அனைவரும் அறிந்திருக்க வேண்டிய, எளிமையான பூஜையறை டிப்ஸ்

பூத்தொடுக்க பயன்படுத்தும் நூல், நார் போன்றவற்றை காலி சோப்பு உறை, காலி ஊதுவத்தி அட்டைப்பெட்டிகளில் வைத்தால் வாசனை இல்லாத பூக்களை தொடுத்தாலும் நாரோடு சேர்ந்து பூவும் மணக்கும்.

ரோஜா, சாமந்தி பூக்களை வாங்கும் போது சில பூக்கள் காம்பில்லாமல் இருக்கலாம். எரிந்த ஊதுவத்தி குச்சியை அதன் நடுவில் செருகி படத்திற்கு வைக்கலாம்.

பெரிய அகல் விளக்குகள் நான்கைந்தை வாங்கி வைத்தால் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்க, தசாங்கம், சாம்பிராணிக் கூம்பு ஏற்ற, கையை சுட்டுக்கொள்ளாமல் கற்பூர ஆரத்தி காண்பிக்க என விதவிதமாய் பயன்படுத்தலாம்.

எலுமிச்சம் பழம் பிழியும் கருவியில் அரிசி மாவைப் போட்டு தரையில் தட்ட ஒரே மாதிரியான அழகிய சிறு கோலங்களை பூஜையறையில் போடலாம்.

டீ, காபி வைக்கும் கோஸ்டர்களின் மேல் அகல் விளக்கை ஏற்றி வைத்தால் தரையில் எண்ணெய்க்கறை படாமல் இருக்கும்.

கற்பூரத்தோடு மிளகு சேர்த்து வைத்தால் கற்பூரம் கரையாமல் இருக்கும்.

மயிலிறகை பூஜையறையில் ஒட்டினால் பல்லி தொல்லை இருக்காது. மேலும் தேவதைகளை ஆகர்ஷணம் செய்யும் சக்தி மயிலிறகிற்கு உண்டு.

பூஜையறை விளக்கை எண்ணெய் இல்லாமல் தானாகவே அணையவிடக்கூடாது. பூஜை முடிந்த பின் சிறிது நேரம் கழித்து, பெண்கள் மலர் கொண்டு விளக்கை அணைக்கலாம்.

மணமுள்ள பூக்களால் பூஜை செய்தால் அடுத்த நாள் அந்த மலர்களை வீணாக்காமல் காயவைத்து சீயக்காயோடு சேர்த்து அரைத்தால் மணமுள்ள சீயக்காய் தயாராகிவிடும்.

மழை நாட்களில், பூஜையறை தீபமேற்றும் தீப்பெட்டி நமுத்துப் போகாமல் இருக்க அதனுள் நான்கு அரிசி மணிகளைப் போட்டு வைக்கவும்.

பூஜையறையின் கதவுகளில் சிறு சிறு மணிகளைக் கட்டி வைத்தால் திறக்கும்போதும், மூடும் போதும் இனிமையான மணியோசையை நற்சகுனமாகக் கேட்டு மகிழலாம்.

ஊதுவத்தியை தண்ணீரில் நனைத்து பின் ஏற்றிவைக்க, ஊதுவத்தி நிறைய நேரம் எரிந்து மணம் பரப்பும்.

வெளியூருக்குச் சென்றால் ஒரு கிண்ணத்தில் அரிசி-துவரம் பருப்பு, மறு கிண்ணத்தில் நல்ல தண்ணீரையும் பூஜையறையில் வைத்து விட்டுச் செல்ல வேண்டும். தெய்வங்களை பட்டினி போடக்கூடாது என்பது ஐதீகம்.

காலையிலும் மாலையிலும் கோதூளி லக்னம் எனப்படும் 5-6 மணிக்கு பூஜையறையில் விளக்கேற்றுவது மிகவும் நல்லது. அப்போது வீட்டின் வாசலுக்கு வெளியேயும் விளக்கேற்றி வைத்தால் தேவதைகளின் ஆசி கிட்டும்.

வியாழக்கிழமையன்றே பூஜைக்கான பொருட்களை தேய்த்து சுத்தம் செய்து, விளக்குகளுக்கு குங்குமம் இட்டு, திரிபோட்டு வைத்தால் வெள்ளிக்கிழமை பூஜைக்கு உதவியாக இருக்கும்.

ஆணி இல்லாத படத்திற்கு பூ வைக்க ஆசையா? பால்பாய்ன்ட் பேனா மூடியை சலஃபன் டேப் கொண்டு படத்தின் பின் தலைகீழாக ஒட்டவும். இப்போது பேனா மூடியினுள் காம்பைச் செருகி பூ வைக்கவும்.

பாத்திரம் கழுவ உதவும் க்ளீனிங் திரவம் தீர்ந்த பின் அந்த பாட்டிலில் விளக்கேற்ற உதவும் எண்ணெயை ஊற்றி வைத்துக் கொண்டால் விளக்குகளுக்கு சிந்தாமல் எண்ணெய் ஊற்றலாம்.

அஞ்சறைப் பெட்டியில் மஞ்சள்தூள், குங்குமம், அட்சதை, கற்பூரம், வாசனைப்பொடி, தீப்பெட்டி போன்றவற்றை போட்டு வைத்தால் இடம் அடைக்காமல் இருக்கும்.

பூஜையறையில் ஒரே அளவுள்ள படங்களை மாட்டினால் பார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் எளிதாக இருக்கும்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (1-Jul-16, 7:21 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 153

சிறந்த கட்டுரைகள்

மேலே