ஓர் இரயில் பயணத்தில்

கை சூப்பியபடி
ஒரு சிறுமியும்...
கால்மேல் கால்போட்டபடி
ஒரு சிறுவனும்
என்னை ஏனோ
கவர்கிறார்கள்...

என்பால்ய பருவத்தில்
இப்படி இருந்திருப்பேனோ
நான் ?
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
துருதுருவென
விளையாடி
மழலைமொழி பேசி
ஓடும் ரெயிலில்
ஓடித்திரியும்
அச்சிறுமியை
காண்கையில்..

மழலையாகவே
இருந்திருக்ககூடாதா
என ஏங்குகிறது
மனம்...!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
வாயை திறந்தபடி
துயிலும்
முதியவரை
காண்கையில்...

தூங்கிய
பாட்டியின் வாயில்
துண்டுத்தாளைத்
திணித்து
அடிவாங்கியது
வலிக்கிறது
இன்னும்...
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
அடித்துபிடித்து
ரயிலேறிய பின்
அமர இடம்தேடி
தன் மனைவி
மகள்
மகனை
அமரவைத்த திருப்தியில்
நிற்கிறார் ஒரு தந்தை..
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
மணி எட்டாகிவிட்டது
ஒருசெட் பூரி
ஒரு வடை
ஒரு பழம்
உண்டபின்னும்
மாத்திரை
உண்கிறார்
ஒரு பயணி...
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
அவசர நிமித்தமாய்
எழுந்து செல்லும்போது
நடைபாதையில்
துயிலும் குழந்தையை
தாண்டுகையில்
துடிக்குது மனது
முதல் முறை
தெரிந்துசெய்யும்
தவறுக்கு...
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
கணினி இயக்கியபடி
ஓர் மாணவன்..
கைபேசியில் கதைத்தபடி
ஓர் முதியவர்...
அவசர வேலையாய்
ரயிலேறிய டிப் டாப் ஆசாமி
தன் தோளையே மெத்தையாக்கி குழந்தையை தூங்கச்செய்யும்பெண்
கிழிந்தசட்டையோடு
கழிவறை அருகில் ஓர் மனிதன்...

ஓ..அதனால்தான்
இது பொதுப்பெட்டியோ?
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
புரோட்டா
சப்பாத்தி
இட்லி
டீ..காபியென
சுற்றிலும்
பலகுரல்கள்
இரவிலும்
மனிதர்கள்
உழைத்து
மகிழ்கிறார்கள்...

அரசியல்வாதியே
எங்கள் நாட்டில்
ரயில் பயணம்
நீர் செய்ததுண்டா
ஒருமுறையேனும்
பொதுப்பெட்டியில்...?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (29-Nov-15, 6:26 pm)
பார்வை : 412

மேலே