அழுகக்கூடாது

காலையில் மகள்களிடையே ஏதோ செல்லச் சண்டை. சின்னவள் பெரியவளைக் கன்னத்தில் கிள்ளிவிட்டு ஓட, இவள் வழக்கம்போல் அழத் தொடங்கிவிட்டாள்.

‘ஏய் நங்கை, காலங்காத்தால ஏன் இப்படி அழறே?’, மனைவியார் எரிச்சலுடன் கத்தினார்.

‘நான் அழுகவே இல்லை!’ என்றாள் நங்கை விசும்பியபடி.

நான் நங்கையை இந்தப் பக்கம் இழுத்து, ‘உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா?’ என்றேன்.

‘சொல்லு.’

’ஒரு ஊர்ல ஒரு சின்னப் பொண்ணாம், அவ பேரு நங்கையாம்.’

நங்கைக்குத் தன்னுடைய பெயரில் கதைகள் அமைந்தால் ரொம்பப் பிடிக்கும். ஆகவே, அழுகையை மறந்து ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தாள்.

’ஒருநாள், அந்த நங்கை மார்க்கெட்டுக்குப் போய் ரெண்டு ஆப்பிள் வாங்கினாளாம், ஒண்ணு ரெட் ஆப்பிள், இன்னொண்ணு க்ரீன் ஆப்பிள்.’

’வீட்டுக்கு வந்த நங்கை, சிவப்பு ஆப்பிளைமட்டும் ஃப்ரிட்ஜுக்குள்ளே பத்திரமா வெச்சாளாம், பச்சை ஆப்பிளை அப்படியே டேபிள்மேல வெச்சுட்டாளாம்.’

‘ரெண்டு நாள் கழிச்சுப் பார்த்தா, சிவப்பு ஆப்பிள் மார்க்கெட்ல பார்த்தமாதிரியே ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருந்ததாம், ஆனா பச்சை ஆப்பிள் அழுகிப்போச்சாம்.’

’அப்போ, க்ரீன் ஆப்பிளைப் பார்த்து அந்த ரெட் ஆப்பிள், ’ஹாஹாஹா, நீ அழுகிப் போய்ட்டே, நான் அழுகவே இல்லை’ன்னு சொல்லிச்சாம்.’

‘அப்புறம்?’

‘அவ்ளோதான் கதை’ என்றேன். ‘கொஞ்ச நேரம் முன்னாடி ஏன் அழறேன்னு அம்மா கேட்டபோது நீ என்ன பதில் சொன்னே?’

‘நான் அழுகவே இல்லைன்னு சொன்னேன்.’

‘அழுகிப்போறதுக்கு நீ என்ன ஆப்பிளா? மனுஷங்க அழுகமுடியுமா? அழதான் முடியும்!’

‘ஓ!’ என்றாள் நங்கை, ‘நான் அழவே இல்லைன்னு சொல்லணுமா?’

‘அவ்ளோதான். இனிமே சண்டை போட்டுக்காம, அழாம வெளாடுங்க.’

***

என். சொக்கன் …

19 01 2013

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி மூலம்:என (27-Nov-15, 11:46 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 452

மேலே