மன இறுக்கத்தை தளர்த்த வழிகள்

அலுவலகம், வீடு என, பம்பரமாய் சுற்றும் மக்கள், வாரத்தின் இறுதி நாளுக்காக ஏங்குவது வழக்கம். மன நிம்மதிக்காக, எங்கேயாவது செல்லலாம் என நினைப்பதற்குள், விடுமுறை நாள் ஓடிவிடும். மன இறுக்கத்தோடு, தினசரி பொழுதை கழிப்பது பெரும் வேதனை.

இதை தவிர்க்க, ரிலாக்ஸாக வேலை செய்ய, சில எளிய குறிப்புகள் இதோ:

சத்தான உணவை சாப்பிடுங்கள்: சத்தான, இயற்கையான உணவு வகைகளைச் சாப்பிடும்போது, மூளை சுறுசுறுப்பாக இருக்கும். பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட, உணவுகளைச் சாப்பிடும்போது, உடல் ஒருவித மந்தநிலையை அடைகிறது. இதனால், நாம் செய்யும் செயல்களில், சோர்வடைந்து குறிப்பிட்ட நேரத்திற்குள், பணிகளை முடிக்க முடியாத நிலை ஏற்படலாம்.

நன்றாகத் தூங்குங்கள்: நல்ல ஆழ்ந்த தூக்கம், எல்லாருக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால், களைப்புறும் உடல் உறுப்புகள், தூக்கத்தில் மட்டுமே புத்துணர்ச்சி அடைகின்றன. தூக்கம் தடைபடும் போது, உடல் நலக்குறைவு ஏற்படும். இளைஞர்களுக்கு, ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை தூக்கம் அவசியம்.

நடங்கள்… ஓடுங்கள்! தினமும், அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ, மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை, ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி, விரைந்து நடக்கலாம். இது உடல் இறுக்கத்தை, பெருமளவு தளர்த்தும்; மனம் உற்சாகம் பெறும்.

ஆரம்பத்தில், அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்ல வேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்றால் பழகிவிடும். பின், 40 வயதுக்காரர் கூட, 20 வயது இளைஞனைப்போல், உற்சாகமாக வேலை செய்யலாம்.
ஓய்வெடுங்கள்: பணியிடையே, அவ்வப்போது ஓய்வெடுங்கள்.

ஓய்வெடுத்தல் என்பது, வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான, வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம், மேம்போக்காக இருக்கும். அதனால், மூளைக்கு சரியான அளவு ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு, ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

சிரியுங்கள்: மனம் விட்டு சிரியுங்கள். மனம் விட்டு என்பதற்கு, ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது, மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக, முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி, பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது, வேறு விளைவுகளை ஏற்படுத்தும்.

எப்பொதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில், ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை கவர்ந்திழுக்கும் வல்லமை கொண்டது.

இவற்றை தொடர்ந்து செய்து வந்தால், ரிலாக்ஸ் ஆக பீல் பண்ணுவீர்கள்!

எழுதியவர் : படித்ததில் பிடித்தது - செந (4-Dec-15, 8:57 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 435

சிறந்த கட்டுரைகள்

மேலே