மனதில் கல்வெட்டாக நிலைத்து இருப்பவர் தியாகி ஜெகந்நாதன்,

நூறாண்டு கண்டு நிறைவாழ்வு வாழ வேண்டும்’ என வாழ்த்துவது உண்டு. ஜெகந்நாதனை அப்படி ஏழைகள் பலர் வாழ்த்தி இருக்கக்கூடும். மக்களுக்குச் சேவைசெய்து நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்திருக்கிறார் அவர். இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு மக்கள் மனதில் வாழ்வார் என்பதும் நிச்சயம்.

இன்றைய சினிமா, அரசியல் ஃப்ளெக்ஸ் போர்டு​களுக்கு மத்தியில் இத்தகையவர் சற்றே மறக்கடிக்கப்பட்டாலும் என்றும் மக்கள் மனதில் கல்வெட்டாக நிலைத்து இருப்பவர்கள் இது போன்ற தியாகிகள்தான்.


ஜெகந்நாதன், கடந்த 13-ம் தேதி திண்டுக்கல் அருகேயுள்ள காந்தி கிராம கஸ்தூரிபா மருத்துவமனையில் இறந்தார். தேசத் தலைவர் வினோபா பாவேவுடன் இணைந்து பூமிதான இயக்கத்தை வழிநடத்திய இவர், காந்தியக் கொள் கையால் ஈர்க்கப்பட்டு தனது வாழ்க்கை முழுவதும் கடைநிலை மக்களுக்காகவே பாடு​பட்டார். சமூக சேவைக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றவர். அசேபா என்ற பெயரில் இவர் நிறுவிய இயக்கம் இந்தியா முழுவதும் தனது கிளையைப் பரப்பி சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

ஜெகந்நாதனுடன் 40 ஆண்டு காலம் இணைந்து பணியாற்றியவரும் அவரது நண்பருமான காந்தி​கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் நம்மிடம் பேசினார். ”ஜெகந்நாதன் ஒவ்வொரு வினாடியும் உண்மையான காந்தியவாதியாக வாழ்ந்தவர். இப்போது அவருக்கு வயது 100. வினோபா பாவே ‘பூமிதான’ இயக்கத்தை ஆரம்பித்ததும் முதல் ஆளாக அதில் தன்னை இணைத்துக்கொண்டவர். அவரோடு சேர்ந்து பல சமூகப் பணிகளில் நானும் பங்கெடுத்து இருக்கிறேன். எந்த வேலையை செய்தாலும் தூய உள்ளத்தோடு, ஈடுபாட்டோடு செய்வதுதான் அவரு டைய சிறப்பு.

1968-ம் வருஷம் கீழ்வெண்மணி வன்கொடுமை சம்பவம் நடந்ததைக் கேள்விப்பட்டு உடனடியாக அந்தக் கிராமத்துக்குப் போய்விட்டார். அந்த மக்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக மிகவும் பாடுபட்டார். ‘லாஃப்டி’ என்னும் ஓர் இயக்கத்தை ஆரம்பித்துப் பல போராட்டங்களை நடத்தினார். அதனுடைய விளைவாக ஏழை விவசாயிகளுக்கு இலவச நிலம் கிடைத்தது. தொடர்ந்து பல வருஷம் அந்தப் பகுதியிலேயே தங்கி இருந்தார். தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்று நிர்மாணப் பணிகளை செய்தார்.

ஒரு சமயம், திருப்பத்தூர் பகுதியில் நக்சல் நடமாட்​டம் இருப்பதாகச் சொல்லி அப்பாவி மக்களை எல்லாம் போலீஸ்காரர்கள் அடித்துத் துன்புறுத்தினர். அதைக் கேள்விப்பட்டு அந்தப் பகுதிக்குப் போய் மக்களோடு சேர்ந்து போராடினார். அப்போது இவரையும் போலீஸ்காரர்கள் அடித்தனர். அந்த விஷயம் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆருக்கு எப்படியோ தெரிந்துபோனது. தாக்கிய போலீஸ்காரர்கள் மீது கடும் கோபம் கொண்டார். உடனே, ஜெகந்நாதனை விடுவித்து ஆறுதல் கூறியதோடு, ‘உங்கள அடிச்ச போலீஸ்​காரங்க மேல நடவடிக்கை எடுக்கிறேன்’னு சொன் னார். அதற்கு ஜெகந்நாதன், ”வேண்டாம். அந்தப் போலீஸ்காரங்க தெரியாம அடிச்சுட்டாங்க. அவங்களை மன்னிச்சுடுங்க’னு சொல்லி விட்டார். மனிதநேயம் மிக்கவர் ஜெகந் நாதன் என்பதற்கு இதுபோன்ற நிறைய சம்பவங்களைச் சொல்லலாம்.

அவரைப் போலவே அவருடைய மனைவி கிருஷ்ணம்மாளும் தன்னை சமூகப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்​டவர். பூமிதான இயக்கத்துக்காகக் கிராமம் கிராமமாக நடந்தே போய் பெரும் பண்ணையார்களிடம் நிலங்களை வாங்கி ஏழைகளுக்குக் கொடுத்தனர். பெரும் நிலச்சுவான்தார்கள் சில இடங்களில் இவர்களை மிரட்டியும் அவமானப்படுத்தியும் துரத்தி​னர். பொறுமையாக இருந்து பண்ணை​யார் களிடம் ஏழைகளின் நிலைமையை எடுத்துச் சொல்லி நிலங்களைத் தான​மாகப் பெற்றனர். பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை இவர்கள் தானமாகப் பெற்று ஏழைகளுக்கு வழங்கினர். தமிழ்நாட்டில் பூமிதான இயக்கத்தை செயல்படுத்தியதில் ஜெகந்நாதனோட உழைப்பு மறக்க முடியாதது. இந்திராகாந்தி ஆட்சியில பீகார் மக்களோட வாழ்க்கை மேம்​பாட்டுக்காக அந்தப் பகுதிக்குப் போய் நிர்மாணப் பணிகளை செய்துகொண்டு இருந்தார். ஏழை மக்களுக்கு கல்வி, மருத்துவம் மாதிரியான விஷயங்களை இவர் கொடுக்க ஆரம்பித்தது அங்கு இருந்த சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால், போலீஸை வைத்து அடித்தனர். அப்போது அவருடைய கண்ணில் அடிபட்டு பார்வை பாதிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் இறால் பண்ணைப் போராட்டம் வெடித்தது. அந்தப் போராட்டம், வழக்கு என்று வெயிலில் அலைந்தார். ஆபரேஷன் செய்த கையோடு வெயிலில் போகாதீர்கள் என்று டாக்டர் சொல்லியும் கேட்காமல் அலைந்ததில் பார்வை கொஞ்சம் மங்கிப் போனது. தன்னோட வாழ்க்கையில் எந்த இடத்திலும் தனக்காக வாழாமல் சமூகத்துக்காக வாழ்ந்த மகான் அவர். தாய், தந்தை இல்லாத குழந்தைகளுக்காக மூன்று இடங்களில் ஹாஸ்டல் ஆரம்பித்தார். இன்றும் அதில் நூற்றுக்கணக்கான பிள்ளைகள் தங்கிப் படிக்கிறார்கள். கடைசிக் காலத்தில் பார்வை மங்கி, காது கேட்காமல் கஷ்டப்பட்டார். காந்தி கிராம ஆஸ்பத்திரியில்தான் சிகிச்சை எடுத்துக் கொண்டார். அவருடைய மரணம் ஏழை மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத பெரிய இழப்பு” என்றார் சோகமாக.

நம்மோடு வாழ்ந்த காந்தி மறைந்து​விட்டார்!

– தமிழ்மகன், ஆர்.குமரேசன்

நன்றி : விகடன்

எழுதியவர் : (27-Jul-16, 7:54 pm)
பார்வை : 78

மேலே