மனசு பேசுகிறது கூத்தாடிகளைக் கொண்டாடுவோம்

என்னடா இவன் எல்லாரும் கூத்தாடிகள் நமக்காக போராட மாட்டார்களாம்... இனி அவர்கள் படங்களை நாம் யாரும் போய் பார்க்க வேண்டாம் என்று முகநூலிலும் டுவிட்டரிலும் செய்திகளைப் பகிர்ந்து வருகிறார்கள். விஷால் பட சூட்டிங்கை கல்லை எறிந்து விரட்டி நிப்பாட்டியிருக்கிறான் மறத்தமிழன். அப்படியிருக்க கூத்தாடிகளைக் கொண்டாடுவோம் அப்படின்னு தலைப்புல எழுதுறானேன்னுதானே பாக்குறீங்க. நாம காலங்காலமா அதைத்தானே பண்ணிக்கிட்டு வாறோம். இன்னைக்கு கூப்பாடு போடுவோம்... நாளைக்கே தெறியோ, வெறியோ வந்தா பால் குடம் எடுத்து, வேல் குத்தி அட்டையில செஞ்ச கூத்தாடியோ படத்துக்கு மேல ஏறி பால் அபிஷேகம் பண்ணுறோம்ன்னு நமக்கு பால் உத்த வச்சிருவோம். உடனே அந்தக் கூத்தாடி நடிகரும் நம்மளோட ஆத்தாவை கட்டிப்பிடிச்சி வராத கண்ணீரை வரவச்சி டயலாக்கெல்லாம் பேசி ஒரு அம்பது ஆயிரத்தை கொடுத்து போட்டோ எடுத்து விளம்பரமும் தேடிக்குவானுங்க... இந்த அம்பதாயிரம் அந்த ஆத்தாவுக்கு போதுமா..? நாம இருந்து 50, 100 கொடுக்கிறதை விட இது பெரிதா என்ன...? படுபாவிக பால் அபிஷேகம் பண்ணுறேன்னு இப்படி பல்லாக்குல பொயிட்டானேன்னு எவனாச்சும் உண்மையாவே வருத்தப்பட்டு இனிமே எவனும் எனக்கு கட் அவுட் வைக்க கூடாது, பால் அபிஷேகம் பண்ணக்கூடாதுன்னு சொல்றானுங்களா இல்லையே... அவனுக தொழில் நடிக்கிறது.... அதை சரியாப் பண்ணுறானுங்க... நாம இன்னமும் பால் அபிஷேகம் பண்ணிக்கிட்டு பால் காவடி எடுத்துக்கிட்டு இருப்போம்.

எனக்கும் சில நடிகர்களைப் பிடிக்கும்... அவர்களின் படங்களை பார்க்கப் பிடிக்கும்... அதற்காக சாகக்கிடக்கிறான்னு மொட்டை அடிக்கவோ, தலைவான்னு கத்திக்கிட்டு ரோட்டுல போறவங்ககிட்ட வம்பு பண்ணவோ, கட் அவுட் வச்சி நீதான் என் குலதெய்வம்ன்னு அபிஷேகம் பண்ணவோ செய்யும் கோமாளி ரசிகனாய் வாழவும் பிடிககது... அப்படி வாழ்பவர்களையும் பிடிக்காது. இவரின் படம் நல்லாயிருக்கும் என்று நினைப்பில் படம் பார்ப்பதுடன் சரி. கூத்தாடிகளைக் கொண்டாடிக் கொண்டு குடும்பத்தை திண்டாடவிடும் சாதரண தமிழ் ரசிகனைப் பார்க்கும் போது பற்றிக் கொண்டுதான் வருகிறது. என்ன செய்வது கூத்தாடிகளுக்கு அரியாசனத்தைக் கொடுத்துவிட்டு நாமெல்லாம் இன்னும் அறியாமை இருளுக்குள்தானே இருக்கிறோம்.

நாட்டுல ஒரு புயல், மழை வந்தால் போதும் நடிகர்கள் எவனும் ஒண்ணும் கொடுக்கலைன்னு நாமெல்லாம் கூப்பாடு போட ஆரம்பிச்சிடுறோம்... நாம் வாக்களித்து வெற்றி பெறச் செய்த எம்.எல்.ஏ., எம்.பி. ஏன் பஞ்சாயத்துப் போர்டு பிரசிடெண்ட், வார்டு கவுன்சிலர்ன்னு எவனையாச்சும் இதைச் செய்யலை... அதைச் செய்யலைன்னு நாம கேட்டிருக்கோமா...? அஞ்சு வருசத்துல அவன் சொத்து சேர்த்துக்கிட்டு பிச்சைக்காசு 1000, 2000த்தைக் கொடுத்ததும் மறுபடியும் நாம அவனுக்கு ஓட்டுப்போட்டு நீ மறுபடியும் சம்பாரிச்சுக்கடான்னு ஏத்தி உக்கார வச்சிடுறோம். ஆனா நடிகர்கள் எதுவும் செய்யலைன்னா குய்யோ முறையோன்னு குதிக்கிறோம். கேட்டால் கோடிகளில் புரள்கிறார்கள் என்று சொல்வோம். கோடிக்கணக்கில் சம்பாரிக்கும் எத்தனையோ பிஸினஸ்மேன்கள் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஏதாவது செய்கிறார்களா...? இங்கிருக்கும் தெய்வங்களுக்கு கூட கொடுக்காமல் திருப்பதி உண்டியலிலும், சபரிமலையிலும் கொண்டு போய் போடுவார்கள். அப்படியிருக்க நாம் நடிகர்களை மட்டுமே தொங்குவது ஏனென்று தெரியவில்லை.

ஒரு நடிகனுக்கு அது தொழில்... அவன் தொழிலில் அவனை வைத்து கோடிக்கோடியாக சம்பாரிக்க முடியும் என்ற தைரியத்தில் தயாரிப்பாளர் பணத்தைக் கொட்டுகிறார். நடிகனுக்கும் கோடிகளில் சம்பளம் கொடுக்கிறார். அளவுக்கு மீறிய வருமானம் என்றாலும் அது அவன் உழைப்புக்கான உதியம்தானே... ஒரு படத்துக்காக தன்னை வருத்தி... சாப்பாட்டில் தியாகம் செய்து... அதற்காக உழைத்து... நடித்துக் கொடுக்கிறான். அப்படியிருக்க அவனிடம் நீ அதற்கு உதவவேண்டும்... இதற்கு உதவவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கு..? ஒருவன் உதவி செய்வது என்பது அவனது தனிப்பட்ட விஷயம்... நான் உதவினேன் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு செய்வது உதவியல்ல... ஒரு லட்சம் கொடுத்தேன்... ஐந்து லட்சம் கொடுத்தேன்... என்று சொல்லி போட்டோவுக்கு போஸ் கொடுத்து கொடுப்பது எந்த வகை உதவி.... நாமெல்லாம் அடுத்தவனுக்கு கொடுப்பதென்றால் யோசிப்போம் ஆனால் நடிகன் மட்டும் நமக்கு கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுப்போம்.

கோடிக்கோடியாக சம்பாரிக்கும் எல்லாரும் ஒழுங்காக வரிக் கட்டட்டும். வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயி ஒருபுறம் இருக்க, அரசாங்கமே பண முதலைகளுக்கு கடனை தள்ளுபடி செய்கிறது. இது எந்த வகையில் நியாயம் என்று நாமெல்லாம் யோசிப்பது இல்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடவில்லை என்றால் சீனிவாசனுக்குத்தான் வருத்தம் இருக்கணுமே தவிர, அவரை விட நாம்தான் வருந்துகிறோம்... சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் நமக்கு என்ன லாபம்...? சென்னையில் போட்டி நடந்தால் நம்மிடம் டிக்கெட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டுதான் பார்க்க விடுவார்கள். இதுபோல் சினிமாவும்... குடும்பத்தைக் கவனிக்காது நடிகனுக்காக பாலபிஷேகம், பீர் அபிஷேகம் எல்லாம் நம் காசில் பண்ணினாலும் தியேட்டருக்குள் டிக்கெட் எடுத்துத்தான் படம் பார்க்கப் போகமுடியும். அப்படி இருக்க எதற்காக அவனுக்கு கொடி பிடிக்கிறோம். நமக்கு வேறு வேலை இல்லையா..? குடும்பம் இல்லையா..? குழந்தை குட்டி இல்லையா..?

நடிகர் சங்க தேர்தலை ஊடகங்கள் மிகப் பெரிய அளவில் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தன... இதனால் ஊடங்கங்களுக்கு லாபம்... நமக்கு...? நமக்கு அதனால் எள்ளளவும் லாபம் இல்லை... அவனுக கூத்தாடிங்க... அடிச்சிப்பானுங்க... கூடிப்பானுங்க... அவனுகளுக்கு கொடிப்பிடிச்சு... கொடிப்பிடிச்சே நாம ரோட்டுல கிடக்க வேண்டியதுதான்... அவன் பாரின் கார்ல பறந்துக்கிட்டு.... பஞ்சு மெத்தையில புரண்டுக்கிட்டும் இருப்பான்... முதல்ல நடிகர்கள் அதைத் தரலை... இதைத் தரலைன்னு கேட்டுக்கிட்டு நிக்கிறதை விட்டுட்டு நம்ம வாழ்க்கையைப் பார்ப்போம். அவனுக்கு கொடுக்கும் அந்த மரியாதையை நாம் விலக்கிக் கொண்டாலே அவனும் சாதாரண மனிதன் ஆகிவிடுவான். ஆனால் நாம் செய்வோமா..?

இங்கே அஜீத் வரிசையில் நின்னு ஓட்டுப் போட்டால் அது நியூஸ்... விஜய் இலவச திருமணம் செய்து வைத்தால் அது நியூஸ்... தனுஷ் வேஷ்டி கட்டினால் அது நியூஸ்.... சிம்பு காதலியை மாற்றினால் அது நியூஸ்... கமல் ஊரைவிட்டுப் போறேன்னு சொன்னா நியூஸ்... ரஜினி தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்யணுமின்னு கதைவிட்டா அது நியூஸ்... இதையெல்லாம் ஒவ்வொரு நாளும் நாமெல்லாம் செய்து கொண்டுதானே இருக்கிறோம். அதெல்லாம் நியூஸ் ஆவதில்லையே... நம் செயல்கள்... நம் வாழ்வின் முன்னேற்றம் இதில் மட்டுமே நாம் கவனம் செலுத்தினால் நாமும் நாளை நியூஸாவோம்... திரு. சகாயம் போல் நெஞ்சை நிமிர்த்தி, கூத்தாடிக்கு கூப்பாடு போடுவதை விடுத்து நம் பாதையில் நாம் பயணித்தாலே போதும் கூத்தாடிகளும் சாதரண மனிதர்கள் ஆவார்கள்.

கரகாட்டம், ஒயிலாட்டம், நாடகம் என நமது தமிழக கலாச்சாரத்தை பிரதிபலித்துக் கொண்டிருந்த கலைஞர்கள் வாழ்க்கையை ஓட்ட ஆபாசத்தின் பிடிக்குள் போய்விட்டார்கள். அவர்களில் எத்தனையோ பேர் வாழ வசதியின்றி... நலிந்து போய் இருக்கிறார்கள். அவர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யலாம்... நமது கலைகளை அழியாமல் பாதுகாக்கலாம். அதை விடுத்து நயன்தாரா வந்தால் நாளெல்லாம் வெயிலில் கிடந்து அவரைப் பார்த்ததை சாதனையாகச் சொல்லிக் கொண்டு திரிகிறோம். இந்த நிலை எப்போது மாறும்..? மாற்றம் வரும். எப்போது என்றால் இதெல்லாம் விடுத்து... நடிகனின் பின்னால் போவதை நிறுத்தி... அவன் செய்ய வேண்டும் என்று பிச்சை கேட்பதை விடுத்து நம் பாதையில் நாம் பயணிக்க கற்றுக் கொள்வோம்.

இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்... தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்யணும் செய்யணுமின்னு சொல்லியே தன்னோட படங்களை ஓட வைக்க நினைக்கும் நடிகர்கள் மத்தியில் எதுவுமே செய்யாமல் நான் சம்பாதிக்கிறேன்... எனக்கும் குடும்பம் இருக்குன்னு சொல்லுற நடிகர்கள் மேல் என்பதே என் எண்ணம். இனிமேலாவது 'தலைவா...','நாளைய தமிழகமே...','வாழ்வின் விடிவெள்ளியே...' என்றெல்லாம் கூச்சல் போடாமல் ஒதுங்கி வாழப்பழகுவோம். நாம் ஒதுங்கினால் அவர்களும் அடங்குவார்கள். நம் தமிழினத்தை ஆள இந்தக் கூத்தாடிகளுக்கு கொம்பு சீவுவதை நிறுத்துவோம்... நல்லதொரு தமிழனை விரைவில் நம்மால் அரியாசனத்தில் அமர வைக்க முடியும்... அதைச் செய்து நடிகனின் அரியாசன ஆசைக்கு முற்றுப்புள்லி வைப்போம்... இதையெல்லாம் நாம் செய்வோமா...? செய்வோமா...?

நண்பர்களே இது எனது கருத்துத்தான்... இதில் தங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம்... எதுவாக இருந்தாலும் கருத்துக்களாய் சொல்லுங்கள்... நாம் கலந்துரையாடலாம்.
-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார். (29-Nov-15, 7:46 pm)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 149

சிறந்த கட்டுரைகள்

மேலே