நிச்சயமாக இவைகள்

இழந்த காதலை
மீட் டெடுப்பது

பரந்த புல்வெளியில்
பாடித் திரிவது

பழம் மிகு சோலையில்
பறித்துத் தின்பது

பயங்கர பள்ளத் தாக்கில்
வீழ்ந்து கிடப்பது

உயரப் பறந்து
விட்டத்தைப் பிடிப்பது

மிரட்டும் மிருகங்கள்
துரத்தி வருவது

அருகில் வந்ததும்
ஆவியாய் மறைவது

கட்டு கட்டாய் ரூபாய்களை
காற்றில் விடுவது

கற்றவர்களை விட மிக
அறிவாளியாய்த் தெரிவது

உலகத் தோரிடை
உயர்ந்தோன் ஆவது

நாட்டைக் கெடுக்கும்
தீங்கினை அழிப்பது

கவிதைகள் ஆயிரம் கண்
இமைப்பில் புனைவது

கம்பனும் வள்ளுவனும் முன்
கை கட்டி நிற்பது

நோய்கள் யாவையும்
நொடியில் மறைவது

மறைந்த சொந்தங்களுடன்
மனம்விட்டுப் பேசுவது

சுற்றத்துக் கெல்லாம்
சுகபோகம் தருவது

சொன்னதைக் கேட்காவிடில்
வெட்டி மாய்ப்பது

கொலைப் பழிக்கஞ்சி
திடுக்கிட் டெழுவது

நிச்சயம் இவைகள்
கனவின் வசதியில்..............

---- முரளி

எழுதியவர் : முரளி (14-Jul-16, 8:50 am)
பார்வை : 377

மேலே