய மருத்துவமனையின் ஐசியு வார்டில் இரு விபத்து நோயாளிகள்.. ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை.. இருவருக்குமிடையே ஒரு ஸ்க்ரீன்.. ஒருவருக்கு ஜன்னலோரம் படுக்கை.. இன்னொருவருக்கு ஜன்னல் கிடையாது.

எப்போதாவது வந்து செல்லும் நர்ஸை தவிர தனிமை.. தனிமை.. தனிமை..

நாளடைவில் இரு நோயாளிகளும் நண்பர்களாகி விட்டனர்.. ஒருமுறை ஜன்னலோர நோயாளியிடம், ''உனக்காவது பொழுது போக்க ஒரு ஜன்னல் இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை” என்று கவலையுடன் சொன்னார் நட்பு நோயாளி..

''கவலைப்படாதே நண்பா.. நான் ஜன்னல் வழியாக என்னென்ன பார்க்கிறேனோ, அத்தனையும் உன்னிடம் சொல்கிறேன்'' என்றார் ஜன்னலோர நோயாளி..அன்று முதல் ஜன்னலோர நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறிவந்தார்..

''நண்பா.. ஜன்னலுக்கு வெளியே ஒரு கடற்கரை சாலை.. அதில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது.. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன. மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்.. மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்.. ஊர்வல ஆராவாரங்கள் எதுவும் நட்பு நோயாளிக்கு கேட்கவில்லை என்றாலும், நாதஸ்வரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சிகள் மனக்கண்ணில் ஓடுகின்றன..

ஒருநாள் ஜன்னலோர நோயாளி திடீரென்று இறந்துப்போனார்.. மீண்டும் அந்த நோயாளிக்கு வெறுமை.. ஒருநாள் நர்ஸ் வந்தபோது, தன் படுக்கையை ஜன்னலோரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள, அவ்வாறே மாற்றப்பட்டது.

இனி தனக்கு நன்கு பொழுது போகும் என்று எண்ணியவாறே.. ஜன்னல் வழியே நோக்க, அங்கே பெரிய சுவர்.. வேறெதுவும் தெரியவில்லை.. அப்படியானால் ஜன்னலோர நோயாளி இத்தனை நாளும் சொன்ன கதைகள்?

மறுநாள் நர்ஸ் வந்தவுடன், நடந்தவற்றை நோயாளி கூறினார்..அந்த நர்ஸ் சொன்னார், ''நீங்கள் வெளியே பார்க்கும் அந்த சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது.. காரணம், ஒரு விபத்தில் இரு கண் பார்வையையும் முன்பே அவர் இழந்துவிட்டார்..

துன்பங்களை தன்னளவில் வைத்துக்கொண்டு மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பவனே நல்ல நண்பன்.

எழுதியவர் : செல்வமணி (21-Oct-15, 12:43 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 139

மேலே