அசோகன் கொழும்பில இருக்கிறான்

அசோகன் கொழும்பில இருக்கிறான்...
-------------------------
தேவமுகுந்தன்
------------------------
வீடு குழம்பிப்போயிருந்தது. முதலாவது அறையை ஒதுக்கி சேந்தனின் குடும்பத்திற்குக் கொடுத்ததில், இவனது குடும்பத்தவர் எல்லோரும் இரண்டாவது அறையையே பயன்படுத்த வேண்டியிருந்தது.
இப்போது இரண்டாவது அறையிலிருக்கும் சாமான்களை எடுத்து முதலாவது அறைக்குள் அடுக்க வேண்டியுள்ளது. இனி இரண்டாவது அறையைத் துப்பரவாக்க வேண்டும்.

குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய முதுகு உளைந்தது. வியர்த்துக் கொட்டியது. அவர்களை ஊருக்கு அனுப்ப அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து இரத்மலானை விமான நிலைத்திற்குச் சென்றிருந்தான். இப்போது நித்திரை தூக்கியடிக்கின்றது. வருடாந்தம் சுமார் பத்துப் பன்னிரண்டுதரம் இப்படிப்பட்ட வேலைவந்து சேர்ந்து விடுகின்றன. மகனும் மகளும் பாடசாலைகளிலிருந்து இரண்டு மணிக்குப் பின்புதான் வருவார்கள். மனைவி வர ஐந்து மணியாகும். இந்த வேலைகளை முடித்து பத்தரைக்கு முன்பு அலுவலகத்துக்கு போய்ச் சேர்ந்தால் 'ஷோர்ட் லீ'விலை சமாளிக்கலாம். இல்லாவிட்டால் அரைநாள் லீவு போடவேண்டியிருக்கும். லீவுகள் முடிந்து கொண்டிருக்கின்றன.

வந்தவர்களை விமான நிலையத்திலிருந்து கூட்டிவர ஒருநாளும், அவர்களுடன் வங்கி, பொலிஸ் நிலையம், கடைகள் என்று திரிய இன்னொரு நாளுமாய் இரண்டு நாட்கள் 'லீ;'வெடுத்தாயிற்று. இன்னும் இரண்டு வாரத்தால் அவர்கள் திரும்பி வரும்போது, கூட்டித்திரியவும் கட்டுநாயக்காவுக்குப் போகவுமாய்; இருநாட்கள் லீவு எடுக்க வேண்டி வரலாம்.
...

அவனது வீடு ஊரிலோ வெளிநாடுகளிலோ இல்லாமல் இடையில் கொழும்பில் இருப்பதனாற்தான் இந்தச் சிக்கல். இரண்டு அறைகளையும் கூடத்தையும் சமையல் அறையையும் கொண்ட இந்த வாடகை வீட்டில் வேறு ஆட்கள் தங்குவதென்பது சிரமம்தான். பிள்ளைகளின் படிப்புக் குழம்பும். இவனது எழுத்து வேலைகள் வாசிப்புக்கள் குழம்பிப் போகும். தனிப்பட்ட சுதந்திரம் தொலைத்தவர்களாக இவர்கள் நான்குபேரும் அந்த நாட்களில் உணர்வார்கள்.

வருபவர்களை பொலீஸில் பதிவு செய்வதற்காய் அவர்களையும் வீட்டுச் சொந்தக்கார பெரேராக் கிழவனையும் கூட்டிக் கொண்டு பொலீஸ் நிலையத்திற்கு அலைய வேண்டும். பெரேராக் கிழவன் முகம் சுழிப்பான், புறுபுறுப்பான். அந்த மாத வாடகையைச் செலுத்தும் போது இரண்டாயிரமோ மூவாயிரமோ கூடுதாலாக அவனுக்கு கொடுக்க வேண்டியிருக்கும். அடுத்த மாதப் பட்டியல்கள், நீர் அளவீட்டுமானியும் மின்சார அளவீட்டுமானியும் சிக்கன எல்லைகளைத் தாண்டிச் சுற்றியிருப்பதைத் சுட்டிக் காட்டும். தொலைபேசிக் கட்டணம் உயர்திருக்கும். அடுத்த மாதச் செலவுகள் கையைக்கடிக்கும்.

இவற்றை தவிர்க்கவே அசோகன் முயற்சிக்கிறான். ஆனால் தவிர்க்க முடியாமல் தடுமாறுகிறான். வெளிநாடுகளில் இருக்கும் இவனது-மனைவியினது நெருங்கிய உறவினர்கள்-சிறுவயதில் ஒன்றாய்ப் படித்த- விளையாடிய நண்பர்கள் எந்தவொரு தொடர்புமற்று இருப்பார்கள். இலங்கைக்கு வருவதற்கு ஓரிரு வாரத்திற்கு முன்பு திடீரென தொலைபேசியில் அன்பொழுகத் கதைக்கத் தொடங்கி பின்னர் தாங்கள் இலங்கைக்கு வரும் தினம், விமானத்தின் இலக்கம் என்பவற்றைக் கொடுத்து கட்டுநாயக்காவில் வந்து தங்களைக் கூப்பிடும்படி கூறுவார்கள்.
...

மகனின் புத்தக மேசையை இழுத்து வந்து முதலாவது அறைக்குள் வைத்தவன், புத்தகங்களை அள்ளிக் கொண்டுவந்து அதில் குவித்தான். இனி மகளின் மேசையை இழுத்து வரவேண்டும். பாடசாலைகளில் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புக்களில் ஆசிரியர்கள்;, பிள்ளைகள் வீட்டுவேலைகளை ஒழுங்காகச் செய்து வருவதில்லை- வீட்டில் படித்துக் கொண்டு வருவதில்லை என இவனிடம் முறைப்பாடுகள் செய்வார்கள். இவனால் பிள்ளைகளைக் கண்டிக்க முடிவதில்லை. தனது வீட்டில் படிக்கும் சூழல்; இல்லையென்பதை ஆசிரியர்களிடம் சொல்ல இவனுக்கு வெட்கமாக இருக்கின்றது.

வருபவர்கள், தங்களுடன் இவர்கள் முழுநேரமும் இருந்து கதைக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் வீட்டில் இருக்கும்போது, மகனோ மகளோ தங்கள் வீட்டுப் பாடங்களைச் செய்வதற்காகப் புத்தகம் கொப்பிகளை எடுத்தால், 'இவரின் மகனுக்கு பெரிய லெவல் எங்களோடை சேருறான் இல்லை. எந்த நேரமும் புத்தகங்களோடை இருக்கிறான்.' என்றோ 'மகளுக்கு தான்தான் பெரிய படிப்புப் படிக்கிறா என்ற நினைப்பு, எங்களைக் கணக்கெடுக்கிறா இல்லை' என்றோ ஊரிலுள்ள உறவினர்களுக்கு சொல்வார்கள்.

'இஞ்சத்தைப் படிப்பு 'ஸ்ராண்டட்' காணாது. அங்கை என்றால்.............' என்று தங்கள் பெருமைகளை வீட்டுப்பாடம் செய்ய கொப்பியையும் பேனாவையும் எடுக்கும் பிள்ளைகளிடம் விளக்கத் தொடங்குவார்கள். பிள்ளைகள் கொப்பி, புத்தகங்களை மூடிவைத்து விட்டு கொட்டாவி விட்டபடி அவர்களின் அலட்டல்களைக் கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்க இவனுக்குத் தர்ம சங்கடமாயிருக்கும்.
...

சாப்பாட்டு மீதிகள், சிகரெட் அடிக்கட்டைகள், ரொபி மேலுறைகள்... என குப்பைகள் அறையினுள்ளே பரவியிருந்தன. அடிக்கடி கனடா நாட்டின் சுத்தத்தையும் அங்குள்ள மக்களின் பழக்கவழக்கங்களையும் பெருமைபொங்கக் கதைக்கும் அவர்களுக்கு கழிவுப் பொருட்களை குப்பைக் கூடைக்குள் இடவேண்டுமென்ற அடிப்படைப் பண்பு கூட இல்லாதது இவனுக்கு ஆச்சரியமாயுள்ளது.

இவனது குடும்பத்தவர் கொதித்தாறிய குழாய் நீரையே வழமையாகப் பருகுவார்கள். அந்த நீர் சுத்தமானதல்ல என்று சேந்தன் ஆட்கள் கருதியதால் இவன் போத்தலில் அடைக்கப்பட்ட 'மினரல் வோட்டர்' வாங்கி வைத்திருந்தான். அப்படியெல்லாம் சுத்தம் பார்த்தவர்களின் குப்பைகளை அள்ளி பெரிய கறுப்பு நிற பொலித்தீன் பையில் இட்டுக்கட்டி வெளிவாசலில் வைத்தவன், ஈரத் துணியால்; நிலத்தைச் துடைக்கத் தொடங்கினான்.

இவனது வீட்டிலுள்ளோர் வீட்டுக்குள்; காலணிகள் அணிவதில்லை. ஆனால் வெளிநாடுகளில் இருந்து வருவோர் குளியலறை, மலகூடம், சமையல் அறையென வீடு முழுதும் இறப்பர் செருப்புக்களை அணிந்தபடி திரிவார்கள். அவர்களுக்கு ஒன்றும் சொல்ல முடியாது.
...

கொழும்பையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் பிரதான பாதை மூடப்பட்ட பின்னர் வெளிநாடுகளில் வசிப்போர்;, கொழும்புக்கு வந்து 'கிளியரன்ஸ்',விமானப் பயணச் சீட்டு என்பவற்றைப் பெற்றே யாழ்ப்பாணம் செல்ல வேண்டியுள்ளது. இதற்காக அவர்கள் கொழும்பில் ஒருவாரமளவில் தங்க வேண்டியுள்ளது. அவர்களிடம் இருக்கும் வசதிக்கு பெரிய நட்சத்திர விடுதிகளில் கூடத் தங்கலாம். ஆனால் உறவினர், நண்பர்கள் வீடுகளிலேயே தங்குகின்றனர். கொழும்பில் தங்கள் தேவைகளுக்காக பல கூட்டிச் செல்ல நண்பர்கள், உறவினர்களை அழைக்க இது வசதியெனக் கருதகிறார்கள்.
...

சேந்தன் இவனது உறவினன். தூரத்து உறவுவழியில் சகோதரன் முறை. சமவயதினன். உறவினன் என்பதிலும் பார்க்க இருவரும் நண்பர்களாகவே பழகியிருக்கிறார்கள். சிறுவயதில் ஒன்றாக விளையாடித் திரிந்தவர்கள்.

சேந்தன் பத்தாம் வகுப்புக் கடைசியில் கனடா போனதன் பின்னர் அவனுக்கும் இவனுக்கும் தொடர்பறுந்து போயிருந்தது. பதினெட்டு வருடங்களாக எந்தத் தொடர்புமில்லாதிருந்த சேந்தன், திடீரென தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் அடுத்த வாரம் குடும்பத்துடன் இலங்கை வருவதாகவும் தங்களை கட்டுநாயக்காவுக்கு வந்து கூட்டிச் செல்லுமாறும் கூறி விபரங்களைக் கூறிபோது இவனால் மறுக்க முடியவில்லை.

இந்த வீட்டில் மேலதிகமாக ஒருவரை தங்க வைப்பதே சிரமமாயுள்ள போது நால்வரைக் கொண்ட சேந்தனின் குடும்பத்தினரை தங்க ஒத்துக் கொண்டது தவறெனப் புரிகின்றது. ஆனால் மறுத்திருந்தால், அசோகன் இப்ப மாறிப் போய்விட்டான் என்று சேந்தன் பலரிடம் சொல்லித் திரியலாம்.


அவனின் குடும்பம் வந்து நின்ற நாட்களில் பிள்ளைகளுக்கு தவணைப் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பரீட்சைகளுக்கு ஆயத்தப்படுத்த பிள்ளைகள் சிரமப்பட்டதை இவன் அவதானித்திருந்தான். வந்தவர்கள் நடுக்கூடத்தில் இருந்து தொலைக்காட்சியின் சத்தத்தை அதிகரித்து விட்டு கத்திக் கும்மாளமிட்டார்கள்.

சேந்தனின் குடும்பத்தவர்களுடன் புறக்கோட்டைக்குச் சென்றிருந்தான். சேந்தனும் மனைவியும் ஒவ்வொரு பொருளையும் வாங்குவதற்கு பேரம்பேசியது இவனுக்கு ஆச்சரிமாயிருந்தது.
சேந்தன் சிறுவனாக இருந்த காலத்தில் கொழும்பில் தொழில் புரிந்த தகப்பன் வங்கியொன்றில் அவனின் பெயரில் சிறுவர் சேமிப்புக் கணக்கொன்றை ஆரம்பித்திருந்தார். அந்தக் கணக்கை மூடி பணத்தை மீளப் பெற வேண்டுமென சேந்தன் இவனைக் கூட்டிக் கொண்டு கொட்டாஞ்சேனையில் இருந்த அந்த வங்கிக் கிளைக்கு வெள்ளவத்தையில் இருந்து பஸ்ஸில் சென்றான்.

தொடர்ச்சியாக பல வருடங்களாக நடவடிக்கைகள் ஏதுமற்றிருந்த அந்தக் கணக்கு அரசின் புதிய சட்டதிட்டங்களின்படி மூடப்பட்டு பணம் மத்திய வங்கிக்கு அனுப்பப்பட்டிருந்தது. அசோகன் வங்கி முகாமையாளருடன் கதைத்துப் பார்த்தான். அவர் இவனுக்கு புதிய சட்டதிட்டங்களை தெளிவாக விளக்கினார். ஆனால் சேந்தன் முகாமையாளரை ஏசியபடி வந்து, இவனை மத்திய வங்கிக்கு வருமாறு கூப்பிட்டான். அங்கு சென்றாலும் இந்த பணத்தை பெறமுடியாது என்பது இவனுக்குப் புரிந்தது. ஆனால் சேந்தன் இவனை விடுவதாயில்லை. இருவரும் அங்கு போய் அலைந்ததுதான் மிச்சம்.
...

யாழ்ப்பாணம் சென்று திரும்பியவர்கள் சற்றுக் கறுத்திருந்தார்கள். பிள்ளைகளில் வாட்டம் தெரிந்தது. யாழ்ப்பாணக் காலநிலை ஒத்துவராமல் பிள்ளைகளுக்கு வருத்தம் வந்ததாகச் சேந்தன் சொன்னான். அந்த வெக்கைக்குள்ளை எப்படித்தான் மனிஷர் சீவிக்கிறார்களோ என ஆச்சரியப்பட்டுக் கதைத்தான்.

இரண்டாம் தவணை விடுமுறை ஆரம்பித்திருந்ததால் அசோகனின் பிள்ளைகளும் சேந்தன் குடும்பத்தினருடன் காலையில் தெகிவளை மிருகக் காட்சிச்சாலைக்குச் சென்றிருந்தனர். மாலையில் அவர்களுடன் பொருட்கள் வாங்க பல கடைகளுக்கு அலைய வேண்டியிருந்தது.


யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு வந்த - கொழும்பில் வாங்கிய பொருட்களை சேந்தன் சூட்கேஸ்களில் அடுக்கிக் கொண்டிருந்தான். அவர்களது விமானம் அடுத்தநாள் காலையில் புறப்படவிருந்தது.
...

அதிகாலையில் கட்டுநாயக்கா விமான நிலைத்துக்குச் சென்று சேந்தனின் குடும்பத்தவர்களை வழினுப்பிவிட்டு வந்தான். இனி, அவர்கள் கனடா போய்ச் சேர்ந்ததை அறிவிக்க ஒருமுறை தொலைபேசி எடுக்கக்கூடும். பிறகு அடுத்தமுறை இலங்கைக்கு வருவதற்கு ஓரிரு வாரங்கள் முன்னதாக கட்டாயம் அழைப்பு எடுப்பார்கள்.


இப்போது வீட்டைச் சுத்தம் செய்ய பாடசாலை விடுமுறையில் நிற்கும் பிள்ளைகள் அசோகனுக்கு உதவினர்.

தொலைபேசி ஒலித்தது. சேந்தனின் அம்மா-இவனுக்கு தூரத்துப் பெரியம்மா கதைத்தார். சேந்தனாக்களை விமான நிலையத்துக்கு கூட்டிச் சென்ற விபரங்களை முதலில் விசாரித்து அறிந்தவர், .

'...அசோகன், நீ வடிவாக சேந்தன் ஆட்களைக் கவனிக்கேலையாம். கனகாலமாய் கொழும்பிலை இருக்கிறனி நினைத்திருந்தால் அவன்ரை 'பாங்' கணக்கை மூட உதவிசெய்திருக்கலாமாம். உன்ரை பெண்சாதி பிள்ளைகள் அதுகளோடை வடிவாய்ச் சேரேலையாம். சொந்தக்காரன் அசோகன் கொழும்பில இருக்கிறான் என்றுதானே உன்னைத் தேடி அதுகள் வருகுதுகள்....' என்று தொடர்ந்து
'மார்கழியிலை இளையவன் வசந்தன், குடும்பத்தோடை லண்டனிலிருந்து வாறான். அதுகளை ஒருக்கா கவனமாய் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி விடு ராசா' என்று முடித்தார்.

எழுதியவர் : ஈழத்து சிறுகதைகள் (26-Dec-15, 8:22 am)
பார்வை : 124

மேலே