இறந்தவன் மீண்டும் இறந்தேன்

சுற்றிலும் உறவுகள்...
கதறியழும் மனைவி...
காலருகே மகள்கள்...
தலையருகே மருமகள்கள்...
சோகமாய் மகன்கள்...
துக்கத்தோடு மருமகன்கள்...

பச்சை கொண்டு
பரபரப்பாய்
திரியும் சம்பந்திகள்...
நட்பும்... சுற்றமும்...
நாலா பக்கமும்...

சாரயம் கொடுத்த
ஊக்கத்தில்
துள்ளி அடிக்கும்
தப்பாட்டக்காரர்கள்...

வெட்டி வந்த
கம்பில் பாடை
கட்டும் சோனையன்...

சுடுகாட்டில்
குழி வெட்டப்
போனவர்களோடு
கூடப் போன
நாகப்பன்...

எட்டி நின்று
எல்லா பார்க்கிறேன்...
அவர்களின் வலி
கஷ்டப்படுத்தியது...

பாடி எப்ப எடுக்கிறது
கேள்விக்கான பதிலாய்..

ராத்திரி ஆனது...
வாசம் வந்திரும்...
பாடியை சீக்கிரம்
எடுத்திடலாம்...
பெரியவன்
சொன்னபோது...

நீர்மாலைக்கு
ஏற்பாடு பண்ணச்
சொல்லுங்கப்பா...
யாரோ சொல்ல...

நேற்று வரை
அப்பாவாய்
இதோ இப்போது
பாடி ஆகிவிட்டேன்...

ஆம்...
இறந்த பின்
சொந்தங்களைத் தேடிய
என் ஆன்மா
வலியோடு இறந்தது....
-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார். (22-Nov-15, 10:55 pm)
பார்வை : 87

மேலே