அவருக்கு அது கட்டாயம் கிடைக்கும்
34. யார் சத்தியத்தைத் தேடி அலைகிறாரோ அவருக்கு அது கட்டாயம் கிடைக்கும்
காந்திஜி வங்காளத்தில் சுற்றுப்பிரயாணம் செய்து கொண்டிருந்தார். வழிநெடுக ஜனங்கள் கூட்டம் கூட்டமாக நின்று மனப்பூர்வமாகத் தம்மாலானதை ஹரிஜன நிதிக்காகக் காந்திஜியிடம் கொடுத்தனர். ஒரு ஊர் ரயிலடியில் ஒரு மாது கூட்டத்தைப்பிளந்து கொண்டு காந்திஜி உள்ள ரயில் பெட்டியின் பக்கத்தில் வந்தாள், தங்க ஆபரணங்கள் அவள் உடம்பில் ஜொலித்துக் கொண்டிருந்தன. பக்கத்தில் வந்துதான் அணிந்துகொண்டிருந்த எல்லா நகைகளையும் கழற்றி காந்திஜியின் திருவடிகளில் சமர்பித்து, ”எனக்குச் சத்தியத்தைக் கொடுத்தருளுங்கள்” என்றாள்.
‘இது ஆண்டவன் ஒருவனால்தான் செய்ய முடியும். யார் சத்தியத்தை தேடி அலைகிறாரோ அவருக்கு அது கட்டாயம் கிடைக்கும்’ என்று பதிலளித்தார். காந்திஜி.